அரசு பெண் ஊழியர்கள் மகப்பேறு விடுப்பு தொடர்பான புதிய அரசாணை வெளியீடு

Viduthalai
2 Min Read

சென்னை, மே 30 அரசு பெண் ஊழியர்கள் தகுதிகாண் பருவகாலத்தில் பயன்படுத்தும் மகப்பேறு விடுப்பை, தகுதிகாண் பருவகால கணக்கில் எடுத்துக் கொள்வது தொடர்பான முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்புக்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

மகப்பேறு விடுப்பு

இதுகுறித்து மனிதவள மேலாண்மைத் துறை சார்பில், தலைமைச்செயலர் நா.முருகானந்தம் வெளியிட்ட அரசாணையின் விவரம்: தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த ஏப்.28-ஆம் தேதி நடைபெற்ற மானிய கோரிக்கை விவாதத்தின்போது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 110 விதியின் கீழ் அறிவிப்பு வெளியிட்டார். அதில், “திருமணமான அரசு பெண் பணியாளர்களுக்கு மகப்பேறுக்காக ஒன்பது மாதமாக இருந்த விடுப்பு கடந்த 2021 ஜூலை 1 முதல் ஓராண்டாக உயர்த்தப்பட்டு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு அரசால் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், தற்போதுள்ள விதிகள்படி மகப்பேறு விடுப்புக்காலம் தகுதிகாண் பருவத்துக்கு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை.

தகுதி காண் பருவ பணிக்காலம்

இதனால், அரசு பணிகளில் பணியாற்றி வரும் பல்லாயிரக்கணக்கான இளம் மகளிர் மகப்பேறு விடுப்பு எடுத்தால், தகுதிகாண் பருவத்தை உரிய காலத்துக்குள் முடிக்க முடியாமல் அவர்களின் பதவி உயர்வு பாதிக்கப்படுவதுடன், பணிமூப்பை இழக்கும் நிலை ஏற்படுகிறது. மகளிர் முன்னேற்றத்துக்காக அனைத்து முயற்சிகளையும் எடுத்து வரும் இந்த அரசு, அரசு பணியில் உள்ள மகளிரின் பணி உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில், இனிவரும் காலங்களில் மகப்பேறு விடுப்பு காலத்தை அவர்களின் தகுதிகாண் பருவத்துக்கு கணக்கில் எடுத்துக் கொள்ளலாம்” என அறிவித்திருந்தார்.

முதலமைச்சரின் அறிவிப்புக்கிணங்க ஆணைகள் வெளியிடப்படுகின்றன. அதன்படி, திருமணமான அரசு பெண் பணியாளர்கள் தகுதிகாண் பருவத்தின்போது எடுத்துக் கொள்ளும் மகப்பேறு விடுப்புக் காலம் அவர்களின் தகுதிகாண் பருவத்துக்கு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். சிறப்பு அல்லது தற்காலிக விதிகளில் வரையறுக்கப்பட்ட தகுதிகாண் பருவ பணிக்காலம் கடந்த ஏப்.28-ஆம் தேதி முடிவு பெறாதவர்களுக்கு இந்த சலுகை பொருந்தும். ஏப்.28-ஆம் தேதிக்கு முன் தகுதிகாண் பருவ பணிக்காலம் முடிந்திருந்தால் இந்த சலுகை பொருந்தாது இவ்வாறு அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

ஆர்.பி.அய். விதிகள்
வேளாண் வங்கிகளுக்கு பொருந்தாது

அமைச்சர் பெரியகருப்பன்

நகைக்கடன் குறித்த ஆர்.பி.அய். விதிகள் தொடக்க வேளாண் வங்கிகளுக்கு பொருந்தாது என்று அமைச்சர் பெரியகருப்பன் மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஆர்பிஅய் விதிகளால் கூட்டுறவு வங்கிகளுக்கு பெரிய பாதிப்பு இருக்காது எனக் கூறிய அவர், கூட்டுறவு வங்கிகள் மூலம் ரூ.60 ஆயிரம் கோடி நகைக்கடன் தரப்பட்டுள்ளது. நியாயவிலைக் கடைகளில் ஆள் பற்றாக்குறை இல்லாமல் பார்த்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

 

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *