சென்னை, ஏப்.18– மறைந்த மேனாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞரின் பிறந்தநாள், வரும் ஜூன் மாதம் மூன்றாம் தேதி முதல் செம்மொழி நாளாக கொண்டாடப்படும் என்று சட்டப் பேரவையில் அமைச்சர்
மு.பெ.சாமிநாதன் கூறினார்.
செம்மொழி நாள்
தமிழ்நாடு சட்டப் பேரவையில் தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரம், எழுதுபொருள் மற்றும் அச்சு ஆகிய மானிய கோரிக்கையில் சட்டமன்ற உறுப்பினர்கள் வைத்த விவாதத்திற்கு அந்தத் துறையின் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் 16.4.2025 அன்று பதில் அளித்து பேசியதாவது:-
வணிக நிறுவனங்களின் பெயர் பலகைகளில் தமிழ் கட்டாயம் இடம் பெறவேண்டும் என்று முதலமைச்சர் எங்களிடம் அடிக்கடி வலியுறுத்தி வருகிறார். இதையடுத்து அரசு மற்றும் வணிகர் சங்க பிரதிநிதிகளுடன் பேசி, வணிகரிடத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. விரைவிலே அதிலே வெற்றி காணப்படும்.
தமிழ் வளர்ச்சி துறையில் தமிழறி ஞர்கள் நினைவாக பல்வேறு விழாக்கள் கொண்டாடப்பட்டு வருகிறது. பிப்ரவரி 21-ஆம் தேதி, உலகத் தாய் மொழி நாளாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. மறைந்த மேனாள் முதலமைச்சர் கலைஞரின் பிறந்தநாள், வரும் ஜூன் மாதம் மூன்றாம் தேதி முதல் ஆண்டுதோறும் செம்மொழி நாள்கொண்டாடப்பட இருக்கிறது.
பத்திரிகையாளர் மன்றம்
சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் கலந்துகொண்டு பத்திரிக்கையாளர் மன்றத்தில் உள் கட்டமைப்பை மேம்படுத்த அரசின் சார்பில் 2.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று அறிவித்திருக்கிறார்.
கலைஞர் அருங்காட்சியகம்
2011-2021 வரையிலான 10 ஆண்டு கால அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் 22 மணி மண்டபங்கள் 4 உருவச் சிலைகள் 2 நினைவுத்தூண் 1 நினைவுத் தூண் மொத்தம் 30 மட்டுமே அமைக்கப்பட் டன. இந்த ஆட்சியில் 3 அரங்கங்கள், 8 மணி மண்டபங்கள் 28 சிலைகள் என 39 திறந்து வைக்கப்பட்டு திறப்பு விழா கண்டிருக்கின்றன.
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ரூ.80 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வரு கின்றன. அதை விரைவில் முதலமைச்சர் திறந்து வைக்க உள்ளார்.
உலகமே வியந்து போற்றுகின்ற வகையில் அமைக்கப்பட்ட கலைஞரின் நினைவிடத்தை தற்போது வரை 56 லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர். இந்த நினைவிட வளாகத்தில் அவரது வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள, கலைஞர் உலகம் அருங்காட்சியகத்தை 5 லட்சம் பேர் வரை பார்வையிட்டு உள்ளனர்.
விருதுகள்
கடந்த 10 ஆண்டு கால அதி.மு.க. ஆட்சியில் வழங்கப்படாமல் இருந்த திரைப்பட விருதுகள், சின்னத்திரை விருதுகள் மற்றும் தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்பட கல்லூரி மாணவர் விருதுதாளர்களுக்கு வழங்கப்பட்டு உள்ளன. தொடர்ச்சியாக வழங்க வேண்டிய விருதுகளுக்கான நடுவர்கள் குழு அமைக்கப்பட்டு, தேர்வு நடை பெற்று வருகிறது.’ வரும் ஜூலை மாத இறுதிக்குள் இந்த விருதுகள் அனைத்தும் வழங்கப்படும்.
திரைக்கருவூலம்
தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப் படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தில் “முத்தமிழறிஞர் கலைஞர் திரைக் கருவூலம்” ரூ.3 கோடியில் அமைக்கப்படும்.
இதழியல்
இதழியல் மற்றும் ஊடகவியல் கல்வி நிறுவனம் சென்னையில் இந்த கல்வியாண்டு முதல் தொடங்கப்படும். மாநிலம் முழுவதும் உள்ள நினைவகங் களில் கண்காணிப்பு கேமராக்கள் ரூ.3.80 கோடியில் பொருத்தப்படும்.
சென்னை கிண்டி. காந்தி மண்டப வளாகத்தில் தியாகி கள் மண்டபங்கள் ரூ.2½ கோடியில் புனரமைக்கப்பட்டு அம்மண்டபங்களில் உள்ள ஒளிப்படங் களை எண்மியமாக்கப்படும்.
அரசின் திட்டங்கள், சாதனைகள் பொதுமக்களுக்கு சென்றடையும் வகையில் 28 மாவட்டங்களிலும் மின் சுவர்கள் ரூ.17.85 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப் படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்திற்கு ரூ.10 கோடி யில் அதிநவீன கருவிகள் மற்றும் உபகர ணங்கள் கொள்முதல் செய்யப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தொடர்ந்து, எழுதுபொருள் மற்றும் அச்சு துறை தொடர்பான அறிவிப்பு களை அமைச்சர் மு.பெ.சாமி நாதன் வெளியிட்டார். அதில் முக்கிய அறி விப்பாக,
தமிழறிஞர்கள், எல்லைக் காவலர்கள், அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு தற்போது மாதம்தோறும் வழங்கப் படும் உதவித்தொகை உயர்த்தி வழங்கப்படும். அதன்படி, தமிழறிஞர்களுக்கு ரூ.4,500-லிருந்து ரூ.7,500 ஆக வும், அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு ரூ.3,500-லிருந்து ரூ.7.500 ஆக வும், எல்லைக் காவலர்களுக்கு ரூ.5,500-லிருந்து ரூ.7,500- ஆகவும் உயர்த்தி வழங்கப்படும். இதற்காக ரூபாய் 3 கோடியே 90 லட்சத்து 60 ஆயிரம் கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்படும்.
அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் பயனாளிகளின் எண்ணிக்கை 100-லிருந்து 150 ஆக உயர்த்தப்படும். இதற் காக, ரூ. 48 லட்சம் கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்படும். தமிழ் வளர்ச்சிக் கழகம் தொய்வின்றி செயற்பட வைப்புத் தொகையாக ரூ.2 கோடி வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.