சென்னை, ஜன.1 பொங்கல் விழாவைச் சமத்துவம் நிறைந்த திராவிடப் பொங்கலாகக் கொண்டாட வேண்டும் என்று தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதிய புத்தாண்டு வாழ்த்து மடலில் கூறியுள்ளதாவது:
திராவிடப் பொங்கல்
“இந்தப் புத்தாண்டு நமது தொண்டர் களுக்கு வெற்றிக்கான புத்தாண்டு. நான் கொடுத்த வாக்குறுதியிலிருந்து ஒருபோதும் பின்வாங்க மாட்டேன். எந்தக் கோரிக்கையாக இருந்தாலும் அதை கவனத்தில் கொண்டு, பரிசீலித்து நிறைவேற்றுவதற்கான காலம் நிச்சயம் கனியும். தமிழ்நாட்டில் எதிர்க்கட்சி சரணாகதி அடைந்து சாய்ந்து கிடக்கிறது. ஆளுங்கட்சியான தி.மு.க.தான் தமிழ்நாட்டை வஞ்சிக்கும் ஒன்றிய அரசுடன் தொடர்ந்து உறுதியாகப் போராடி வருகிறது.
இந்திய ஜனநாயகத்தின் பாதுகாவ லனாக தி.மு.க. முன்னிற்கிறது. அதைச் சிதறடிக்க வேண்டுமென எதிரிகளும், உதிரிகளும் வகுக்கும் வியூகங்களைத் தகர்த்தெறிவோம். தேர்தல் முடியும் வரை நமக்கு ஓய்வில்லை. கட்சியின் வெற்றிக்கு உழைப்புதான் அவசியம்.
வரும் பொங்கல் திருநாளைக் கட்சி சார்பில் ‘திராவிடப் பொங்கல்’ விழாவாக முன்னெடுக்க வேண்டும். மாநிலம் முழுவதும் 3 கட்டங்களாக விளையாட்டுப் போட்டிகள் நடத்த வேண்டும். முதல் கட்டமாக ஒன்றிய அளவிலான போட்டிகள் ஜனவரி 3 முதல் 9-ஆம் தேதி வரை நடத்தப்பட வேண்டும். இதில் பங்கேற்க விரும்பும் அணிகள் www.dravidapongal.in என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.
இதில் வெற்றிபெறும் அணிகளைக் கொண்டு ஜனவரி 10 முதல் பொங்கல் திருநாள் வரை மாவட்ட அளவிலான போட்டிகளையும், அதில் வெற்றிபெறும் அணிகளைக் கொண்டு பிப்ரவரி மாதத் தில் மாநில அளவிலான போட்டிகளையும் நடத்த வேண்டும்.
இதுதவிர, ஊராட்சி அளவில் ஜனவரி 14, 15-இல் பொங்கல் வைத்து, சிறுசிறு போட்டிகளை நடத்திப் பரிசளிக்க வேண்டும். தொடர்ந்து ஜனவரி 16, 17-ஆம் தேதிகளில் பொது இடங்களில் கலை, இலக்கிய விழாக்களை நடத்துவதுடன், திரையமைத்து தி.மு.க. அரசின் சாதனை களை விளக்க வேண்டும். திராவிடப் பொங்கல் விழாவை ஊர்தோறும் சிறப்பாகக் கொண்டாட வேண்டும்.”
இவ்வாறு முதலமைச்சர் தனது மடலில் தெரிவித்துள்ளார்.
