தஞ்சாவூர், ஜூன் 16 காவிரி டெல்டா மாவட்டங்களின் குறுவை, சம்பா சாகுபடி பாசனத்துக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (15.6.2025) கல்லணையில் இருந்து தண்ணீர் திறந்து வைத்தார்.
காவிரி டெல்டா மாவட்டங் களில் குறுவை, சம்பா, தாளடி என மூன்று போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்த சாகுபடிக்கு தேவையான தண் ணீர் மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12-ஆம் தேதி திறந்து விடப்படுவது வழக்கம். அதன்படி, மேட்டூர் அணையில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 12-ஆம் தேதி தண்ணீர் திறந்துவிட்டார். இந்த தண்ணீர் கரூர், திருச்சி வழியாக நேற்று மாலை தஞ்சாவூர் மாவட்ட எல்லையான கல்லணைக்கு வந்தது.
இதற்கிடையே, தஞ்சாவூரில் 2 நாட்கள் நடைபெறும் நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னையில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் வந்தார். அங்கிருந்து கார் மூலம் கல்லணைக்கு வந்து, சுற்றுலா மாளிகையில் ஓய்வு எடுத்தார். பின்னர், மாலை 6.05 மணிக்கு அங்கிருந்து நடந்து சென்று கல்லணையில் இருந்து காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் பாசனத்துக்கு தண்ணீர் திறந்து வைத்தார். விவசாயம் செழிக்க வேண்டி ஆற்றில் பூக்கள், நவதானியங்களை தூவினார்.
காவிரி, வெண்ணாற்றில் விநாடிக்கு தலா 1,500 கன அடி, கல்லணை கால்வாயில் 500 கன அடி கொள்ளிடத்தில் 400 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. இதன் மூலம் காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா சாகுபடியில் 13 லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறும்.
முன்னதாக, டெல்டா பகுதிகளில் நீர்நிலைகள் தூர்வாரப்பட்டது, சாகுபடி விவரங்கள் குறித்து அமைச்சர்கள், மக்கள் பிரதிநிதிகள், ஆட்சியர்களிடம் முதலமைச்சர் கேட்டறிந்தார். “மேட்டூர் அணையின் நீர் இருப்பு, நீர்வரத்து, மழை, கருநாடக அணைகளில் 7, இருந்து கிடைக்க வேண்டிய நீரின் அளவு ஆகியவற்றை கருத்தில் கொண்டு, காவிரி டெல்டா பாசன பகுதிகளுக்கு தேவைக்கேற்ப தண்ணீரை பகிர்ந்தளிக்க வேண்டும். பாசனத்துக்கு வழங்கப்படும் நீரை சிக்கனமாகவும், தேவைக்கேற்பவும் பயன்படுத்தி அதிக மகசூல் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். உரங்கள், விதைகள், பூச்சிக்கொல்லி மருந்துகள் தேவையான அளவு இருப்பதை உறுதி செய்ய வேண்டும்” என அறிவுறுத்தினார்.
கடந்த 1998 ஜூன் 23-ஆம் தேதி அப்போதைய முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் கல்லணையை திறந்து வைத்தார். பின்னர், அமைச்சர்களே திறந்து வைத்த நிலையில் 126 ஆண்டுகளுக்கு பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தண்ணீர் திறந்து வைத்துள்ளார்.