வெட்டிக்காடு, ஜன.29 வெட்டிக்காடு பெரியார் மெட்ரிகுலேஷன் பள்ளி மழலையர் பிரிவில் பயிலும் மாணவர்களுக்கு 15ஆவது பட்டமளிப்பு விழா கடந்த 25ஆம் தேதி நடை பெற்றது.
தமிழ்மொழி வாழ்த்துடன் இனிதே விழா தொடங்கியது. வருகை புரிந்த அனைவரையும் ஆங்கில ஆசிரியர் த. சாந்தினி வரவேற்றுப் பேசினார். விழாவிற்கு சில்லத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் அய்ஸ்வர்யா பாரதி சிறப்பு விருந்தினராக தலைமை தாங்கினார். வெட்டிக்காடு ஊராட்சி மன்றத் தலைவர் ரேவதி மைனரும் கலந்து கொண்டு சிறப்பித்தார். பள்ளியில் நடைபெற்ற நிகழ்வுகள், மாணவர்களின் சாதனைகள், நடத்தப்படும் போட்டிகள், பள்ளியில் உள்ள மாணவர்களுக்கான வசதிகள் மற்றும் ஊராட்சி மன்றத் தலைவர் செய்த உதவிகளையும் பள்ளியின் முதல்வர் சு.சாந்தி கூறி சிறப்புரை ஆற்றினார்.
மழலையர் பிரிவில் பயிலும் 40 மாணவர்களுக்கு ஊராட்சி மன்றத் தலைவர்கள், முதல்வர் , மாணவப் பெற்றோர்கள் தலைமையில் பட்டமளித்து உறுதிமொழி ஏற்றனர்.
சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்ட சில்லத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் தனது உரையில் கல்லூரி சென்று வாங்கும் பட்டத்தை மழலையர் பிரிவிலேயே இப்பள்ளியில் வழங்குவது மனதிற்கு மகிழ்ச்சியே எனவும், நல்ல பயிற்சி அளிக்கப்படும் இப்பள்ளி மென்மேலும் வளர்ந்து சிறப்படைய வேண்டும் எனவும் தனது உரையில் கூறி சிறப்பித்தார்.
முதலாம் வகுப்பில் பயிலும் மாணவனின் பெற்றோர் (பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்) நடராஜன் என் குழந்தையை பெரியார் என்னும் பெயருக்காகவே இந்தப் பள்ளியில் சேர்த்தேன். அதன் பிறகு பள்ளி முதல்வர் செயல்பாடுகள் மிகவும் சிறப்பாக இருப்பதால் தொடர்ந்து படிக்க வைக்கின்றேன் எனவும், என் மகன் நல்லொழுக்கத்தோடும் எல்லாவற்றிலும் சிறந்து விளங்குகிறான் எனவும் பள்ளியின் பெருமைகளை தனது உரையில் கூறினார். பெற்றோர்களிடம் கல்வித்தொகையை தருணத்தில் செலுத்திடுமாறு பள்ளியின் சார்பில் கேட்டுக்கொண்டார்.
பரிசு மழை
பள்ளியில் நடைபெற்ற அனைத்துப் போட்டிகளிலும் பங்கு பெற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசும், சான்றிதழ் களும் வழங்கப்பட்டன. பெற்றோர்களுக்கு நடத்தப்பட்ட உறியடித்தல், இசை நாற்காலி போட்டிகளில் வெற்றி பெற்ற பெற்றோர்களுக்கும் பரிசுகள் வழங்கி சிறப்பித்தனர்.
மழலையர் பிரிவு மாணவர்களின் நடனம் மூலம் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மாணவர்கள் தங்களின் நடனம், கவிதை ,பேச்சு, மாறுவேடம், திருக்குறள் ஒப்புவித்தல், நாடகம் என அனைத்தையும் நடத்தி தமது ஆற்றலை விளக்கும் விதமாக பயனுள்ள தகவல்களை வழங்கி சிறப்பித்தனர்.
Communication Skill – Basic words Vs Modern words பற்றியும், மணிச்சட்டம் பயன்படுத்தி மனக்கணக்குப் போடும் திறனையும், செயல்பாடுகள் மூலம் விளக்கி அனைவ ரையும் வியக்கச் செய்தனர். பெரியார் மணியம்மை நிகர் நிலை பல்கலைக்கழகத்திற்குச் சென்று மேல்நிலை வகுப்பு மாணவர்கள் செயற்கை நுண்ணறிவினை இயக்கிய நிகழ்வுகளையும், பெற்ற பயிற்சிகளையும் ஒலி ,ஒளி வசதியுடன் காண்பிக்கப்பட்டது.
வைக்கம் போராட்ட வரலாற்று குறும்படம்
வைக்கம் போராட்ட வரலாற்று நூற்றாண்டு வெற்றி விழா பற்றிய குறும்படம் காண்பிக்கப்பட்டது. நாட்டுப்புறக் கலைகளின் பயன்கள், இயற்கை பாதுகாப்பு, நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் (வெளி) ஆகிய அடிப்படை அமைப்புகள் படும்பாடு, இயற்கை உணவினைப் போற்று என பயனுள்ள நிகழ்வுகளை அளித்து வாழ்க்கைக்கு ஏற்ற கருத்துகளை விளக்கி மகிழ்ச்சியையும் , விழிப்புணர்வையும் பெற வைத்தனர்.
சில்லத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் அய்ஸ்வர்யா பாரதி மற்றும் வருகை புரிந்த அனைவரும் மனமகிழ்வோடு இறுதிவரை கலையாது பங்கேற்று விழாவினை சிறப்பித்ததே பெருமைக்கு உரியதாகும்.
இறுதியாக பள்ளியின் கணிப்பொறி அறிவியல் ஆசிரியர் ரெ.சாந்தி நன்றி கூறினார். நாட்டுப் பண்ணுடன் விழா முடிவு பெற்றது.