வரலாறு படைத்த விடுதலையின் தொகுப்பு விடுதலை களஞ்சியம் தொகுதி -1

Viduthalai
6 Min Read

பொ. நாகராஜன்

அரசியல்


விடுதலை களஞ்சியம் தொகுதி 1 (1936) தொகுப்பாசிரியர்: கி. வீரமணி 

பெரியார் சுயமரியாதை 

பிரச்சார நிறுவன வெளியீடு 

முதல் பதிப்பு ஜுன் 2023 

பக்கங்கள் – 304 

நன்கொடை – ரூ.500/

« பல்வேறு வரலாறுகளைப் படிப்பதற்காக விடுதலையை வாங்கி வந்தோம்!

« ‘விடுதலை’ பல்வேறு  வரலாற்றைப் படைத்த தற்காக ‘விடுதலை’யை வாங்கி மகிழ்ந்தோம்!

« ‘விடுதலை’யின் பல்வேறு வரலாற்றை அறிவ தற்காக இந்த விடுதலை தொகுப்பை படித்துப் பார்ப்போம்!

« விடுதலை சந்தித்த இன்னல்களை, சாதித்த சாதனைகளை, நிகழ்த்திய புரட்சியை, நடத்திய போராட்டங்களை, ஒவ்வொருவரும் அறிந்து கொள்வதற்கு உதவும் ஒரு வரலாற்று கருவூலமாக, களஞ்சியமாக இந்த தொகுப்பு நூல் அமைந்துள்ளது!

« ‘விடுதலை’ இதழ் 01.06.1935 அன்று துவக்கப் பட்டது. அப்போது வாரம் இருமுறை ஏடாக வந்தது. நீதிக்கட்சியினரால்  நடத்தப்பட்டு டி.ஏ.வி. நாதன் அதன் முதலாவது ஆசிரியராக இருந்தார். இன்று விடுதலைக்கு 88 வயது நிறைவு பெற்றுள்ளது!

« உலகின் ஒரே பகுத்தறிவு நாளேடு என்பது விடுதலைக்கு மட்டும் பெருமையல்ல அதன் அறிவார்ந்த  வாசகர்களுக்கும் சிறப்புப் பெருமை! 

« 1926ஆம் ஆண்டு தேர்தலில் தோற்ற நீதிக்கட்சி – திராவிடன் இதழை பெரியாரிடம் ஒப்படைத்தது போல 1937இல் நடைபெற்ற தேர்தலில் படுதோல்வி அடைந்த நீதிக்கட்சி – விடுதலை இதழையும் பெரியாரிடமே ஒப்படைத்தது என்பது முக்கியமான வரலாறு!

« பெரியாரிடம் 01.07.1937இல் வந்து சேர்ந்த விடுதலை ஈரோட்டிலிருந்து நாளிதழாக வெளிவரத் துவங்கியது! அதன் ஆசிரியராக பண்டித எஸ். முத்துசாமிப் பிள்ளை இரண்டு ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றினார்! 

«  தந்தை பெரியார் தனது சீர்திருத்த கொள்கை களைப் பரப்புவதற்காக நடத்திய இதழ்கள் பல – குடிஅரசு; திராவிடன்; புரட்சி; பகுத்தறிவு; விடுதலை; உண்மை; Revolt; Justice; The Modern Rationalist..இவைகளை தனது பிரச்சார பீரங்கிகளாக பெரியார் கையாண்டார்! 

« கொள்கைப் பிரச்சாரத்தின் வீரியம் பற்றி பெரியாரின் மொழியிலேயே கேளுங்கள்!

« “பிரச்சாரத்தின் மூலம் நகத்தால் கிள்ளி எறிய வேண்டிய அற்ப விஷயம், (செய்யா விட்டால்) பணத்தின் மூலம் கோடாரி போட்டு வெட்ட வேண்டிய அளவு கஷ்டத்தை உண்டாக்கி விடும்! ” ..என்று மிகவும் திடமாக நம்பினார். அதன் காரணத்தினாலேயே விடுதலை இதழை ஒரு நாளிதழாக கொண்டு வர வேண்டும் என்று படாத பாடுபட்டார்! 

