சென்னை, ஏப். 15- தனியார் பள்ளிகளில் ஆர்டிஇ திட்டத்தில் இலவச மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு அடுத்த வாரத்தில் தொடங்கவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி (ஆர்டிஇ) தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களில் ஏழைக் குழந்தைகள் சேர்க்கப்படுவார்கள்.
மாநிலம் முழுவதும் உள்ள 8 ஆயிரத்துக்கும் மேலான தனியார் பள்ளிகளில் 1.1 லட்சம் இடங்கள் உள்ளன. இந்த திட்டத்தில் எல்கேஜி அல்லது ஒன்றாம் வகுப்பில் சேருபவர்கள் 8ஆம் வகுப்பு வரை கட்டணம் செலுத்தாமல் இலவசமாக படிக்கலாம்.
வரும் கல்வியாண்டுக்கான (2025-2026) இலவச சேர்க்கைக்கு இணையதள விண்ணப்பப் பதிவு ஏப். 3ஆவது வாரத்தில் தொடங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது:
ஆர்டிஇ திட்டத்தின் கீழ் சிறுபான்மை தகுதி பெறாத அனைத்து தனியார் மழலையர், பிரைமரி, மெட்ரிக், அய்சிஎஸ்இ மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகளில் இலவசமாக மாணவர் சேர்க்கை பெறமுடியும். இந்த திட்டத்தின்கீழ் வாய்ப்பு மறுக்கப்பட்ட நபர்கள் மற்றும் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினர் உள்ளிட்டோர் விண்ணப்பிக்க வேண்டும்.
நலிந்த பிரிவினர் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு குறைவாக இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் வருமானம், இருப்பிடம், ஜாதிச் சான்றிதழ்களை சமர்ப்பிப்பது அவசியமாகும். எனவே, சேர்க்கைக்கு தேவையான ஆவணங்களை முன்கூட்டியே தயாராக வைத்துக் கொள்ள வேண்டும்.
இதையடுத்து விண்ணப்பப் பதிவுக்கான அறிவிப்பாணை வெளியானதும் பெற்றோர் rte.tnschools.gov.in எனும் வலைத்தளம் வழியாக விண்ணப்பிக்கலாம்.
ஒரு பெற்றோர் அதிகபட்சம் தங்கள் இருப்பிடத்துக்கு அருகே உள்ள 5 பள்ளிகளில் விண்ணப்பிக்கலாம்.
பள்ளியில் நிர்ணயித்த இடங்களை விட அதிக விண்ணப் பங்கள் வந்தால் வெளிப் படையான குலுக்கல் முறையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர். இவ்வாறு அவர்கள் கூறினர்.