சென்னை, ஏப்.3- திருவான்மியூர், திருவொற்றியூர், ஆவடியில் இருந்து தென் மாவட்டங்களுக்கு அரசு விரைவு போக்குவரத்துக் கழக பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. 50-க்கும் மேற்பட்ட புதிய வழித்தடங்கள் கண்டறியப் பட்டுள்ளதாக தெரிகிறது.
அரசு விரைவு போக்குவரத்துக் கழகமும் தனியார் ஆம்னி பேருந்துகளுக்கு இணையாக பேருந்துகளை தரம் உயர்த்தி இயக்கி வருகிறது. நவீன தானியங்கி தீயணைப்பு கருவி பொருத்தப்பட்ட 50 புதிய பேருந்துகள் (29 ஏ.சி. வசதி இல்லாத பேருந்துகள், 21 ஏ.சி. பேருந்துகள்) வருகிற மே மாதம் முதல் அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் இயக்கப்பட இருக்கிறது.
இந்த நிலையில் பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு இணங்க அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் சார்பில் புதிய வழித்தடங்களில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், பல்வேறு காரணங்களுக்காக நிறுத்தப்பட்ட 25 வழித்தடங்கள் உள்பட 50-க்கும் மேற்பட்ட புதிய வழித்தடங்களில் அரசு விரைவு போக்குவரத்துக் கழக பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
ஜெயங்கொண்டம்-பெங்களூரு வழித்தடத்தில் பேருந்து போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார். இந்த பேருந்து இரவு 8 மணிக்கு ஜெயங்கொண்டத்தில் இருந்து புறப்பட்டு அரியலூர், குன்னம், பெரம்பலூர், ஆத்தூர், சேலம், ஓசூர் வழியாக மறுநாள் அதிகாலை 5 மணிக்கு பெங்களூரை சென்ற டையும். மறுமார்க்கத்தில் தினமும் இரவு 9 மணிக்கு பெங்களூரில் இருந்து புறப்பட்டு அதே மார்க்கத்தில் மறுநாள் காலை 6 மணிக்கு ஜெயங்கொண்டத்தை வந்தடைகிறது.
முன்னதாக, மயிலாடுதுறை-கோவை, மயிலாடுதுறை-பெங்களூரு, சென்னை-குள்ளம்பாடி, திருவள்ளூர்-நெல்லை, திருத்துறை பூண்டி-சென்னை போன்ற வழித்தடங்களில் அரசு விரைவு போக்குவரத்துக் கழக பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
விரைவில் திருவான்மியூர், திருவொற்றியூர், ஆவடி ஆகிய இடங்களில் இருந்து நெல்லை, தூத்துக்குடி, நாகர்கோவில், திருச்செந்தூர் உள்ளிட்ட தென் மாவட்டங்களை சேர்ந்த இடங்களுக்கும் புதிய வழித்தடத்தில் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. அந்த வகையில் 50-க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் அரசு விரைவு போக்குவரத்துக் கழக பேருந்துகள் இயக்கப்பட இருப்பதாக தெரிய வந்துள்ளது.