கோவையில் வனத்துறை பணியாளர் தேர்வின் போது தேர்வெழுத வந்த நபர்கள் வேறு – வேலைக்கு நேர்காணலுக்கு வந்த நபர்கள் வேறு – என்று தெரிந்த உடன் சிலர் கைது செய்யப்பட்டனர்.
இது தமிழ்நாடு ஆகையால் இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. ஆனால், வடக்கே இருந்து இன்று நம்மிடையே ஒன்றிய அரசுப் பணிகளில் மாற்றலாகி வரும் பலர் தேர்வுகளை எப்படி எழுதினார்கள் என்பது அன்றாடம் செய்தியாக வந்த ஒன்றுதான்.
திரைப்படங்களில் வருவதைப் போல் அரசுத் தேர்வில் ஆள் மாறாட்டம் என்பது வட இந்தியாவில் மிகவும் சர்வசாதாரணம். ஆனால், அவர்கள் தென் மாநிலங்களிலும் வந்து பித்தலாட்டம் செய்து வருகின்றனர்.
வடமாநிலங்களில், ஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுதித் தருபவர்களுக்கு அந்த வேலையின் ஊதியத்தைப் பொறுத்து பணம் தருகிறார்கள்.
இதற்கு என ஒரு தேர்ந்த வலைப்பின்னல் இருக்கிறது. நன்கு தேர்வு எழுதி பயிற்சி பெற்ற (தற்போது வேலையில் கூட இருப்பவர்களும்) நிறையப் பேரை அவர்கள் வைத்திருப்பார்கள். இந்த இடைத் தரகர்களைப் பிடித்து விட்டால் போதும். அவர்கள் மூன்று வழிகளில் வேலை வாங்கித் தருவார்கள்.
முதல் வழி தேர்வுக்கு ஒரு நாள் முன்னதாக வினாத்தாள் தருவது. இதுதான் நீட் தேர்வின் போது பீகார், ஜார்கண்ட், அரியானா மற்றும் குஜராத்தில் நடந்தது. இன்றுவரை விசாரணை நடந்துகொண்டே இருக்கிறது. அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். தொடர்பான தேர்வு வினாத்தாள் கூட அவர்களால் தர முடியும்.
இரண்டாவது ஆள் மாறாட்டம் சாதாரண பல்கலைக்கழக தேர்வுகளிலேயே ஆள் மாறாட்டம் என்பது கிரிமினல் குற்றமாக கருதப்படும். ஆனால் இந்த மாதிரி தேர்வுகளில் கூட அவர்கள் சகஜமாக வந்து எழுதுவார்கள் – பெரிதாக மாட்டிக் கொண்டதே இல்லை. தொடர்ச்சியாக எழுதிப் பழகியவர்கள் தேவையான மதிப்பெண்களைப் பெற்றுத் தந்து விடுவார்கள்.
மூன்றாவது தேர்வு நடத்தும் இடத்தில் உள்ள பெரிய அதிகாரிகள் மூலம் மதிப் பெண்களில் திருத்தம் செய்து வெற்றி பெற வைத்து விடுவார்கள். இது கிட்டத்தட்ட தொடர் சங்கிலி தொழில்நுட்பம் போல மிக பாதுகாப்பாகத்தான் நடந்து கொண்டிருக்கிறது. எப்படி அந்தக் காலத்தில் வங்கி கணக்கு துவங்க ஏற்கெனவே அந்த வங்கியில் கணக்கு வைத்திருப்பவர் கையெழுத்து போட வேண்டுமோ, அதுபோல இந்த வலைப்பின்னல் வேலை வாங்கியவர் சொன்னால்தான் அதை செய்ய ஒத்துக் கொள்வார்கள். ஏனென்றால் அவருக்கும் ஆபத்து – எனவே பாதுகாப்பான நபர்களை மட்டுமே அறிமுகப்படுத்துவார்கள்.
இப்படித்தான் ஒன்றிய அரசின் ஏராளமான பணிகள் வடமாநிலத்தவர்களுக்கு தாரை வார்க்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. நமது வரியும் தேவையில்லாமல் அவர்களுக்கே சென்று சேர்கிறது. நமது பிள்ளைகள் படிப்பதற்கு தேவையான கல்வி நிதியை கூட தராமல் நாகரீகமற்றவர்கள் என்று அமைச்சர் வரை பேசுகிறார்கள்.
ஆனால், பல ஆண்டுகளாக இப்படி ஒரு பித்தலாட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
2017ஆம், ஆண்டில் அஞ்சல் பணிக்கான தேர்வில் தமிழ் பாடத்தில் அரியானாவைச் சேர்ந்த மாணவர்கள் முதல் தர மதிப்பெண் பெற்றனர். முதுகலை தமிழ் படித்த தமிழ் பட்டதாரிகள் கூட திணறும் பதில்களை அவர்கள் எப்படி எழுதினார்கள் என்று உடன் தேர்வு எழுதியவர்களை விசாரணை செய்த போது தமிழே தெரியாதவர்களாக இருந்த பிறகுதான் இந்த பிரச்சினை வெளிவந்து சி.பி.அய். விசாரணை வரை சென்றது. கேரளாவிலும் இப்படி மோசடி செய்துள்ளனர்.
வட இந்திய மோசடி நபர்களின் பலமே, எந்த விவகாரத்தில் மாட்டிக் கொண்டாலும், போலி சர்டிபிகேட் விவகாரமாக இருந்தாலும் சரி ஆள் மாறாட்டமாக இருந்தாலும் சரி அந்த மேலிடமே நேரடியாக வந்து அவர்களை காப்பாற்றும். வியாபம் ஒன்றே போதுமே 15 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்துவந்த மத்தியப் பிரதேச அரசுப்பணி மருத்துவக் கல்லூரி சேர்க்கை இதர தேர்வுகள் அனைத்தும் ஆள்மாறாட்டம் உள்ளிட்ட பல மோசடிகள் நடந்தது.
இந்த விவகாரம் வெளியே வந்த பிறகு அம்மாநில ஆளுநரின் மகனின் பெயரும் வெளியே வந்ததால் அவர் தற்கொலை செய்துகொண்டார். உண்மையை வெளிக்கொண்டு வந்த ஊடகவியலாளர்கள் வரிசையாக மிகவும் சந்தேகத்துக்குரிய முறையில் இறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.