சத்தியமங்கலம் – பட்டரமங்கலம் கிராம மக்கள் ஏராளமானோர் கழகப் பொதுச் செயலாளர் முன்னிலையில் இயக்கத்தில் இணைந்தனர்!

viduthalai
4 Min Read

கோபி, பிப்.13 கோபிசெட்டிபாளையம் கழக மாவட்ட சத்தியமங்கலம் – பட்டரமங்கலம் கிராமத்தில் உள்ள ஏராளமான மக்கள் திராவிடர் கழகத்தில் இணைந்தனர். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என குடும்பம் குடும்பமாக கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ் முன்னிலையில் இயக்கத்தில் இணைந்து இன எழுச்சி முழக்கமிட்டனர். ஊரே விழாக் கோலம் பூண்டது.

நீண்ட கால பிரச்சினை தீர்ந்தது

கோபிசெட்டிபாளையம் கழக மாவட்டம் – சத்தியமங்கலம் அருகே புதுபீர் கடவு ஊராட்சி – பட்டரமங்கலம் கிராமம் உள்ளது. இந்த கிராமம் சத்தியமங்கலம் புலிகளின் காப்பகம் அமைந்துள்ள வன எல்லையில் அமைந்துள்ளது. இங்குள்ள மக்கள் அனைவரும் விவசாய கூலிப் பணிக்குச் செல்லும் எளிய மக்கள் ஆவர். கோபிசெட்டிபாளையம் கழக மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் மு. சென்னியப்பன், மாவட்ட மாணவர் கழக தலைவர் சூர்யா, நம்பியூர் ஒன்றிய இளைஞரணி தலைவர் தட்சிணாமூர்த்தி, நம்பியூர் ஒன்றிய செயலாளர் பிரசாந்த், நம்பியூர் ஒன்றிய தலைவர் திருமூர்த்தி உள்ளிட்ட கழகப் பொறுப்பாளர்கள் அந்தக் கிராமத்திற்கு நேரடியாகச் சென்று கிராம மக்களை சந்தித்துப் பேசினர். கிராமத்தில் நீண்டகாலமாக அரசு இடத்தை பொது மக்கள் பயன்படுத்த முடியாத நிலை இருந்தது. கழகத் தோழர்களின் முயற்சியால் நடவடிக்கை எடுக்கப்பட்டு தீர்வு காணப்பட்டது. இதனையடுத்து கிராம மக்கள் தாமாகவே முன்வந்து தந்தை பெரியாரின் இயக்கத்தின் கொள்கைகளை ஏற்று இயக்கத்தில் இணைந்து பணியாற்ற விரும்பினர்.

கழகக் கொடியேற்றி – கழகப் பெயர் பலகைத் திறப்பு

திராவிடர் கழகம்

12.2.2025 அன்று தந்தை பெரியார் 146ஆவது பிறந்த நாள் விழா மற்றும் திராவிடர் கழகக் கிளை தொடக்க விழா மிகுந்த எழுச்சியோடு நடைபெற்றது. விழாவிற்கு வருகை தந்த கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ் அவர்களை கிராம மக்கள் இருபுறமும் வரிசையாக நின்று வாழ்த்தொலி முழக்கங்கள் எழுப்பி பட்டாசு வெடித்து, மேளதாளம் முழங்க வரவேற்றனர். கழகத்தின் இலட்சியக் கொடியை கழகப் பொதுச் செயலாளர் ஏற்றி வைத்தார். திராவிடர் கழக பெயர்ப் பலகையையும் திறந்து வைத்தார். கிராமத்திலுள்ள ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என ஏராளமானோர் திரண்டிருந்தனர். மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் வழக்குரைஞர் மு. சென்னியப்பன் தலைமையுரை ஆற்றினார்.
தனது உரையில் ‘‘திராவிடர் கழகக் கொடி ஒரு ஊரில் பறக்கிறது என்றால் அந்த ஊரில் காவல் நிலையம் திறக்கப்பட்டதாகப் பொருள், அந்த ஊரில் ஒரு மருத்துவமனை, ஒரு தீயணைப்பு நிலையம், ஒரு நூல்நிலையம், ஒரு அறிவியல் ஆராய்ச்சி மய்யம் திறக்கப்பட்டதாகப் பொருள்’’ என்று எடுத்துக் கூறினார். கழகப் பேச்சாளர் தஞ்சை இரா. பெரியார்செல்வன், ‘‘தந்தை பெரியாரின் அடிப்படைக் கொள்கையே ஜாதி ஒழிப்புதான், இதற்காகத்தான் சுயமரியாதை இயக்கத்தையே உருவாக்கினார். பெரியாரின் பெரும் பணியே மனிதநேயப் பணி தான் – மனிதனை மனிதனாக மதிக்க வேண்டும்’’ என்பதுதான் என்று குறிப்பிட்டார்.

மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா. ஜெயக்குமார் தனது தொடக்க உரையில் ‘‘திராவிடர் கழகம் என்பது அடிப்படையில் மனிதநேய இயக்கம். இந்த இயக்கத்தின் கொள்கைகளை ஏற்றுக் கொண்டவர்கள் தனி மனித வாழ்விலும் வெற்றி பெறுவார்கள். சிக்கனமாக வாழ்வார்கள். உழைப்பால் உயர்வார்கள். தந்தை பெரியாரின் கொள்கைகள் உலகமயமாக்கும் பெரியார் உலகம் காண உள்ள சூழலில் அதற்காக அரும்பாடுபட்டு வரும் கழகப் பொதுச் செயலாளர் தலைமையில் நீங்கள் இயக்கத்தில் இணைவது சிறப்பானது’’ என குறிப்பிட்டார்.

கழகப் பொதுச் செயலாளருக்கு பயனாடை மலர்மாலை அணிவித்து மக்கள் மகிழ்ச்சி!

ஈட்டி கணேசனின் ‘மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சி நடைபெற்றது. காவல்துறை சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகளையும் போக்குவரத்தையும் ஒழுங்குபடுத்தியது பாராட்டுக்குரியது. கிராம மக்கள் கழகப் பொதுச் செயலாளருக்கு பயனாடை அணிவித்தும் மலர் மாலை அணிவித்தும் மகிழ்ந்தனர். புதிதாக இயக்கத்தில் இணைந்த தோழர்களுக்கு கழகப் பொதுச் செயலாளர் பயனாடை அணிவித்து வரவேற்றார். கிராம மக்கள் கழகப் பொதுச் செயலாளரைப் பிரிய மனமின்றி ஊரின் எல்லைவரை பின் தொடர்ந்தனர். குழுவாக நின்று படம் எடுத்துக் கொண்டனர். பள்ளி மாணவிகள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். குடும்பம் குடும்பமாக தோழர்கள் படம் பிடித்தனர். கிராமமே வரலாற்று சிறப்புமிக்க விழாவாக கொண்டாடி மகிழ்ந்தது.

விழா மாட்சிகள்

திராவிடர் கழக கிளைத் தொடக்க விழாவை பட்டரமங்கலம் கிராம மக்கள் உற்சாகமாக ஊரே திரண்டு நின்று கொண்டாடினர். கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ் அவர்களை வரவேற்று சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவிற்கு கழகக் கொடியை கட்டியிருந்தனர். கிராமத்தில் உள்ள அனைவரும் தங்கள் ஒளிப்படத்துடன் தந்தை பெரியார், அன்னை மணியம்மையார், தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி ஆகியோரின் படங்களை சுமார் 30 அடி நீளத்தில் பெரும் பதாகையைக் கட்டி வரவேற்பு அளித்தனர். குழல் விளக்குகள் ஊரின் எல்லையிலிருந்து கட்டி கிராமத்தையே ஒளிரச் செய்தனர். சுமார் அரை மணி நேரம் வான வேடிக்கை நடத்தினர். மேள தாளம் முழங்கவும் கிராமத்தில் உள்ள அனைவரும் ஆண்கள் கருப்புச் சட்டை அணிந்தும், பெண்கள் கருப்பு புடவை அணிந்தும் ஊரே கருங்கடலாகக் காட்சி அளித்தது.

பங்கேற்றவர்கள்

தலைமைச் செயற்குழு உறுப்பினர் ஈரோடு த. சண்முகம் பெரியார் பெருந்தொண்டர் பெ. ராஜமாணிக்கம், மாவட்ட துணைச் செயலாளர்கள் வெ.ப. அரங்கசாமி, ஜி.கே. மூர்த்தி, பொதுக் குழு உறுப்பினர் க. யோகானந்தம், ஒன்றிய பொறுப்பாளர்கள் அந்தியூர் கோவிந்தன், சத்தி நாகராஜ், நம்பியூர் பிரசாந்த்குமார், ஜெ. தட்சிணாமூர்த்தி, மாவட்ட மகளிர் பாசறைத் தலைவர் ப. திலகவதி, மாவட்ட வழக்குரைஞரணிதலைவர் அ. அஜித்குமார், மாவட்ட மாணவர் கழக தலைவர் மா. சூர்யா, மாநில மாணவர் கழக துணைச் செயலாளர் த. சிவபாரதி, மாவட்ட இளைஞரணி தலைவர் அ. அஜித்குமார், ம. பவானிசாகர் ஒன்றிய தலைவர் ஆ. பிரபு, மாவட்ட மாணவர் கழக செயலாளர் த. எழிலரசன், உள்ளூர் கிராம பொது மக்கள், கழகத் தோழர்கள் பங்கேற்றனர். ஆதித் தமிழர் பேரவை மாவட்டச் செயலாளர் பெ. பொன்னுச்சாமி வாழ்த்துரை ஆற்றினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *