சென்னை, ஜூன் 14- கோடைகால விடுமுறை யில் கன்னிமாரா நூலகத்திற்கு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் சென்று வந்துள்ளனர். போட்டித் தேர்வு சம்பந்தமான புத்தகங்களை தேர்வு செய்து படித்தனர்.
கன்னிமாரா நூலகம்
இந்தியாவில் உள்ள பழமையான நூலகங் களில் சென்னை எழும் பூரில் உள்ள கன்னிமாரா பொது நூலகம் முக்கியமானதாகும். 1890இல் நிறுவப்பட்ட இந்த நூலகத்தில் நாட்டின் மதிக்கத்தக்க, புகழ்பெற்ற பழைமையான புத்தகங்கள் பாதுகாக்கப்படுகின்றன.
இந்நூலகம் 1890 வரை அருங்காட்சியகத்தின் கட்டுப் பாட்டில் இருந்தது. அன்றைய மதராஸ் மாகாணத்தின் ஆளுநராக இருந்த கன்னிமாரா பிரபு 1890ஆம் ஆண்டு மார்ச் 22ஆம் தேதி இந்த நூலகத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
அனைத்துப் புத்தகங்களும்…
1896ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறக்கப்பட்டது. இந்த நூலகம் திறக்கப்பட்டபோது அவர் ஆட்சியில் இல்லாவிடினும் அவருடைய பெயரே நூலகத்துக்கும் சூட்டப்பட்டு, பெருமைப்படுத்தப்பட்டது.
தற்போது வரை இந்த நூலகம் வாசிப்பாளர்களின் சுவாசமாக திகழ்ந்து வருகிறது. இந்தியாவில் வெளியாகும் அனைத்து புத்தகங்கள், நாளிதழ்கள் மற்றும் நாவல்கள் ஆகியவற்றின் ஒரு பிரதி இங்கு கட்டாயம் இருக்கும். அந்த வகையில் பொக்கிஷம் வாய்ந்த நூலகம் இது.
ஆன்லைன் மூலம்
6 லட்சம் புத்தகங்கள்
6 லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்களை கொண்ட இந்த நூலகம் காலத்திற்கேற்ப ஆன்லைன் மூலம் வாசிப்பகத்தை திறந்துள்ளது.
நாள்தோறும் இந்தநூலகத்திற்கு ஆயிரக்கணக்கான மாணவர்கள் வந்து செல்கிறார்கள். வெளியூரில் இருந்து வருபவர்கள் எழும்பூர் பகுதியில் தங்கும் விடுதியில் தங்கியிருந்து நூலகம் சென்று வருகின்றனர்.
பெரும்பாலும் போட்டித் தேர்வு சம்பந்தமான புத்தகங்களையே மாணவர்கள் படித்து வருகிறார்கள். சில மாணவர்கள் சொந்த புத்தகங்களை கொண்டு வந்து நூலக வளாக வெளியில் பூங்காவில் அமர்ந்து படித்து வருகிறார்கள். வீட்டில் இருந்து வரும் போதே உணவு, தண்ணீர் கொண்டு வந்து விடுகிறார்கள்.
டி.என்.பி.எஸ்.சி. முதல் பல்வேறு அரசு வேலைகளுக்காக படித்து வரும் பெரும்பாலான இளைஞர்கள், ஆய்வாளர்கள் என பலருக்கும் இந்த நூலகம் உறுதுணையாக இருந்து வருகிறது.
பழைமையான நூலகம்
கடந்த ஏப்ரல், மே விடுமுறை காலங்களில் கன்னிமாரா நூலகத்திற்கு 10 ஆயி ரத்து 350 மாணவர்கள் வருகை தந்திருக்கிறார்கள். அவர்கள் போட்டித் தேர்வுகள் மற்றும் தொழில் நுட்பம் சார்ந்த புத்தகங்களை தேர்வு செய்து படித்துள்ளனர்.
இது குறித்து நூலகபொறுப் பாளர்கள் கூறும்போது, ‘இந்தியாவிலேயே பழைமையான நூலகம் என்ற பெயருடன் விளங்கும் கன்னிமாராவுக்கு வரும் வாசகர்களின் எண்ணிக்கை எப்போதும் குறைந்தது இல்லை.
தற்போது ஆன்லைன் மூலம் நிறைய பேர் புத்தகங்களை படிக்கிறார்கள். செல்போன் காலத்தில் வாசிப்புக்கு மாணவர்கள் முக்கியத்துவம் கொடுப்பது மகிழ்ச்சி அளிக்கிறது’ என்றனர்.