தொழிற்கல்வி பயில்வதற்காக ரூ.50 ஆயிரம் உதவித் தொகை பெற தகுதியுள்ள மாணவர்கள் யார்? தேனி மாவட்ட ஆட்சியர் விளக்கம்

viduthalai
1 Min Read

தேனி, மார்ச் 6 முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து தொழிற்கல்வி பயில்வதற்காக நிதி உதவி வழங்கும் திட்டம் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் ஏழை மாணவ, மாணவிகளுக்கு அவர்கள் படிப்பினைத் தொடர ரூ.50 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்.. எப்படி விண்ணப்பிக்கலாம் என்பது குறித்து தேனி மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங் விளக்கம் அளித்துள்ளார்.

தேனி மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறுகையில், “முதமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து தொழிற்கல்வி பயில்வதற்காக நிதி உதவி வழங்கும் திட்டம் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் மிகவும் ஏழ்மையான நிலையில் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள், பல் மருத்துவக் கல்லூரிகள், வேளாண்மைக் கல்லூரிகள், கால்நடை மருத்துவக் கல்லூரிகள் மற்றும் சட்டக் கல்லூரிகளில் பயிலும் ஏழை மாணவ, மாணவிகளுக்கு அவர்கள் படிப்பினைத் தொடர ரூ.50 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படுகிறது.

தகுதிகள்

இத்திட்டத்தில் பயன்பெற மாணவ, மாணவிகள் அரசின் ஒற்றைச் சாளர முறையின் வழியாக சேர்க்கை பெற்றிருக்க வேண்டும். நிர்வாக ஒதுக்கீட்டில் சேர்க்கை பெறும் மாணவ, மாணவிகள் இத்திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற இயலாது. தமிழ்நாட்டில் இருப்பிடச்சான்று பெற்றவராக இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். இத்தகைய தகுதியுள்ளவர்கள் அந்தந்த வட்டத்துக்கு உட்பட்ட வட்டாட்சியரை அணுகி உரிய படிவத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பத்துடன் 12ஆ-ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல், ஒற்றைச் சாளர முறையில் சேர்க்கை பெற்றதற்கான ஒதுக்கீடு சான்று, கல்லூரியில் பயிலும் சான்று, இருப்பிடச் சான்று, பிறப்பிடச் சான்று, வருமானச் சான்று, ஆதார் அட்டை நகல், குடும்ப உறுப்பினர் சான்று ஆகியவை இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்” இவ்வாறு தேனி மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *