அய்தராபாத், ஏப்.28- இன்றைய ஆவேசமான அரசியல் சூழலில், எதிர்க்கட்சிகளை நசுக்குவதும், ஊடகங்களை வலுவிழக்கச் செய்வதுமே பிரதான நோக்கமாக இருந்து வருகிறது’ என்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டினார்.
உலகளாவிய நீதி, சமத்துவம் மற்றும் முற்போக்கான ஒத்துழைப்பு மீதான அர்த்தமுள்ள கலந்துரையாடலை ஊக்குவிக்கும் வகையிலான தெலங்கானா மாநிலம் அய்தராபாதில் 26.4.2025 அன்று நடைபெற்ற ‘பாரத் மாநாடு 2025’ நிகழ்ச்சியில் பங்கேற்றபோது இக்கருத்தை அவர் தெரிவித்தார். நிகழ்ச்சியில் அவர் மேலும் பேசியதாவது:
ஜனநாயக அரசியல், உலகம் முழுவதும் அடிப்படையில் மாறிவிட்டது. ஊடகம் மற்றும் சமூக ஊடகங்களுக்கு முக்கியத் துவம் அளிக்கப்படும் இன்றைய நவீன உலகில் பாரம்பரிய அரசியல் நடைமுறைகள் இனி வலுவானதாக இருக்க முடியாது.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பயன்படுத்தப்பட்ட அரசியல் நடைமுறைகள் இனி பொருந்தாது என்ற நிலைதான் உருவாகியுள்ளது.
ஜனநாயக விழுமியங்களை மீட்டெடுப்பதிலும், சுகாதாரம் போன்ற முன்னுரிமைகளை மறுபரிசீலனை செய்வதிலும் உண்மையான சவால் எழுந்துள்ளது.
சில ஆண்டுகளுக்கு முன்பு, முழுமையாக சூழ்ச்சியில் சிக்கி தனிமைப்படுத்தப்பட்டதாக காங்கிரஸ் கட்சி உணர்ந்தது. சுதந்திரமாக செயல்பட முடியாத வகையில், அனைத்து வழிகளிலும் தடைகள் ஏற்படுத்தப்பட்டன.
ஏனெனில், இன்றைய புதிய, ஆவேசமான அரசியல் சூழலில், எதிர்க்கட்சிகளை நசுக்குவதும், ஊடகங்களை வலுவிழக்கச் செய்வதுமே பிரதான நோக்கமாக இருந்து வருகிறது.
இதை எதிர்கொள்ளவே, கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை யிலான 4,000 கி.மீ. பயணத்தை தீர்மானித்து,வரலாற்றை காங்கிரஸ் மாற்றியது.
இந்த நடைப் பயணத்தின் மூலம், நமது எதிரிகள் நம் மீது கோபம், பயம் மற்றும் வெறுப்பை கொண்டிருப்பது தெரியவந்தது. இதை அன்பு மற்றும் பாசத்தின் மூலம் எதிர்கொள்வதே சக்தி வாய்ந்த வழியாக இருக்கும் என்றார்.