திருவனந்தபுரம், மே 3 கேரளத்தில் சட்டமன்றத் தேர்தல் பணியில் ஈடு படுத்தப்பட்ட 20,000க் கும் மேற்பட்ட அதிகாரிகளுக்கு வாக்குரிமை மறுக்கப்பட்டது ஜனநாயக விரோதமானது என்று கேரள அரசு ஊழியர் சங்கம் (என்ஜிஓ) கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சங்கத்தின் பொ துச் செயலாளர் எம்.வி.சசிதரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்ட அரசு ஊழியர்களுக்கு வாக்களிக்கும் உரிமை உறுதி செய்யப்பட வேண்டும் என்று கோரி, மாநில தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் பலமுறை மனு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால், அவர் அளித்த வாக்குறுதிகளை மீறியுள்ளார். பணியில் ஈடுபடுத்தப்பட்ட பெரும்பாலான ஊழியர்களுக்கு வாக்குச்சீட்டுகள் கிடைக்காததால், இதை உறுதி செய்ய நீதிமன்றத்தை அணுக வேண்டியிருந்தது.
7ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம், 8 ஆம் தேதி ஆணையத்திற்கு கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்தது. இருப்பினும், 20,000-க்கும் மேற்பட்டோருக்கு வாக்களிக்கும் உரிமை கிடைக்கவில்லை. இந்த ஜன நாயக விரோதமான – கெடு வாய்ப்பான இந்த முடிவுகளுக்கு எதிராக முறையான அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என அதில் கூறப்பட்டுள்ளது.
