சென்னை,ஏப்.6- தமிழ்நாட்டில் 8 அய்பிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை டிஜிபியாக சீமா அக்ரவால் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமை செயலாளர் தீரஜ் குமார் வெளியிட்டுள்ள உத்தரவின் விவரம்:
சென்னை காவல் துறை தலைமையக அய்ஜி விஜயேந்திர பிதாரி சென்னை கூடுதல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். அய்பிஎஸ் அதிகாரி கபில் குமார் ஷரத்கர் சென்னை அமலாக்கப் பிரிவு அய்ஜியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை அமலாக்கப் பிரிவு அய்ஜி ஜி.கார்த்திகேயன், சென்னை போக்குவரத்துத் துறை அய்ஜியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். லஞ்சம் மற்றும் ஊழல் கண்காணிப்புத் துறை இணை ஆணையர் சந்தோஷ் குமார், சென்னை பொருளாதார குற்றப்பிரிவு அய்ஜியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். சென்னை பொருளாதார குற்றப் பிரிவு அய்ஜி சத்யப்ரியா காவலர் நலன்பிரிவு அய்ஜியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
காவலர் நலன்பிரிவு டிஅய்ஜி எம்.துரை காவல் துறை தலைமையக டிஅய்ஜியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை டிஜிபியாக சீமா அகர்வால் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். குடிமைப் பொருட்கள் மற்றும் உணவு வழங்கல் துறை அய்ஜி ரூபேஷ் குமார் மீனா கூடுதல் பொறுப்பாக அத்துறையின் டிஜிபி பொறுப்புகளை கவனித்துக் கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.