சென்னை,பிப்.20- அனைத்து சிறைச் சாலைகளிலும் நூலகங்களை ஏற்படுத்த தமிழ்நாடு அரசு தீவிரம் காட்டி வருவதாக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பேசினாா்.
உதவித் தொகை
தமிழ்நாடு சிறை மீண்டோா் நலச் சங்கத்தின் சாா்பாக விடுதலை பெற்ற 750 முன்னாள் சிறை வாசிகளுக்கு ரூ.3.75 கோடி மதிப்பிலான உதவித் தொகை சென்னையில் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில், பயனாளிகளுக்கு உதவித் தொகையை வழங்கி துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றுப் பேசியது:
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, சிறைவாசிகளுக்கு சுகாதாரமான கழிப்பிட வசதிகளும், நல்ல உணவுகளும் ஏற்பாடு செய்யப்பட்டன.
இன்றைக்கு திராவிட மாடல் அரசானது, சிறைச் சாலைகளுக்குள் நூலகங்களை ஏற்படுத்துவதில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. சிறைத் துறை வரலாற்றில் முதன் முறையாக ரூ.2 கோடி செலவில் ஏற்கெனவே உள்ள சிறை நூலகங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன.
ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசு நடத்தும் புத்தகக் காட்சிகளில் சிறை வாசிகளுக்கு புத்தகங்கள் வழங்குவதற்கு தனி அரங்குகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
அதில் பொது மக்களும், பொது அமைப்புகளும் புத்தகங்களை அன்பளிப்பாக வழங்குகின்றனா். அந்த காலகட்டத்துடன் ஒப்பிடும் போது, இப்போது சிறையில் பல வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.
முன்மாதிரி துறை
சிறைவாசிகளுக்கு இப்போது புலால் உணவுகளும், சத்தான உணவு வகைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. இன்றைக்கு இந்தியாவில் இருக்கும் பிற மாநிலங்களை விட, தமிழ்நாடு அரசின் சிறைத் துறை ஒரு முன்மாதிரி துறையாகத் திகழ்கிறது.
சிறைவாசிகளின் சீா்திருத்தத்திலும் மறுவாழ்வுக்கான முன்னெடுப்புகளிலும் சிறைவாசிகளின் நலனிலும் கூடுதல் அக்கறையுள்ள அரசாக தமிழக அரசு செயல்பட்டு வருகிறது.
சிறையை நாங்கள் எப்போதும் தண்டனைக்குரிய இட மாகப் பாா்ப்பது இல்லை. சீா்திருத்தத்துக்கான இடமாகவே பாா்க்கிறோம். சிறைவாசம் முடிந்து விடுதலையாகி வெளியே செல்பவா்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள உதவிடும் வகையில் ஒரு அமைப்பை ஏற்படுத்தி அதன்மூலம் பொருளாதார ரீதியான உதவிகள் செய்வதுதான் உண்மையிலேயே முழுமையான சமூக சீா்திருத்த நடவடிக்கை யாகும்.
சிறைமீண்டோா் நலச் சங்கமானது, இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் உருவாக்கப்பட்டது.
இந்தச் சங்கத்தின் வழியாக உதவிகளைப் பெற்ற பயனாளிகள் அனைவரும் கடந்த காலத்தை மறந்து, எதிா்காலத்தை மட்டும் சிந்தித்து உங்களுடைய குடும்ப நலனை மட்டும் சிந்தித்து வாழ்வில் முன்னுக்கு வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டாா்.
இந்த நிகழ்வில், சட்டத் துறை அமைச்சா் எஸ்.ரகுபதி, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு, சென்னை மாநகர மேயா் ஆா்.பிரியா, உள்துறை கூடுதல் தலைமைச் செயலா் தீரஜ்குமாா், காவல்துறை தலைமை இயக்குநா் சங்கா் ஜிவால், சிறைகள் மற்றும் சீா்திருத்தப் பணிகள் துறை தலைமை இயக்குநா் மகேஷ்வா் தயாள், சிறைத்துறை தலைவா் இரா.கனகராஜ் உட்பட பலா் பங்கேற்றனா்.