சென்னை,பிப்.5- உடற்கொடை வழங்க தமிழ்நாடு பொது சுகாதாரத் துறை தொடர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் நிலையில், உறுப்புக் கொடை பெற 7,840 பேர் உள்ளதாக தெரிய வந்துள்ளது. இதுபற்றிய விவரம் வருமாறு:
ஒருவர் வாழ்வதற்கு தேவையான முக்கிய உறுப்பு செயலிழந்து அதனால் வாழ முடியாத சூழ்நிலையில், வேறொருவரின் உறுப்பை பொருத்தி ஒரு புதிய வாழ்வை அளிக்க முடியும் என்பது மருத்துவ விஞ்ஞானத்தின் போற்றப்பட வேண்டிய சாதனை.
உடல் உறுப்பு கொடை
இந்தியாவிலேயே முதன்முதலாக, தமிழ்நாட்டில் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை ஆணையம் என்ற அமைப்பை கடந்த 2014ஆம் ஆண்டு மேனாள் முதலமைச்சர் ஜெயலலிதா உருவாக்கினார். அதன்மூலம் உறுப்பு கொடை செய்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது.
இதற்கிடையே உடல் உறுப்பு கொடை குறித்து மக்களிடையே உள்ள தவறான புரிதலை போக்கும் வகையிலும், கூடுதல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் கடந்த 2023ஆம் ஆண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புதிய உத்தரவு ஒன்றை அறிவித்தார்.
அதில் உடல் உறுப்புக் கொடை செய்தவர்களுக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்படும் என தெரிவித்திருந்தார்.
அரசு எடுத்த இந்த புதிய முயற்சி மூலம் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பகுதி மக்களையும் உடல் உறுப்புக் கொடை செய்யத் தூண்டியது. அந்தவகையில், இதுவரை இல்லாத அளவிற்கு கடந்த ஆண்டு (2024) 268 பேர் உறுப்புக் கொடை செய்தனர்.
தமிழ்நாடு முதலிடம்
அவர்களிடம் இருந்து 1,500 உறுப்புகள் கொடையாக பெறப்பட்டு உள்ளன. அதில் விபத்தில் மூளைச்சாவு அடைத்த 186 பேரும், விபத்து இல்லாமல் மூளைச்சாவு அடைந்த 82 பேரும் அடங்குவர். அரசு மருத்துவமனையில் 146 பேரும், தனியார் மருத்துவமனையில் 122 பேரும் உறுப்புக் கொடை செய்துள்ளனர். இதன் காரணமாக இந்தியாவிலேயே உறுப்புக் கொடை செய்வதில் தமிழ்நாடு முதல் இடத்தில் உள்ளது.
பதிவு எண்ணிக்கை அதிகரிப்பு
இதேபோல, முதலமைச்சர் உடல்நல காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், அரசு மருத்துவமனைகளில் உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சைகள் செய்யப்படுகிறது. தமிழ்நாட்டில் உடல் உறுப்புக் கொடை தேவைப்படுவோர், அரசிடம் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். அவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில், கொடையாக கிடைக்கும் உறுப்புகள் பொருத்தப்படுகின்றன.
தற்போது உடல் உறுப்புக் கொடை செய்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்தாலும், உறுப்பு வேண்டி பதிவு செய்தவர்களின் எண்ணிக்கையும் ஆண்டுதோறும் வேகமாக அதிகரித்து வருகிறது.
அந்தவகையில், தமிழ்நாட்டில் தற்போதுள்ள முன்பதிவு பட்டியலின் படி உடல் உறுப்புகள் கொடை பெறுவதற்காக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 7 ஆயிரத்து 840 பேர் காத்திருக்கின்றனர். இவர்களின் எண்ணிக்கை குறைய வேண்டும் என்றால், உறுப்புக் கொடை செய்ய பொதுமக்கள் முன்வர வேண்டும் என அரசு தொடர்ந்து வலியுறுத்துகிறது.