சென்னை, மே 12- இந்தியாவிலேயே மின்னணு ஏற்றுமதி, ஜவுளி உற்பத்தியிலும் தமிழ்நாடு சாதனை படைத்துள்ளது. மேலும் பொருளாதார வளர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்பில் தமிழ்நாடு முதலிடத்தில் இருப்பதாக தமிழ்நாடு அரசு பெருமிதத்துடன் கூறியுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதா வது
புதிய முதலீடுகள்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 2021ஆம் ஆண்டு மே மாதம் 7ஆம் தேதி முதலமைச்சராக பொறுப்பேற்றார்.
அவரது தொடர் முயற்சிகளால், தொழிற்சாலைகள் புதிது புதிதாக தொடங்கப்பட, நம் நாட்டிற்குள்ளும், வெளிநாடுகளுக்கும் சென்று செய்து கொள்ளப்பட்ட 897 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் ரூ.10,27,547கோடி புதிய முதலீடுகள் மற்றும் புதியதாக உருவாக்கப்பட்டுள்ள 32.23 லட்சம் வேலைவாய்ப்புகள் காரணமாகத் தொழில் வளர்ச்சியில் தமிழ்நாடு முதலிடம் பெற்றுள்ளது.
சாதனை
தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி கடந்த பத்தாண்டுகளில் இல்லாத அளவில் வேறு எந்த மாநிலமும் அடையாத வளர்ச்சியாக9.69 சதவீத வளர்ச்சி கண்டு இந்தியாவில் முதல் மாநிலம் எனும் பெருமையைப் பெற்றுள்ளது.
‘திராவிட மாடல்’ ஆட்சி யின் திட்டங்களால் தமிழ்நாட்டில் உற்பத்தியாகும் பொருட்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதில் 2020-2021இல் 26.15 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு இருந்த ஏற்றுமதி 2024-2025இல் 52.07 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு இரு மடங்கு உயர்ந்து சாதனை படைத்தது.
மின்னணுப் பொருட்கள் ஏற்றுமதியில் மராட்டியம், உத்தரப்பிரதேசம், கருநாடகம் ஆகிய மாநிலங்களைவிட அதிகமாக 14.65 பில்லியன் டாலர் மதிப்புடைய மின்னணுப்பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியாவில் முதலிடம் எனும் பெருமையைப் பெற்றுள்ளது தமிழ்நாடு.
பெரும் வளர்ச்சி
தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு அரசுத்துறைகள் மூலமாகவும், தனியார் துறையி லும், வேலை வாய்ப்புகளை வழங்குவதில் திராவிட மாடல் அரசு தனிக்கவனம் செலுத்தியது. அதனால், 2020-2021இல் 2.9 கோடியாக இருந்த தொழிலாளர் எண்ணிக்கை 2024-2025- 3.87 கோடியாக உயர்ந்து வேலைவாய்ப்புகளை ஏற்படுத்துவதில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக விளங்குகிறது.
திராவிட மாடல் அரசு செயல்படுத்தி வரும் மக்களைத் தேடி மருத்துவம் திட்டம், இல்லம் தேடிக் கல்வி, நான் முதல்வன், கலைஞர் கனவு இல்லம், முதலான புரட்சிகரமான திட்டங்களால் தமிழ்நாடு அபரிமிதமான வளர்ச்சிகளைக் கண்டு இந்திய மாநிலங்களில் முதல் மாநிலமாக திகழ்கிறது.
உயர்கல்வியில் மாணவர் சேர்க்கை விகிதம் தேசிய அளவில் 26 சதவீதமாக இருப்பது 2023-2024- 51.3 சதவீதமாக உயர்ந்து தமிழ்நாட்டின் மகத்தான சாதனையை வெளிப்படுத்துகிறது.
பெண்களின் நலன்
முதலமைச்சரின் சீரிய நிர்வாகத்திறன்களால் மாநிலம் எங்கும் பெரிய அளவில் ஜாதி மோதல்களோ, தொழிற்சாலைகளில் பிரச்சினைகளோ இல்லாமல் கடந்த 4 ஆண்டு காலமும் தமிழ்நாட்டில் அமைதி நிலவுவது மாநிலத்தில் நிலையான வளர்ச்சிக்கு காரணமாக அமைந்துள்ளது. 2022 ஆகஸ்டு முதல் இதுவரை காவல் நிலைய மரணங்கள் எதுவும் நிகழவில்லை என்பது பாராட்டுக்குரியது.
மேலும், பெண்களுக்கு எதிரான குற்ற விகிதம் 1 லட்சம் மக்கள் தொகையில் இந்தியாவில் 66.4 என்று உள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் 24 என வெகுவாகக் குறைந்து மகளிர் நலன் பாதுகாக்கப்படுகிறது.
2023-2024ஆம் ஆண்டுக்கான அவ்தார் நிறுவன ஆய்வில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு மிகவும் உகந்த பாதுகாப்பான நகரம் சென்னை எனப் பாராட்டப்பட்டு உள்ளது.
பொருளாதார வளர்ச்சியில் 9.69 சதவீதம் இந்தியாவில் தமிழ்நாடு முதலிடம். ஏற்றுமதி தயார் நிலையில் தமிழ்நாடு முதலிடம். தோல் பொருட்கள் ஏற்றுமதி மற்றும் ஜவுளித் துணிகள் ஏற்றுமதியில் தமிழ்நாடு முதலிடம். புத்தாக்கத் தொழில்கள் தரவரிசைப் பட்டியலில் 2018-ல் கடைசி இடத்தில் இருந்த தமிழ்நாடு, 2022 திராவிட மாடல் ஆட்சியில் முதலிடம்
முதலிடம்
பெண் காவல் அய்.பி.எஸ். அதிகாரிகளைக் கொண்டுள்ளதில் தமிழ்நாடு முதலிடம். இந்திய அளவில் காலணிகள் மற்றும் தோல் பொருட்கள் தயாரிப்பில் தமிழ்நாடு 38 சதவீதம் பெற்று முதலிடம். அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள் எண்ணிக்கையில் தமிழ்நாடு முதலிடம். அதிக எண்ணிக்கையில் சதுப்பு நிலங்கள் கொண்டுள்ள மாநிலம் தமிழ்நாடு. வறுமை ஒழிப்பில் தமிழ்நாடு முதலிடம். இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் செயல்படும் தொழிற்சாலைகளில் தமிழ்நாடு முதலிடம்.
இந்தியாவிலேயே அதிக தொழிலாளர்களை கொண் டுள்ளதில் தமிழ்நாடு முதலிடம். தொழிற்சாலைகளில் பணிபுரியும் அதிக பெண் தொழிலாளர்களை கொண்டுள்ளதில் தமிழ்நாடு முதலிடம். அதிகத் தொழிற் சாலைகளைக் கொண்டுள்ளதில் தமிழ்நாடு முன்னணி மாநிலம். உலகளாவிய திறன் மையங்களில் மும்பை, புனே, அய்தராபாத், பெங்களூரூ முதலான நகரங்களைவிட சென்னை 24.5 சதவீத வளர்ச்சியுடன் 94,121 திறன் மையங்கள் கொண்டு இந்தியாவில் தமிழ்நாடு முதலிடம்.
இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.