மும்பை, மே 12- ராணுவப் பணிக்காக புனேயில் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டி.ஆர்.டி.ஓ.) விஞ்ஞானிகள் மனித வடிவிலான ரோபோவை உருவாக்கி வருகின்றனர்.
மனித வடிவ ‘ரோபோ’
மராட்டிய மாநிலம் புனேயில்உள்ளராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டி.ஆர்.டி.ஓ.) விஞ்ஞானிகள் ராணுவப் பணியில் ஈடுபடுத்தும் வகையிலான மனித வடிவில் ரோபோவை உருவாக்கி வருகின்றனர்.சமீபத்தில் புனேயில் நடந்த ரோபோ கண்காட்சியில் விஞ்ஞானிகள் உருவாக்கி வரும் ரோபோக்கள் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தன.
மனித தசைகள் போல இயக்கத்தை உருவாக்கும் இயக்கிகள், சுற்றுப்புற தரவுகளை உடனுக்குடன் சேகரிக்கும் சென்சார்கள், உத்தரவுகளை வழிநடத்தும் தகவல்களை விளக்கும் கட்டுப்பாட்டு அமைப்புகள் ஆகிய 3 கூறுகள் இதன் முக்கிய அம்சங்களாக உள்ளன. இந்த முக்கிய அம்சங்களுடன் 2027-க்குள் ரோபாவை உருவாக்க விஞ்ஞானிகள் கவனம் செலுத்தி வருகின்றனர்.
வெடிப்பொருட்களை கையாளும்
மேலும் இதுகுறித்து விஞ்ஞானி எஸ்.இ.தலலோலே கூறுகையில், “கடந்த 4 ஆண்டுகளாக ரோபோ உருவாக்கும் பணிகள் நடந்து வருகிறது. தற்போது அந்த ரோபோ வளர்ந்த கட்டத்தில் உள்ளது. நாம் கொடுக்கும் உத்தரவுகளை ரோபோ பிரச்சினையின்றி நிறைவேற்ற வேண்டும். அதை உறுதி செய்வதுதான் மிகப்பெரிய சவால்” என்றார்.
மற்றொரு விஞ்ஞானி கூறுகையில், “2 கால்கள், 4 கால்கள் உடைய ரோபோக்களால் பாதுகாப்பு மற்றும் ராணுவம், சுகாதாரம், உள்நாட்டு உதவி, விண்வெளி, தயாரிப்பு துறைகளில் சிறந்த பங்களிப்பை வழங்க முடியும்.
மனித உருவ ரோபோவில் மேல்பகுதி குறைந்த எடையுள்ள ஆயுதங்களுடனும், 24 டிகிரிக்கு சுழன்று செயல்படும் வகையிலும் இருக்கும். திரும்புதல், தள்ளுதல், இழுத்தல், கதவுகளை திறத்தல், வால்வுகளை திறத்தல், தடைகளை தாண்டி வருதல் போன்ற வேலைகளை ரோபோக்களுக்கு கொடுக்க முடியும். ரோபோ தனது கைகளால் வெடிப்பொருட்கள், திரவப்பொருட்களை பாதுகாப்பாக கையாள முடியும்” என்றார்.