சென்னை, டிச. 13- இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பேச்சுக்கு கண்டனம்: நாட்டின் சட்டத்திற்கு உட்படாத ஆர்எஸ்எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழாவில் பேசிய அதன் தேசியத் தலைவர் மோகன் பகவத், “திருப்பரங்குன்றம் பிரச்சினை இந்துக்களுக்கு சாதகமாக தீர்க்கப்பட வேண்டும்” என பொதுவெளியில் அரசுக்கும், நீதிமன்றங்களுக்கும் உத்தரவிடும் அதிகாரக் குரலில் பேசியிருப்பதும், இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண தமிழ்நாட்டில் இந்துக்களின் எழுச்சியே போதுமானது; அதனை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்ல வேண்டியிருந்தால், அது செய்யப்படும் எனக் கூறி, மதரீதியாக மக்களிடம் வெறுப்பை விதைத்து, மோதலை தூண்டிவிடும் முறையில் பேசியிருப்பதையும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.
விஷ்வ இந்து பரிஷத் தலையீட்டுக்கு எதிர்ப்பு: நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தொடர்ந்து அரசியல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி வருவதால், அவரை பதவி விலக்கம் செய்ய வேண்டும் என நாடாளுமன்ற விதிமுறைகள் மற்றும் உறுப்பினர்களின் அரசியலமைப்பு சார்ந்த உரிமையின்படி மக்களவைத் தலைவரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது. இதில் தலையிட்டு விஷ்வ இந்து பரிஷத் அமைப்பு, எதிர்கட்சிகளின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என கடிதம் எழுதியுள்ளதற்கும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜி.ஆர்.சுவாமிநாதனின் தீர்ப்பு குறித்து விமர்சனம்: சட்டத்துக்கு உட்படாமலும், ஆவண சாட்சியங்களைப் பார்க்காமலும், நூறாண்டுகளுக்கும் மேலான நடைமுறை வழக்கங்களையும் கருத்தில் கொள்ளாமல், திருப்பரங்குன்றத்தின் தீபம் ஏற்றும் நிகழ்வு தொடர்பாக சமூக பதற்றத்தை உருவாக்கும் தீர்ப்பை வழங்கி, வகுப்புவாத சக்திகளின் மலிவான அரசியலுக்கு துணைபோன ஜி.ஆர்.சுவாமிநாதனை பாதுகாக்க சங் பரிவார் கும்பல் தீவிரமாக செயல்படுவதை எச்சரிக்கையாக அணுக வேண்டும்.
பொதுமக்களுக்கு வேண்டுகோள்: பிளவுவாத சக்திகளை நிராகரிக்க வேண்டும் என இறையியலாளர்களையும், பொதுமக்களையும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது.