« விடுதலை நாளேட்டின் 61 ஆண்டுகளாக ஆசிரியராக உலக சாதனையைப் படைத்த – ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் இந்நூலில் விடுதலை பற்றிய ஓர் அரிய ஆய்வுரையை ஏறத்தாழ 78 பக்கங்களுக்கு தந்துள்ளார்! இந்த ஆய்வுரையே ஒரு தனி நூலாக வெளியிடும் அளவிற்கு சிறப்பாக வந்துள்ளது! 

« விடுதலை பற்றிய ஆய்வுரையில் ஆசிரியர் தருகின்ற பல சுவையான தகவல்களில் இவைகள் முதன்மையானதாக உள்ளது :

« “நமக்கு முழுமையாகக் கிடைத்திருக்கும் பழை மையான விடுதலை இதழ் 29.04.1936 அன்று வெளியானதாகும். 1936ஆம் ஆண்டு வெளிவந்த 104 விடுதலை இதழ்களில் நம்மிடம் 19 இதழ்கள் மட்டுமே இருக்கின்றன. அந்த இதழ்களிலிருந்து தலையங்கம், துணைத் தலையங்கம், கட்டுரை, முக்கிய செய்திகள், தந்தை பெரியாரின் உரைத் துணுக்குகள் மட்டும் இந்த விடுதலை களஞ்சியம் முதல் தொகுப்பில் இடம் பெற்றுள்ளன! ” …

« பெரியாரின் சுயமரியாதை இயக்கம் நீதிக் கட்சிக்கு எந்த அளவு பக்கபலமாக இருந்ததென்பதை விடுதலை தலையங்கம் ஒன்றில் பெரியார் இவ்வாறு குறிப்பிட்டிருந்ததை ஆசிரியர் தனது ஆய்வுரையில் எடுத்துரைக்கின்றார்! 

« ” சுயமரியாதை இயக்கம் மட்டும் தோன்றியிருக்கா விட்டால், நீதிக்கட்சி இதற்குள் 500 அடி ஆழத்தில் புதைக்கப்பட்டு தோழர் சத்திய மூர்த்தியின் (தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்) விருப்பம் பூர்த்தியாகி யிருக்கும்! ” என்று அன்றே கணித்தார் பெரியார்! 

சனாதனிகளின் சதி வேலைகள் கருஞ்சட்டை களிடம் செல்லாது!

« பெரியார் விடுதலை நாளிதழை ஈரோட்டில் துவக்கிய பிறகு அதற்கான சந்தா சேர்ப்பதையும், அதற்காக அவர் விடுத்த அறிக்கையையும் சற்று படித்துப் பாருங்கள்! பெரியாரின் எண்ணமும் எழுத்து வண்ணமும் நம்மை சுண்டியிழுக்கும்! 

« “விடுதலைக்கு சந்தா தரலாம்; விளம்பரங்கள் தரலாம்; வாக்குச் சகாயம் செய்யலாம்; எழுத்து சகாயம் மேற்கொள்ளலாம்! இவைகளிலும் இவை போன்ற பிறவற்றிலும் ஒன்றும் செய்ய முடியாத உண்மைத் தமிழ் மக்கள் – மனம், மொழி, மெய்களால் இடையூறு செய்யாமல் இருக்கலாம்! ” …என்று இறுதியிலே தமிழனின் தனியொரு குணத்தை சுட்டிக் காட்டினாரே! … அவர் தான் பெரியார்!

இனி – 1936ஆம் ஆண்டு வெளியான விடுதலை இதழ்களிலிருந்து சில தகவல்கள் :

«  நம்மிடமுள்ள மிகப் பழைமையான 29.04.1936 தேதியிட்ட விடுதலை இதழில் – சம உரிமைப் போர் துவக்கிய இயக்கம் என்ற தலைப்பில் இருக்கும் முக்கிய செய்தியில், ஜஸ்டிஸ் கட்சி பற்றியும், அதன் தலைவர்கள் டாக்டர் நாயர், சர். தியாகராயர் மற்றும்  பானகல் அரசர் பற்றிய விவரங்கள் இன்றைய இளைய தலைமுறையினர் கட்டாயம் அறிய வேண்டியது! 

