சென்னை, மே 27- ஒரு லட்சத்து 80 ஆயிரம் மீனவ குடும்பங்களுக்கான மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகையாக தலா ரூ.8 ஆயிரம் வழங்கும் பணி 90 சதவீதத்துக்கு மேல் நிறைவு பெற்றுள்ளது. கூடுதலாக இந்த திட்டத்தில் பயனாளிகளை இணைக்க மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மீன்பிடி தடைக்காலம்
கடல் மீன் வளங்களை பாதுகாக்க ஒவ்வொரு ஆண்டும் 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் திருவள்ளூர் மாவட்டம் முதல் கன்னியாகுமரி வரையிலான கிழக்கு கடற்கரைப் பகுதியில் ஏப்ரல் 15ஆம் தேதி முதல் ஜூன் 14ஆம் தேதி வரையிலும் இந்த மீன்பிடி தடைக்காலம் கடைப்பிடிக்கப் படுகிறது.
இந்த மீன்பிடி தடைகாலத்தில் மீனவர்களுக்கு நிவாரண உதவித் தொகையாக ரூ.5 ஆயிரம் வழங்கப்பட்டு வந்த நிலையில், கடந்த 18.8.2023 அன்று நடைபெற்ற மீனவர் நல மாநாட்டின் போது, இந்த தொகை ரூ.8 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்பட்டது. இந்த தொகையில் ஒன்றிய அரசு தன் பங்கு நிதியாக ரூ.1,500அய் வழங்குகிறது.
1.80 லட்சம் மீனவ குடும்பங்கள்
2020-2021ஆம் ஆண்டில் இந்த திட்டத்தின் வாயிலாக 2 லட்சத்து 16 ஆயிரம் மீனவ குடும்பங்கள் பயன் பெற்று வந்த நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை ஒரு லட்சத்து 80 ஆயிரம் என்ற அளவில் இருக்கிறது.
அந்த வகையில் கடந்த ஆண்டில் (2024) 1 லட்சத்து 78 ஆயிரத்து 352 மீனவ குடும்பங்களுக்கு ரூ.143 கோடியே 20 லட்சம் உதவித் தொகையாக வழங்கப்பட்டது. இதில் ஒன்றிய அரசின் பங்குத்தொகையான ரூ.26 கோடியே 85 லட்சம் போக மற்ற தொகைகளை தமிழ்நாடு அரசே வழங்குகிறது.
இந்த திட்டத்தில் இந்தியா விலேயே அதிகளவில் நிவாரணத் தொகை பெறக்கூடிய மாநிலமாகவும் தமிழ்நாடு தான் உள்ளது.
90 சதவீத பணிகள் நிறைவு
இதன் தொடர்ச்சியாக நடப் பாண்டில் மீன்பிடி தடைக் காலம் கடந்த ஏப்ரல் 15ஆம் தேதி தொடங்கி தற்போது அமலில் இருக்கிறது. இந்த சூழலில் மீனவ குடும்பங்களுக்கு மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகையான ரூ.8 ஆயிரம் அவரவர் வங்கிக் கணக்குக்கு அனுப்பும் பணிகள் 90 சதவீதத்துக்கு மேல் நிறைவு பெற்று இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிவாரணத்தொகை வழங்குவதில் பல்வேறு கட்டுப் பாடுகளை அரசு விதித்து இருப்ப தாகவும், வேறு அரசு திட்டத்தில் தொகை வாங்கினால் இந்த நிவாரணத் தொகை வழங்கப்படாது என சொல்வதாகவும் மீனவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
மேலும் இந்த திட்டத்தில் ஏற்கெனவே இருக்கும் பயனா ளிகளை குறைக்க வேகம் காட்டும் அதே நேரத்தில், கூடுதலாக பயனாளிகளை அரசு இணைக்கும் முயற்சியிலும் தீவிரம் காட்ட வேண்டும் என்று தென்னிந்திய மீனவர் நலச்சங்கத்தின் தலைவர் கு.பாரதி தெரிவித்தார்.
கடந்த 5 ஆண்டுகளில் நிவாரணத் தொகை பெற்றவர்கள் விவரம்
கடந்த 2020ஆம் ஆண்டில் இருந்து 2024ஆம் ஆண்டு வரையில் மீன்பிடி தடைகால நிவாரணத்தொகை பெற்றவர்களின் விவரம் வருமாறு:-
ஆண்டு – மீனவர்கள் எண்ணிக்கை – மொத்த தொகை – ஒன்றிய அரசின் பங்கு
2020 – 2,16,747 – ரூ.97.53 கோடி – ரூ.32.51 கோடி
2021 – 1,70,000 – ரூ.76.50 கோடி – ரூ 25.50 கோடி
2022 – 1,90,365 – ரூ 85.66 கோடி – ரூ28.55 கோடி
2023 – 1,79,000 – ரூ80.55 கோடி – ரூ26.85 கோடி
2024 – 1,79,000 – ரூ143.20 கோடி – ரூ26.85 கோடி