பெரியாரியல் பயிற்சிப் பட்டறை 09.02.2025 அன்று சென்னை, கொளத்தூரில் நடைபெற்றது. அங்கு நடைபெறும் வகுப்புகளைப் பார்வையிடவும், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை மரியாதை நிமித்தம் சந்திக்கவும் ‘அருட்தந்தை’ இராஜன் இமானுவேல் (பாதிரியார்) அவர்கள் வருகை தந்திருந்தார்.
நிகழ்ச்சிக்கு ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வருகை தந்ததும், முதல் நபராக மேடை ஏறி, பாதிரியார் அவர்கள் பொன்னாடை அணிவித்துச் சிறப்பு செய்தார். இது வருகை புரிந்த புதிய மாணவர்களுக்கு மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் கொடுத்தது.
இந்நிலையில் பயிற்சிப் பட்டறைக் குறித்த தொகுப்புக் கட்டுரை 11.02.2025 நாளிட்ட ‘விடுதலை’ நாளிதழில் வெளிவந்தது.கட்டுரை முழுவதையும் வாசித்த பாதிரியார் இராஜன் இமானுவேல், கீழ்க்கண்ட செய்தியுடன், படத்தையும் சேர்த்து, தனது ‘வாட்சப் ஸ்டேட்டஸ்’ ஆக வைத்திருந்தது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
அந்தப் படத்தில் உள்ள செய்தி:
குறுகிய காலத்தில் அரும்பாடுபட்டு, தோழர்கள் இந்த ஏற்பாட்டைச் செய்துள்ளார்கள். அரங்கத்திற்கு வந்ததும் அருட்தந்தை பாதிரியார் அவர்கள் என்னை வரவேற்றார். ‘மதவெறி மாய்ப்போம், மனிதநேயம் காப்போம்’ எனும் தலைப்பிற்கு, இந்த ஒரு செயலே போதுமானது. நாமோ மதமற்றவர்கள், எந்த மதத்திலும் நமக்கு ஈடுபாடு கிடையாது, நமது வாழ்க்கையே பகுத்தறிவு நெறி கொண்டது.
அதே நேரம் மத ஈடுபாடு கொண்டவர்கள் இங்கு நிறைய உள்ளனர். அவர்கள் மீது நமக்கு வெறுப்பு கிடையாது. அவர்களின் கருத்துகளை நாம் மாற்ற நினைக்கிறோம். ஆனால் ஒருபோதும் அவர்களை நாம் அழிக்க நினைப்பதில்லை. ஒருங்கிணைந்த சமுதாயத்தை உருவாக்குவதே திராவிட இயக்கத்தின் இலக்கு!