சென்னை, மார்ச் 4- நாட்டின் பெருநகர பட்டியலில் சென்னையை சேர்க்கும் வகையில், 174 சதுர கி.மீ., பரப்பில், 10 மண்டலம், 155 வார்டுகளுடன் செயல்பட்ட சென்னை மாநகராட்சியில், புறநகரின் ஒன்பது நகராட்சிகள், எட்டு பேரூராட்சிகள் மற்றும் 25 ஊராட்சிகள் 2011இல் இணைக்கப்பட்டன.
இதனால், 426 சதுர கி.மீ., பரப்பிற்கு, சென்னை மாநகராட்சியின் எல்லை விரிவடைந்தது. இதனால், 200 வார்டுகள், 15 மண்டலங்களாக எண்ணிக்கை உயர்ந்தது. சென்னை மாநகராட்சியை பொறுத்தவரை, எல்லையில் 22 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. ஆனால், 16 சட்டமன்ற தொகுதிகள் மட்டுமே, சென்னை மாவட்டத்தில் உள்ளன.
மற்ற சட்டமன்ற தொகுதிகள், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ளன. மேலும், மாநகராட்சி மண்டலத்தின் நிர்வாக எல்லைகளும், சட்டமன்ற தொகுதிகளின் எல்லைகளும், ஒருசேர அமையவில்லை.
மக்கள் தொகை அதிகரிப்பு
எனவே, மக்கள் தொகை அதிகரிப்பு, துரித சேவை, நிர்வாக வசதி போன்ற காரணங்களால், சட்டமன்ற தொகுதி வாரியாக மண்டலங்கள் பிரிக்கப்படும் என, சட்டமன்றத்தில், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு, 2022இல் அறிக்கை வெளியிட்டார்.
அதன்பின், மண்டலங்கள் சீரமைக்கும் பணிகள் துவக்கப்பட்டன. முதலில், 24 மண்டலங்களாக உயர்த்த, அரசுக்கு பரிந்துரை அளிக்கப்பட்டது. மேலும், புறநகர் பகுதிகளை மாநகராட்சியுடன் இணைத்து, வார்டு எண்ணிக்கையை அதிகரிக்கவும் ஆலோசனை நடந்தது.
அரசாணை வெளியீடு
ஆனால், தொடர்ந்து மாநகராட்சி எல்லைகள் விரிவாக்கம் செய்யப்பட்டால், நிர்வாக சிக்கல் ஏற்படும் என, ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து பல்வேறு கட்ட ஆலோசனைக்குப் பின், சென்னை மாநகராட்சியின் மண்டலங்களை, 20 ஆக விரிவாக்கம் செய்து, நகராட்சி நிர்வாகத்துறை செயலர் கார்த்திகேயன் அரசாணை வெளியிட்டுள்ளார்.
ஆறு மண்டலங்கள் உருவாக்கம்
ஏற்கெனவே இருந்த திருவொற்றியூர், மணலி, மாதவரம், தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க., நகர், அம்பத்துார், அண்ணா நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்துார், அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லுார் மண்டலங்களும், அந்தந்த சட்டமன்ற தொகுதிகள் அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளன.
கொளத்துார், வில்லிவாக்கம், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி, தியாகராயர் நகர், விருகம்பாக்கம், பெருங்குடி – சோழிங்கநல்லுார் ஆகிய ஆறு மண்டலங்கள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன. தற்போது இருக்கும் மணலி மண்டலம், சட்டமன்ற தொகுதியாக இல்லாததாலும், மூன்று சட்டமன்ற தொகுதிக்குள் வருவதாலும், அம்மண்டலம் திருவொற்றியூர் மண்டலத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.