பெங்களூருவில் இறுதிக் காலத்தில் வாழ்ந்த மூத்த பத்திரிகையாளர் டி.ஜே.எஸ். ஜார்ஜ், 97ஆம் வயதில் வயது மூப்பு காரணமாக 3.10.2025 அன்று காலமானார். கேரளாவைப் பிறப்பிடமாகக் கொண்டு, கல்லூரிக் கல்வியை சென்னையில் முடித்த அவர் பத்திரிகைப் பணியில் சேர்ந்திட பம்பாய் சென்றார். 1950இல் ‘திஃபிரி பிரஸ் ஜர்னல்’ (The Free Press Journal) இதழில் ஒரு கேலிச் சித்திரக் கலைஞராக இருந்தவரும் – பின்னாளில் சிவசேனா இயக்கத்தின் நிறுவனத் தலைவராக இருந்தவருமான பால் தாக்கரே அவர்களுடன் இணைந்து பணியாற்றினார்.
பீகாரின் பாட்னாவிலிருந்து வெளிவந்த சர்ச் லைட் (Search Light), ஹாங்காங்கிலிருந்து வெளிவந்த ஃபார் ஈஸ்டர்ன் எக்னாமிக் ரிவ்யூ (Far Eastern Economic Review) இதழ்களின் ஆசிரியராகவும் இருந்தார். தனது மாநிலத்தவர், தனது நாட்டினர் என்பதையெல்லாம் கடந்து உலகளாவியப் பார்வையுடன் பத்திரிகை உலகில் பயணித்தார்.
தந்தை பெரியாரைப் பற்றி டி.ஜே.எஸ். ஜார்ஜ் பதிவிட்டுள்ளது, தலைவர்களைப் பற்றிய கூர்மையான, துல்லியமான தன்மையை சுட்டிக் காட்டிய வகையில் இருந்தது.
‘‘பெரியார் அற்புதமான சிந்தனையாளர், அவரது புதுமையான கருத்துருக்கள் அவரை உலக வரலாற்றின் அறிஞர்கள் வரிசையில் கொண்டு போய்ச் சேர்க்கிறது. வேறு கால கட்டத்தில் – வேறு சூழலில் அவர் உலக சீர்திருத்தவாதியாகக்கூட கொண்டாடப்பட்டிருப்பார்.’’
கடைசிக் காலங்களில் ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ ஏட்டில் கட்டுரை எழுதி வந்தார். பல நூல்களைப் படைத்துள்ள அவர் இறுதியாக எழுதிய நூலின் தலைப்பு: ‘தி டிஸ்மேன்ட்லிங் ஆஃப் இந்தியா’ (The Dismantling of India).
பாரபட்சமின்றி தனது கூர்மையான, நேர்மறையான எழுத்துகளில் நாட்டு நடப்பினை எழுதிய துணிச்சல் மிக்க எழுத்தாளரைப் பத்திரிகை உலகம் இழந்திருக்கிறது. டி.ஜே.எஸ். ஜார்ஜ் மறைவில் துயருறும் அவரது மகன் ஜீத்தையில் (சாகித்ய அகடாமி விருது பெற்றவர்) மற்றும் பத்திரிகை உலகத் தோழர்களுக்கு ஆறுதலையும், இரங்கலையும் ெதரிவித்துக் கொள்கிறோம்.
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
9.10.2025