
காரைக்குடி, சன. 19- சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் பகுத்தறிவுகொள்கையுடன் 4 தலைமுறை சுயமரியாதைக் குடும்பமாகவும், தந்தை பெரியார் அவர்கள் முதன்முதலாக மலேயா நாட்டிற்கு பயணம் சென்ற போது அங்கிருந்த தமிழர்களுடன் பெரியார் அவர்களை வரவேற்று இயக்கத்தை கட்டமைத்ததில் முன்னணி வீரராக இருந்தவரும், தென்மாப்பட்டு”வைக்கம் வீரர்படிப்பகம்” தோற்றுவித்தவரில் ஒருவராகவும் இருந்தவர் மறைந்த அய்யா.நா.பள்ளிகொண்டான் அவர்கள். பின்நாளில் ஒருங்கிணைந்த இராமநாதபுரம் மாவட்ட திராவிடர் கழக தலைவர் சிவகங்கை இரா.சண்முகநாதன்,மாவட்ட செயலாளர் காரைக்குடி என்.ஆர்.சாமி ஆகியோரோடு களப்பணியில் தீவிரமாய் இயங்கியவர் அய்யா நா.பள்ளிகொண்டான் அவர்கள். அன்னாரது மகனும், தமிழ்நாடு அரசு மின்வாரியத்தில் அலுவலராக பணியாற்றி ஓய்வு பெற்றவருமான மேனாள் திருப்பத்தூர் பகுத்தறிவாளர் கழகத்தலைவரும் ப.கண்ணன் (வயது 73) அவர்கள் நேற்று முன்தினம் (சன-17) இயற்கை எய்தினார்கள். இவருக்கு க.கலைமணி என்ற இணையரும், அறிவுச்சுடர், கண்ணகி, பிருந்தா ஆகிய மகள்களும் உள்ளனர்.
செய்தியறிந்து சனவரி- 18 அன்று காலையில் சிவகங்கை மாவட்ட தி.மு.கழக செயலாளரும் தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை அமைச்சருமான கேஆர். பெரியகருப்பன் அன்னாரது உடலுக்கு மாலை வைத்து இறுதி மரியாதை செய்தார். தொடர்ந்து சிவகங்கை, காரைக்குடிமாவட்ட கழக சார்பில் காரைக்குடி மாவட்ட காப்பாளர் சாமிதிராவிடமணி, சிவகங்கை மாவட்ட துணைத் தலைவர் திருக்கோட்டியூர் ஜெ.தனபாலன், சிவகங்கை மாவட்ட செயலாளர் காளாப்பூர். பெரு.இராசாராம், திருப்பத்தூர் சீரிய பகுத்தறிவாளர் தென்மாப்பட்டு சிவ.மதியழகன், சுண்டக்காடு தமிழ்மாறன் ஆகியோர் மாலை வைத்து இறுதி மரியாதையுடன் வீர வணக்கம் செய்தனர். அன்னாரது உடல் எவ்வித மூடச்சடங்குகள் இல்லாமல் இறுதி நிகழ்வுகள் நடந்தததோடு 4 ஆம் தலைமுறை கொள்ளுப்பெயரன்கள் வரை கருப்புச்சட்டையுடன் அணிந்து வீரவணக்கம் செய்தது குறிப்பிடத்தக்கது.
மறைந்த ப.கண்ணன் அவர்கள் தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் அவர்களின் அலுவலக மேலாளராக திறம்பட நேர்மையுடன் பணியாற்றி அமைச்சர் அவர்களின் பாராட்டையும் சிறப்பையும் பெற்றவர் ஆவார்.
