திருவள்ளூர், மார்ச் 5- சென்னை எண்ணூர் பகுதியில் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கோயில் பூசாரிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருவள்ளூர் போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.
சென்னை எண்ணூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜன் (70). கோயில் பூசாரியான இவர், கடந்த 2025ஆம் ஆண்டு ஜனவரி 5ஆம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், எண்ணூர் அனைத்து மகளிர் காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ராஜனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணை திருவள்ளூர் மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அரசு தரப்பில் வழக்குரைஞர் புவனேஸ்வரி ஆஜராகி வாதாடினார். அனைத்துத் தரப்பு விசாரணைகளும் முடிவடைந்த நிலையில், நேற்று முன்தினம் (3.3.2026) இந்த வழக்கில் நீதிபதி உமாமகேஸ்வரி தீர்ப்பளித்தார்.
குற்றம் சாட்டப்பட்ட ராஜன் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது. இதற்காக அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.10,000 அபராதம் விதிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு தரப்பில் ரூ.2 லட்சம் நிவாரண நிதி வழங்கப்பட வேண்டும். நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து, குற்றவாளி ராஜனை எண்ணூர் அனைத்து மகளிர் காவல் துறையினர் பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் சென்று புழல் சிறையில் அடைத்தனர்.
‘உபா’ சட்டத்தில் கைது செய்யப்பட்ட
மாணவர்களை விடுதலை செய்யக்கோரி கையெழுத்து இயக்கம்!
சென்னை, மார்ச் 5– ‘உபா’ சட்டத்தில் கைது செய்யப்பட்டு விசாரணை இன்றி சிறை வைக்கப்பட்டுள்ள மாணவர்களை விடுதலை செய்யக் கோரி, தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில், கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத செயல்பாடு தடுப்பு (உபா) சட்டத்தில் கைது செய்யப்பட்டு விசாரணை இன்றி சிறை வைக்கப்பட்டுள்ள உமர் காலித் ஷார்ஜீல் இமாம் ஆகியோரை விடுதலை செய்ய கோரியும், வழக்குகளை ரத்து செய்ய கோரியும், தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில், கையெழுத்து இயக்கம் தொடக்க நிகழ்ச்சி சென்னையில் நேற்று (4.3.2026) நடைபெற்றது. இதில், குழுவின் தலைவர் நூர்முகமது. தமிழ்நாடு சிறு பான்மையினர் நல ஆணைய முன்னாள் தலைவர் பீட்டர் அல் போன்ஸ், மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல் லா, முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி அக்பர் அலி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து, அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக இந்தியாவில் மிகப் பெரிய போராட்டங்கள் தொடர்ச்சியாக நடைபெற்றது. இந்நிலையில், 2020ஆம் ஆண்டு டில்லியில் நடைபெற்ற போராட்டத்தில் திடீரென வன்முறை வெடித்தது.
இந்த வன்முறை சம்பவத் துக்கு காரணமானவர்கள் என கூறி, பல்கலைக்கழக மாணவர்கள் உமர் காலித், ஷார்ஜீல் இமாம் ஆகியோர் உபா சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். அவர்களை விடுதலை செய்யக்கோரி இந்தக் கையெழுத்து இயக்கம் நடத்தப்படுகிறது என்றனர்.
