திருவெறும்பூர், பிப். 21- திருவெறும்பூரில் நடைபெற்ற பெரியார் பேசுகிறார் நிகழ்ச்சி யில், சிறுவர், சிறுமியர்களின் பல்சுவை நிகழ்ச்சிகள் நடைபெற் றன. ஒவ்வொரு மாதமும் பெரியார் பேசுகிறார் நிகழ்ச்சி, திருவெறும் பூர் பெரியார் படிப்பகத்தில் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் 16.02.2025 ஞாயிறன்று நடைபெற்ற 5 ஆவது நிகழ்ச்சிக்கு க.புனிதா தலைமையேற்றார். வெ.ரூபியா முன்னிலை வகித்தார். இராம.பிரியா வரவேற்புரை ஆற்றினார். நிகழ்ச்சிகளை பெல் நிறுவனத் தோழர் மு.ஆண்டிராஜ் தொகுத்து வழங்கினார்.
பெரியாரியக் கருத்துகள் குறித்துக் கல்லூரி நண்பர்களிடம் ஏற்படும் விவாதங்கள், அதைக் கையாளும் விதம், பிரச்சினைகள் இன்றி பேசும் முறைகள், எளிதாக எடுத்துரைக்கும் விதம், இனியும் கற்றுக் கொள்ள வேண்டிய அணுகுமுறைகள் போ ன்றவை குறித்து பு.வி.கியூபா உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து பகத் எனும் சிறுவன் மிமிக்ரி மற்றும் மோனோ ஆக்டிங் செய்து பாராட்டைப் பெற்றார்.
இரட்டையர்களான அருவி, ஆற்றல் இருவரும் இனிமையான பாடல் ஒன்றைத் தந்தனர். கல்வி குறித்த அற்புதமான உரையை ஜெ.ஆதினி வழங்கினார். அதேபோல நவிலினி ஒரு பாடல் பாடி பரவசம் தந்தார். மழலை மொழியில் சி.கி.கவின் திருக்குறள் ஒப்புவித்தார். அம்பேத்கர், பெரியார், காரல் மார்க்ஸ் மூவரின் முதல் எழுத்தைத் தன் பெயராகக் கொண்டுள்ள “அபெகா” எனும் அழகிய சிறுமி கதை ஒன்றை வடித்தார்.
அதேபோல சி.கி.சஞ்சய் எனும் சிறுவன் உணர்ச்சி கரமாய் ஒரு உரை வழங்க, கயல் மற்றும் இனியா தம் பங்கிற்கு பாடல்களை இசைத்தனர். இறுதியாய் தமிழர் வரலாறு எனும் தலைப்பில் அறிவுச்செல்வன் செய்திகளைக் குவித்திட, அவரின் சகோதரர் அன்புச்செல்வன் கவிதைகளால் மனங்களை நிறைத்தார். ஆக மொத்தம் பெரியார் பிஞ்சுகள் மட்டுமின்றி, ஆதரவாளர்கள் குடும்பங்களில் இருந்தும் குழந்தைகள் பங்கேற்று தம் திறமைகளை வெளிப்படுத்தினர்.
இந்நிகழ்வில் நிகழ்வில் மு.சேகர், க.திலீப்குமார், போ.ஜெகதீஸ்வரன், முத்து புவனேஸ்வரி, இரா.சவுந்தர்யா, பி.அனுராதா, விடுதலை கிருட்டினன், இரா.நவீன், இரா.தமிழ்ச்சுடர், ஆ.பாண்டிக்குமார், ச.பாலகங்காதரன், சி.கருஷ்ண குமார், பி.சித்ரா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இறுதியில் வெ.ரூபியா நன்றி கூறினார்.