சென்னை, ஜூலை 24- ‘தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம்’ என்ற பெயரில் பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் நடத்தும் சுற்றுப்பயணத்துக்கு தடை விதிக்கக் கோரி அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் காவல்துறை தலைமை இயக்குநரிடம் மனு அளித்துள்ளார்.
ராமதாஸின் பிறந்த நாளை முன்னிட்டு ஜூலை 25 முதல் தமிழ்நாடு முழுவதும் உரிமை மீட்புப் பயணம் நடத்தப்படும் என்று அன்புமணி அறிவித்திருந்தார்.
சென்னையை அடுத்த திருப்போரூரில் தொடங்கவுள்ள இந்தப் பயணம் தமிழ்நாட்டின் முக்கியத் தொகுதிகள் வழியாக பயணித்து தமிழ்நாடு நாளான நவ.1-ஆம் தேதி தருமபுரியில் நிறைவடையவுள்ளது.
இந்த நிலையில், அன்புமணி ராமதாஸ் நடத்தும் சுற்றுப்பயணத்துக்கு தடை விதிக்கக் கோரி ராமதாஸ் தரப்பில் தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவாலிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், தனது அனுமதி இல்லாமல் கட்சியின் பெயர், கொடி, நிர்வாகிகள் சந்திப்பு, பிரச்சாரம் மேற்கொள்வது உள்ளிட்டவற்றை தடுத்து நிறுத்த வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.