சென்னை, ஜன.13– கடல் நம்மை பிரித்தாலும் மொழியும், இனமும் நம்மை உணர்வால் இணைக்கிறது என அயலகத் தமிழர் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை நந்தம்பாக்கத்தில் நேற்று (12.1.2026) அயலக தமிழர் தின விழாவில் முதலமைச்சர் உரையாற்றினார்.
அதில், மொழி, இனம் நம்மை உணர்வால் இணைக்கிறது. உலகின் பல நாடுகளிலும் இந்தியாவில் மற்ற மாநிலங்களிலும் தமிழர்களாகிய நீங்கள் பல முக்கிய பொறுப்புகளில் இருக்கிறீர்கள். நாம் யாராலும் பிரிக்க முடியாத சொந்தங்கள், இது பல்லாண்டு கால சொந்தம். கடல் நம்மை பிரித்தாலும் மொழியும், இனமும் நம்மை உணர்வால் இணைக்கிறது.
முதலமைச்சர் புகழாரம்
70 நாடுகளில் இருந்தும், பல மாநிலங்களில் இருந்தும் தமிழர்கள் வந்திருக்கிறார்கள். நாம் அனைவரும் தமிழ் சொந்தங்கள், தமிழின சொந்தங்கள். வாய்ப்புகளுக்காக பறந்து சென்றவர்கள் உங்களது முன்னோர்கள், அந்தந்த நாடுகளை பலப்படுத்த சென்றவர்கள் என்றே சொல்லலாம்.
அயலகத் தமிழர் நலனுக்கு ஏராளமான திட்டங்கள்
வெளிநாடுகளில் இருந்தாலும் அயலகத் தமிழர்கள் தமிழ்நாட்டை மறக்கவில்லை. திராவிட மாடல் அரசு அமைந்த பிறகு அயலகத் தமிழர் நல வாரியம் அமைக்கப்பட்டது. ஜனவரி 12ஆம் தேதியை அயலகத் தமிழர் நாளாக கொண்டாடி வருகிறோம்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் நேற்று (12.1.2026) நந்தம்பாக்கம், சென்னை வர்த்தக மய்யத்தில் நடைபெற்ற அயலகத் தமிழர் தினம் 2026 விழாவில், ஆஸ்திரேலியாவில் உள்ள பெரியார் –- அம்பேத்கர் சிந்தனை அமைப்பின் தலைவர் டாக்டர் மகிழ்நன் அண்ணாமலை அவர்களுக்கு தமிழ் மாமணி விருதினையும், டாக்டர் முகமது ஹனிபா பின் அப்துல்லா அவர்களுக்கு கல்வித் துறையில் சிறந்து விளங்கும் தமிழர்களுக்கான கணியன் பூங்குன்றனார் விருதினையும், சரவணன் பத்மநாதன் மற்றும் செந்தில்குமார் இராமலிங்கம் ஆகியோருக்கு சமூக மேம்பாட்டுப் பிரிவுக்கான கணியன் பூங்குன்றனார் விருதுகளையும், கோகிலவாணி பிரகாஷ்தேவன் அவர்களுக்கு மகளிர் பிரிவுக்கான கணியன் பூங்குன்றனார் விருதினையும், டாக்டர் அன்சாரி வாகித் அவர்களுக்கு வணிகப் பிரிவுக்கான கணியன் பூங்குன்றனார் விருதினையும், பேராசிரியர் திருமலைசாமி வேலவன் அவர்களுக்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பிரிவுக்கான கணியன் பூங்குன்றனார் விருதினையும், மரு. கபிலன் தர்மராஜன் அவர்களுக்கு மருத்துவப் பிரிவுக்கான கணியன் பூங்குன்றனார் விருதினையும், வேர்களைத் தேடி திட்டம் மூலம் தமிழ் நாகரிகம், கலாச்சாரம் மற்றும் பண்பாடு ஆகியவற்றை அயலகத்தில் வாழும் தமிழருக்கு கொண்டு செல்லும் பணியை சிறப்பாக ஆற்றி வரும் தீபா ராணி (அ) சாவ்சூ தூசார் அவர்களுக்கு சிறந்த பண்பாட்டுத் தூதுவர் (வேர்களைத் தேடி) விருதினையும் வழங்கி சிறப்பித்தார். இவ்விழாவில், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் எஸ்.எம்.நாசர் உள்ளிட்ட அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம், பொதுத் துறை செயலாளர் ரீட்டா ஹரீஷ் தக்கர் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
105 முகாம்களில் வாழக்கூடிய இலங்கைத் தமிழர்களுக்காக 7419 வீடுகள் கட்டித் தர திட்டமிட்டு படிப்படியாக கட்டித் தருகிறோம். வெளிநாடு வாழ் தமிழர்களுக்காக கட்டணமில்லா உதவி மய்யம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. உக்ரைன், இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளில் இருந்து 3 ஆண்டுகளில் 2,398 தமிழர்களை மீட்டுக்கொண்டு வந்துள்ளோம். அயலகத் தமிழர்களுடனான உறவு தொடர வேண்டும் என்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். இலங்கைத் தமிழ் பிரதிநிதிகளின் கோரிக்கையை ஏற்று பிரதமருக்கு கடிதம் எழுதினேன். இலங்கையில் அறிமுகமாக உள்ள புதிய அரசியலமைப்பு சட்டத்தால் அங்குள்ள தமிழர்கள் பாதிக்கப்படுவர். நமது கோரிக்கையை இலங்கை அரசிடம் கூறி இந்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறேன்.
அயலகத் தமிழர்களிடம் கனவு கேட்பு
மாபெரும் கனவுகளை கொண்டது நமது தமிழினம். நாடு போற்றும் பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வரலாறு காணாத வளர்ச்சியை எட்டியுள்ளோம். அயலகத் தமிழர்களிடமும் கனவு கேட்டுள்ளோம். தமிழர்களுக்கு மொழிப்பற்று உண்டு, ஆனால் மொழி வெறி இல்லை. வெளிநாடுகளில் தமிழ்மொழி வளர்ச்சிக்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தினரின் கனவுகளை கேட்க புதிய திட்டம் அறிமுகம். தமிழ்நாட்டில் மட்டுமல்ல; வெளிநாடுகளிலும் தமிழ் வளர்ச்சிக்கான திட்டங்களை வகுத்து வருகிறோம்.
தனித்தன்மை கொண்ட மாநிலம்
இந்தியாவிலேயே தனித்தன்மை கொண்ட மாநிலம் தமிழ்நாடு. தமிழர்கள் புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள தமிழ் சங்கங்களுக்கு அங்கீகாரம் அளித்துள்ளோம். மதம், மொழி, இனம் என எவற்றாலும் நம்மை பிரிக்க முடியாது.
மொழிக்காக உயிரை தியாகம் செய்த இயக்கம் திமுக மொழிக்காக போராடிய இயக்கம் மட்டுமல்ல; மொழிக்காக உயிரையே தியாகம் செய்த இயக்கம் திமுக. இது ஒரு கட்சியின் அரசு அல்ல; இனத்தின் அரசு. இவ்வாறு அவர் பேசினார்.
