புதுடில்லி, ஜன. 11– மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பாரதிய ஜனதா கட்சியை ‘ஊழல் ஜனதா கட்சி’ என்று கடுமையாக விமர்சித்துள்ளார். பாஜக ஆளும் மாநிலங்களில் நிலவும் ‘இரட்டை என்ஜின்’ அரசு, மக்களின் வாழ்க்கையைச் சீரழித்து வருவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ‘எக்ஸ்’ (X) சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்டுள்ள விரிவான பதிவில் கூறியிருப்பதாவது:
நஞ்சாகப் பரவியுள்ள ஊழல்
பாஜகவின் ‘இரட்டை என்ஜின்’ அரசுகள் நாடெங்கிலும் மக்களின் வாழ்வாதாரத்தைச் சிதைத்துவிட்டன. ஊழலும், அதிகார மமதையும் அந்தக் கட்சியில் மேலிருந்து கீழ் வரை நஞ்சாகப் பரவியுள்ளது. ஏழைகள், தொழிலாளர்கள் மற்றும் நடுத்தர மக்களின் உயிர்கள் இந்த ஆட்சியில் வெறும் புள்ளி விவரங்களாக மட்டுமே பார்க்கப்படுகின்றன. ‘வளர்ச்சி’ என்ற பெயரில் பகல்கொள்ளை அரங்கேறி வருகிறது.
குற்றவாளிகளுக்குப் பாதுகாப்பா?
உத்தரகண்ட் மாநிலத்தின் அங்கிதா பண்டாரி கொலை வழக்கு மற்றும் உத்தரப் பிரதேசத்தின் உன்னாவ் வழக்கு ஆகியவற்றைச் சுட்டிக்காட்டிய ராகுல் காந்தி, “ஆளுங்கட்சியால் பாதுகாக்கப்படும் அந்த முக்கியப் பிரமுகர் யார்? சட்டம் எப்போது அனைவருக்கும் சமமாகும்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். அதிகார பலத்தால் குற்றவாளிகள் காப்பாற்றப்படுவதாகவும் அவர் சாடியுள்ளார்.
நிர்வாகச் சீர்கேடும் இயற்கை வளச் சூறையாடலும்
மத்திய பிரதேசம், குஜராத், அரியானா மற்றும் டில்லியில் அசுத்தமான குடிநீரால் மக்கள் உயிரிழப்பதும், நோய்த்தொற்று அச்சத்தில் இருப்பதும் பாஜகவின் நிர்வாகத் தோல்வியைக் காட்டுகின்றன.
ராஜஸ்தானின் ஆரவல்லி மலைத்தொடர் உள்ளிட்ட இயற்கை வளங்கள் செல்வந்தர்களின் லாபத்திற்காகச் சூறையாடப்படுகின்றன. இதனால் மக்கள் மாசு மற்றும் பேரிடர்களைச் சந்திக்கின்றனர்.
அரசு மருத்துவமனைகளில் எலிகள் கடித்து குழந்தைகள் உயிரிழப்பது, தரமற்ற மருந்துகள் மற்றும் பள்ளி கட்டடங்கள் இடிந்து விழுவது போன்றவை தற்செயலான அலட்சியம் அல்ல; அவை ஊழலின் நேரடி விளைவுகள்.
அழிவின் வேகம்
தொடர் ரயில் விபத்துகள் மற்றும் பாலங்கள் இடிந்து விழுவதைக் குறிப்பிட்டுள்ள அவர், “இத்தகைய நேரங்களில் பாஜக அரசு வெறும் புகைப்படங்கள் எடுப்பதையும், பெயரளவுக்கு இழப்பீடு வழங்குவதையும் மட்டுமே வாடிக்கையாகக் கொண்டுள்ளது. பிரதமர் மோடியின் ‘இரட்டை என்ஜின்’ பெரும் செல்வந்தர்களுக்காக மட்டுமே இயங்குகிறது. சாமானிய இந்தியரைப் பொறுத்தவரை, இவை வளர்ச்சியின் வேகம் அல்ல; அவை அழிவின் வேகம்,” என்று ராகுல் காந்தி தனது பதிவில் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.
