6 முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கக்கூடிய மாணவர்களின் கற்கும் திறனை மெருகேற்றும் திறன் திட்டம் தொடங்க தமிழ்நாடு அரசு முடிவு

viduthalai
2 Min Read

சென்னை, ஜூன் 16- 6ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளின் கற்றல் திறனை மேலும் மெருகேற்றும் வகையில் திறன் எனும் திட்டத்தை தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித் துறை இம்மாத இறுதிக்குள் தொடங்க முடிவு செய்துள்ளது.

‘எண்ணும் எழுத்தும்’ திட்டம்

அரசுப் பள்ளிகளில் 1ஆம் வகுப்பு முதல் 3ஆம் வகுப்பு வரை படிக்கக் கூடிய அனைத்து குழந்தைகளும் புரிந்து படிக்கவும், எழுதவும் மற்றும் அடிப்படைக் கணக்குகளை செய்யவும் திறன்களை பெற்றிருக்க வேண்டும் என்ற அடிப்படையில் ‘எண்ணும் எழுத்தும் திட்டம்’ 2022-2023ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. 2023-2024ஆம் ஆண்டில் இது 5ஆம் வகுப்பு வரை விரிவுப்படுத்தப்பட்டது. இதன் மூலம் 25 லட்சம் மாணவ-மாணவிகள் பயன் பெறுகின்றனர்.

திறன் திட்டம்

இதன் தொடர்ச்சியாக தற்போது 6ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை படிக்கக்கூடிய மாணவ-மாணவிகளின் மொழிப் பாடத்திறன் மற்றும் கணிதத் திறன் ஆகிய வற்றை மேம்படுத்தும் வகையில் ‘திறன் திட்டம்’ எனும் திட்டத்தை ரூ.19 கோடியில் நடைமுறைப்படுத்த  இருப்பதாக தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித் துறை அறிவிப்புகளில் தெரிவித்து இருந்தது.

மெருகேற்றும் பணிகள்

அதன்படி, அரசு பள்ளிகளில் 6ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரையில் 6ஆம் படிக்கும் மாணவ-மாணவிகளில் மொழிப் பாடம், கணிதத்தில் பின் தங்கி இருக்கும் மாணவ-மாணவிகளை அடையாளம் கண்டு அவர்களை மெருகேற்றும் வகையிலான திட்டமாக இதை பள்ளிக் கல்வித்துறை முன்னெடுக்க அதற்கான பணிகளை செய்து வருகிறது.

இதற்காக ஆரம்பகட்ட ஆய்வு என்ற அடிப்படையில் தேர்வை நடத்தி அதில் பின்தங்கிய மாணவர்களை அடையாளம் காண திட்டமிட்டிருக்கின்றனர்.

அவ்வாறு தேர்வு செய்யப்படும் மாணவ-மாணவிகளுக்கு அன்றாடம் 1 முதல் 12 மணி நேரம் வரை அல்லது வாரத்தில் ஒரு நாள்விட்டு ஒருநாள் என எந்த முறையில் பயிற்சி வழங்கலாம் என மாவட்டந்தோறும் ஆலோசனை நடந்த நிலையில், தற்போது மாநில அளவிலான ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது.

6 மாதங்கள் பயிற்சி

இந்த திட்டத்தின் கீழ் பிரத்தியேக பயிற்சி ஆசிரியர்களை கொண்டே இந்த குறைந்தபட்ச கற்றல் அடைவு திறன் பயிற்சியை 30 சதவீத மாணவ-மாணவிகள் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களுக்கு 6 மாதங்கள் இந்த பயிற்சி வழங்கப்பட உள்ளது. மாணவ-மாணவிகளுக்கு பயிற்சியை வழங்குவதற்கு ஏதுவாக ஆசிரியர்களுக்கும் சிறப்புப் பயிற்சி வழங்கப்பட்டு இருக்கிறது.

பயிற்சியின் இடையே அதாவது பயிற்சி தொடங்கி 3ஆவது மாத இறுதியில் ஒரு ஆய்வும், 6 மாத பயிற்சியின் இறுதியில் ஒரு ஆய்வும் நடத்தி மாணவ-மாணவிகளின் கற்றல் அடைவுத்திறன் எந்த அளவுக்கு முன்னேற்றம் கண்டுள்ளது என்பதை அறியவும் பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டு இருக்கிறது.

கற்றல் அடைவுத் திறனில் பின்தங்கிய மாணவர்களை கைப்பிடித்து தூக்கிவிடும் இந்த திறன் திட்டம் இம்மாத இறுதிக்குள் தொடங்கப்பட உள்ளது என்றும், நிச்சயம் இந்த திட்டம் பின்தங்கிய மாணவர்களை முன்னேற்றும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *