திருவனந்தபுரம், பிப்.4- நாடாளுமன்றத்தில் 1.2.2025 அன்று 2025-2026ஆம் நிதி ஆண்டுக்கான ஒன்றிய நிதிநிலை அறிக்கையை ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
இந்த பட்ஜெட்டில் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக அரசியல் கட்சி தலைவர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். அந்த வகையில் 2025ஆம் ஆண்டிற்கான ஒன்றிய பட்ஜெட்டில் கேரளாவின் முக்கிய கோரிக்கைகள் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:-
புறக்கணிப்பு
2025ஆம் ஆண்டிற்கான ஒன்றிய பட்ஜெட்டில் கேரளாவின் முக்கிய கோரிக்கைகள் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டுள்ளன. வயநாடு நிலச்சரிவிற்கு நிவாரண நிதி இல்லை.
எய்ம்ஸ் மருத்துவமனைகள் இல்லை. விழிஞ்சம் துறைமுக திட்டத்திற்கு ஆதரவு இல்லை. நமது கடன் வரம்புகள் குறைக்கப்பட்டுள்ளன. தொழிற்துறை ஓரங்கட்டப்பட்டுள்ளது. விவசாயிகள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். இது கூட்டாட்சியின் மீதான அப்பட்டமான தாக்குதல். ஒன்றிய அரசு மாநிலங்களின் வளர்ச்சியை விட தேர்தல் நலன்களுக்கு முன்னுரிமை அளிக்கிறது. இந்த அநீதியை வன்மையாக கண்டிக்கிறோம்.இவ்வாறு பினராயி கூறினார்.