சுய சான்றிதழ் அடிப்படையில் ஒரு லட்சம் வீடுகளுக்கு கட்டட அனுமதி முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு பயனாளிகள் நன்றி

viduthalai
1 Min Read

சென்னை, ஜூலை.8- சுய சான்றிதழ் அடிப்படையில் ஒரு லட்சம் வீடுகளுக்கு கட்டட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அந்த பயனாளிகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

கட்டட முடிவு சான்று

நகர் ஊரமைப்பு இயக்ககத்தின் சார்பில் தமிழ்நாட்டில் முதல் முறையாக சுயசான்றிதழ் அடிப்படையில் அதிகபட்சம் 2,500 சதுர அடி பரப்பளவு கொண்ட மனையிடத்தில் 3,500 சதுர அடி அளவுக்குள் கட்டப்படும் குடியிருப்பு கட்டுமானத்திற்கு உடனடி ஒப்புதல் பெறும் சுயசான்றிதழ் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் கீழ் கட்டப்படும் குடியிருப்பு கட்டடங்களுக்கு கட்டட முடிவுசான்று பெறுவதில் இருந்தும் விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.

இந்த திட்டம் தொடங்கப்பட்ட நாள் முதல் இதுநாள் வரை 1 லட்சத்து ஓராயிரத்து 925 விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளன. இதில் கிராம ஊராட்சிகளில் இருந்து 68,748 விண்ணப்பங்களும், நகராட்சிகளில் இருந்து 23,488 விண்ணப்பங்களும், பேரூராட்சிகளில் இருந்து 8,150 விண்ணப்பங்களும், பெருநகர சென்னை மாநகராட்சியில் இருந்து 1,539 விண்ணப்பங்களும் பெறப்பட்டு, ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளன.

வருவாய்த்துறை

மேலும், இந்த திட்டம் தொடங்கப் படுவதற்கு முந்தைய 10 மாதங்களில் அதாவது அக்டோபர் 2023 முதல் ஜூலை 2024 வரை 59,715 விண்ணப்பங்களுக்கு மட்டுமே ஒப்புதல் வழங்கப்பட்டு இருந்தன. அதாவது எண்ணிக்கை இருமடங்காக உயர்ந்து உள்ளது. இதன்மூலம் அனுமதியற்ற கட்டுமானங்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளன.

இந்த திட்டத்தின் கீழ் பயன் பெற்ற பயனாளிகள் சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

அப்போது அமைச்சர் முத்துசாமி, தலைமைச்செயலாளர் முருகானந்தம், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் காகர்லா உஷா, நகர் ஊரமைப்பு இயக்குநர் பா.கணேசன் ஆகியோர் உடனிருந்தனர்.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *