சென்னை, ஜன. 29- தமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதித்தேர்வு (டிஇடி) எழுதும் தேர்வர்களுக்கான குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண்களைக் குறைத்து தமிழ்நாடு அரசு புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இதன் மூலம் பல்லாயிரக்கணக்கான தேர்வர்கள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாகப் பணியில் சேர ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயமாகும். தாள்-1 மற்றும் தாள்-2 என இரண்டு நிலைகளில் 150 மதிப்பெண்களுக்கு இந்தத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.
இதுவரை பொதுப்பிரிவினருக்கு 60 சதவீதம் (90 மதிப்பெண்) மற்றும் இதர பிரிவினருக்கு 55 சதவீதம் (82.5 மதிப்பெண்) தேர்ச்சி மதிப்பெண்ணாக இருந்தது.
தற்போது மாற்றப்பட்டுள்ள புதிய நடைமுறை பின்வருமாறு:
பொதுப்பிரிவினர்: எவ்வித மாற்றமுமின்றி தொடர்ந்து 60 சதவீதம் (90 மதிப்பெண்கள்) பெற வேண்டும்.
பிசி, பிசி (முஸ்லிம்), டிஎன்சி மற்றும் எம்பிசி, மாற்றுத் திறனாளிகள்: இவர்களுக்கான தேர்ச்சி மதிப்பெண் 55 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக (75 மதிப்பெண்கள்) குறைக்கப்பட்டுள்ளது.
எஸ்சி, எஸ்சி (எ) மற்றும் எஸ்டி பிரிவினர்: இவர்களுக்கான தேர்ச்சி மதிப்பெண் 55 சதவீதத்திலிருந்து 40 சதவீதமாக (60 மதிப்பெண்கள்) கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த 11.08.2025 அன்று வெளியிட்ட அறிவிப்பின்படி நடத்தப்பட்ட தேர்வுகளுக்கும் இந்த புதிய தகுதி மதிப்பெண் சலுகையைப் பின்பற்றுவதற்கு தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அரசாணை வெளியிடப்பட்டுள்ளதால், நூலிழையில் வாய்ப்பை இழந்த தேர்வர்கள் தற்போது மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த அதிரடி மாற்றத்தின் மூலம் சமூக நீதியை நிலைநாட்டவும், காலிப்பணியிடங்களை விரைவாக நிரப்பவும் வழிவகை செய்யப்பட்டுள்ளதாகக் கருதப்படுகிறது.
ஆசிரியர் தகுதித்தேர்வு தேர்ச்சி மதிப்பெண் குறைப்பு தமிழ்நாடு அரசு உத்தரவு!
Leave a Comment