« “தென்னிந்திய சரித்திரத்தில் பானகல் ராஜா செய்து முடித்த அரிய செய்கைகள், என்றும் தங்க லிபிகளில் (எழுத்துகளில்) எழுதக் கூடியவைகளாக பதிக்கப்பட்டி ருக்கின்றன. வகுப்புவாரி பிரதிநிதித்துவம், இந்துமத சீர்திருத்த பரிபாலன போர்டு போன்ற குறிப்பிடக் கூடிய பல முக்கிய செய்கைகளுக்கு கர்த்தா இவர் என்றால், தென்னாடு இவருக்கு என்றும் கடமைப் பட்டுள்ளது! ” 

« 06.05.1936 அன்று வெளியான விடுதலை இதழில் இதுவரை நமக்கு எந்த வரலாற்று புத்தகத்திலும் கிடைக்காத எந்த வரலாற்று ஆசிரியரும் சுட்டிக் காட்டாத அரிய தகவல் ஒன்று காணக் கிடைக்கின்றது. ஆங்கிலேயர் ஆட்சியின் போது ஜஸ்டிஸ் கட்சியைச் சேர்ந்த இரண்டு தலைவர்கள் சென்னை மாகாண ஆளுநராக சிறிது காலம் பதவியில் இருந்தார்களாம்! 

«  சென்னை மாகாண ஆளுநராக இருந்த லார்டு எர்ஸ்கின் 1936 ஜூன் 18ஆம் தேதி முதல் நான்கு மாதங்கள் விடுமுறையில் சீமைக்கு சென்றாராம். அப் போது ஆக்டிங் ஆளுநராக கனம் சர். கே. வி.ரெட்டி பதவியில் நியமிக்கப்பட்டாராம். அதற்கு முன்னர் ஒருமுறை நீதிக்கட்சி பிரமுகர் கனம் சர் முகம்மது உஸ்மான் ஆளுநர் பதவியிலிருந்த செய்தியும் நமக்கு தெரிய வருகிறது!

« விடுதலையின் இரண்டாவது ஆண்டில் வெளி யான இதழ் – 03.06.1936 தலையங்கத்தில், விடுதலையின் கொள்கை பற்றி இப்படி ஒரு குறிப்பு காணக் கிடைக் கின்றது!

«”மதம், புரோகிதம், சாத்திரம், ஜோசியம் முதலிய அறிவு வளர்ச்சிக்கும், சமூக முன்னேற்றத்திற்கும் தடையாய் உள்ளவற்றை ஒழிப்பதற்கும், பிறப்பினாலும், பணத்தினாலும், படிப்பினாலும் ஏற்பட்ட உயர்வு தாழ்வு களினால் ஏழை மக்களுக்கு உண்டாகும் துய ரங்களை நீக்குவதற்கும்,  ‘ விடுதலை ‘ துணை செய்ய முயன்றிருக் கிறது! ” … என்று தெளிவாக விளக்கப் பட்டுள்ளது!

« ‘விடுதலை’ தனது இரண்டாவது ஆண்டில் (1936) தன்னுடைய கொள்கையை விளக்கியதைப் படித்தோம்! 

இப்போது (2023) விடுதலைக்கு 88 வயது. இன்றும் அதே கொள்கையோடு தந்தை பெரியாரின் சுய மரியாதை, பகுத்தறிவு, சமூக நீதி கொள்கைகளையும் அரவணைத்துக் கொண்டு விடுதலை நாளிதழ் தனது பயணத்தை தொய்வில்லாமல் நடத்துகின்றது! 

«  ‘விடுதலை’ களஞ்சியம் தொகுதி 1 – வரலாற்றின் முக்கியமான காலகட்டத்தைப் பற்றி நமக்கு விரிவாக விளக்கம் தருகிறது. இனி வர இருக்கும் தொகுதிகளில் பெரியாரின் உரைகளும் எழுத்துகளும் நிறைய காணக் கிடைக்கும்! 

«  தமிழர் தலைவர் ஆசிரியரின்  அயராப்பணியில் வெளியான மற்றுமொரு சிறப்பான தொகுப்பிலக் கியமாக இந்த  நூல் அமைந்துள்ளது! ஆசிரியருக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்!

« ‘விடுதலை’யின் வரலாற்றை

அறியச் செய்வோம்!

« வரலாற்றில் விடுதலையை 

அமரச் செய்வோம்!!

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *