ஜோசப் பிரீஸ்ட்லி: அறிவியலால் மனிதநேயம் காத்த பகுத்தறிவாளரின் நினைவு நாள் (6.2.1804)
நவீன மருத்துவ உலகில் இன்று ஆக்சிஜன் சிலிண்டர்கள் இன்றி ஒரு உயிர் காக்கும் சிகிச்சையை நினைத்துக் கூட பார்க்க முடியாது. காற்றில் உள்ள அந்த உயிர்நாடியான ஆக்சிஜனைத் (Oxygen) தனியாகப் பிரித்தெடுத்து, அது மனிதகுலத்திற்குப் பயன்படக் காரணமாக இருந்தவர் அறிவியலாளர் ஜோசப் பிரீஸ்ட்லி.
பகுத்தறிவும் – தேடலும்
ஜோசப் பிரீஸ்ட்லி ஒரு தீவிரமான பகுத்தறிவுச் சிந்தனையாளர். எதையும் கண்ணை மூடிக்கொண்டு நம்பாமல், “ஏன்? எதற்கு? எப்படி?” என்று கேள்வி கேட்டு, அதற்கான காரண காரியங்களை ஆராய்வதே அவரது குணமாக இருந்தது. இந்தத் துணிச்சலான பகுத்தறிவுச் சிந்தனைதான், அன்றைய காலகட்டத்தில் நிலவி வந்த மூடநம்பிக்கைகளை உடைத்து, அறிவியலில் புதிய மைல்கற்களை எட்ட அவருக்கு உதவியது.
அறிவியல் சாதனைகள்
உயிர்க் காற்று: 1774-ஆம் ஆண்டில் அவர் செய்த சோதனைகள் மூலம் ஆக்சிஜனைக் கண்டறிந்தார். இன்று மருத்துவமனைகளில் மருத்துவப் பயனாளர்களின் உயிர் காக்கும் ஆக்சிஜன் உருளைகளுக்கு அடிப்படை இவரது கண்டுபிடிப்பே.
சோடா நீர்: இன்று நாம் பருகும் கார்பன்-டை-ஆக்சைடு கலந்த சோடா நீரைக் (Carbonated Water) கண்டுபிடித்தவரும் இவரே.
வாயுக்களின் தந்தை: ஆக்சிஜன் மட்டுமின்றி நைட்ரஸ் ஆக்சைடு, அம்மோனியா உள்ளிட்ட பல வாயுக்களைக் கண்டறிந்து வேதியியல் துறையில் புரட்சியை ஏற்படுத்தினார்.
மாற்றுக் கருத்துக்களும் –போராட்டமும்
மதக் கோட்பாடுகளையும், அதிகார வர்க்கத்தின் கருத்துகளையும் பகுத்தறிவு கொண்டு அவர் கேள்வி கேட்டதால், பலமுறை கடும் எதிர்ப்புகளைச் சந்தித்தார். அவரது ஆய்வகமும், வீடும் கூட எரிக்கப்பட்டன. இருப்பினும், தனது கொள்கைக்காகவும் உண்மைக்காகவும் அவர் ஒருபோதும் பின்வாங்கவில்லை.
பொன்மொழி
“ஒவ்வொரு புதிய கண்டுபிடிப்பும் அறிவியலின் எல்லையை விரிவுபடுத்துகிறது; அது நமது அறிவின் எல்லையற்ற தன்மையை நமக்கு உணர்த்துகிறது. எந்தக் கருத்தையும் அலசி ஆராய்ந்து ஏற்றுக்கொள்ள வேண்டும். குட்டையைப் போல் இருக்காமல், ஆற்று நீரைப் போல் நமது சிந்தனைகள் புதியவைகளைத் தேடி ஓட வேண்டும்.”
இது போன்ற அறிவியல் தேடல் குறித்து அவர் கூறிய புகழ்பெற்ற வரிகள் இன்றும் நம் சிந்தனையைத் தூண்டுபவை. அவரது நினைவு நாள் இன்று (6.2.1804)
