தாய் மொழியான தமிழை அழிக்க நினைக்கும், ஆரிய – சமஸ்கிருதப் பண்பாட்டுப் படையெடுப்பினை எதிர்க்க, ஓரணியில் திரண்டு நின்று, வென்று காட்ட, சூளுரைக்கும் சுயமரியாதை – தன்மானச் சிங்கங்களாவோம் என்று உலகத் தாய்மொழி நாளில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.
இன்று (21.2.2026) ‘உலகத் தாய் மொழி நாள்.’
‘தாய்மொழி’ என்று நாம் பெருமைப்படும்போது, தாயை வாழவிடாமல், தாயைப் பழித்த – பழிக்கும் ஒரு கலாச்சார நாகரிக படையெடுப்பைத் தடுத்து நிறுத்தவே, தந்தை பெரியாரின் கவலை நிறைந்த பதைபதைப்பு மிகுந்த உணர்வுதான் அவரது மொழி – பண்பாட்டுப் பாதுகாப்பு போராட்டங்களுக்கு அடித்தளமானது!
அறிவாசனின் புதுமைக் கருத்துகளும் –
இன எதிரிகளின் திசை திருப்பலும்!
நம் தாய்மொழியாம் தமிழ்மொழி – ‘மூத்த மொழி’ என்பது பெருமைக்குரியது என்றாலும், முன்னேற்றம், வளர்ச்சி பெருகும் இன்றைய தொழில்நுட்ப வேகத்திற்கு ஈடுகொடுத்து, அதையும் முந்திச் செல்லும் வகையில், அம்மொழி பேசும் மக்களின் முன்னேற்றத்திற்கு உதவிடவும், தூண்டுகோலாகவும் இருக்கவேண்டும். பண்பாட்டுப் படையெடுப்பை எதிர்க்கும் வல்லமையும் அதற்குப் போதிய அளவில் தேவை என்பதை மனதிற்கொண்டே வடமொழித் திணிப்புப்போராட்டத்திற்கு கால்கோள் இட்ட நம் அறிவாசான் தந்தை பெரியார், பல புதுமைக் கருத்து களைக் கூறியதை நம் இன எதிரிகள் திசை திருப்பினர்.
‘‘மொழி என்பது ஒரு போர்க் கருவிபோல் அதன் கூர்மை மழுங்காமல் என்றும் இருக்கவேண்டும்; அறிவியல் வளர்ச்சிக்கும், புதுமைப் புரட்சிக்கும் அடிகோலுவதாகவும் இருக்கவேண்டும்’’ என்றே கூறினார்.
தந்தை பெரியாரின் தமிழ் எழுத்துச் சீர்திருத்தால்தானே, இன்றைய கணினி யுகத்தில் சீரிளமைத் தமிழாகப் பயன்படுகிறது.
அய்யாவும், திராவிட இயக்கத்தவரும்தானே
களம் கண்டனர்!
தமிழ் ‘‘நீஷ பாைஷ’’, தமிழைப் பேசினால் ‘‘தீட்டு’’ ஆகிவிடும் என்றெல்லாம் செய்யப்பட்ட அவமானத்தைத் துடைக்க அய்யாவும், திராவிட இயக்கத்தவர்களும் தானே களம் கண்டனர், மறுக்க முடியுமா?
எனவே தோழர்களே,
தாய்மொழி தமிழை, ‘செம்மொழி எம்மொழி’ என்று பெருமையோடு, அதனை பலப்படுத்திட, சமத்துவ சம உரிமைக் கருவியாக்கிட, தக்க வகையில் ‘‘வளப்படுத்திட – பலப்படுத்திட’’ வேண்டாமா?
அதைத்தான், முதிர்ந்த அனுபவ முழுப் பகுத்தறிவு வாதியாக இருந்து முழங்கினார் நம் அறிவாசான் தந்தை பெரியார். அவர் வழி திராவிட இயக்கச் செம்மல்களும், இன்றைய ‘திராவிட மாடல்’ ஆட்சியின் முதலமைச்சரும் ஆக்கப்பூர்வமாகத் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர்.
எனவே, தாய்மொழி நாளில், தாய் மொழியான தமிழை அழிக்க நினைக்கும் ஆரிய – சமஸ்கிருதப் பண்பாட்டுப் படையெடுப்பினை எதிர்க்க, ஓரணியில் திரண்டு நின்று, வென்று காட்ட, சூளுரைக்கும் சுயமரியாதை – தன்மானச் சிங்கங்களாவோம்!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
தஞ்சை
21.2.2026
