சென்னை, ஏப். 8- குளித்தலை மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனைக்கு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பெயர் சூட்டுவதற்குரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சட்டமன்றத்தில் 7.4.2025 அன்று உறுபபினர்கள் கேள்விக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலளித்தார்.
திருப்பத்தூர் மாவட்டம், மாதனூர் ஊராட்சி ஒன்றியம், மின்னூர் ஆரம்ப சுகாதார நிலை யத்தின்கீழ் ஆலங்குப்பம் துணை சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. ஆலங்குப்பம் துணை சுகாதார நிலையத்திற்கு ரூ.30 இலட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டடப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அந்தப் பணிகள் விரைவுப்படுத்தப்பட்டு, மிக விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் முதன்முதலில் தேர்தல் களத்தில் நின்ற தொகுதி குளித்தலை. குளித்தலையில் தற்போது மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை ஒன்று தரமுயர்த்தப்பட்டு, கட்டும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நிச்சயம், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுடைய அறிவுறுத்தலைப் பெற்று, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு கலைஞரின் பெயர் சூட்டப்படுவதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்.மா.சுப்பிரமணியன் சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது பதிலளித்தார்.