சென்னை எழும்பூரில் உள்ள வளாகத்தில் தாளமுத்து – நடராசனுக்கு சிலை நிறுவப்படும்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை, ஜன.25 தியாகிகள் நினைவு நாளையொட்டி இன்று (25.1.2025) மொழிப்போர் தியாகிகள் தாளமுத்து – நடராசன் ஆகியோரது புதுப்பிக்கப்பட்ட நினைவிடத்தை முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். அப்போது அவர் சென்னை எழும்பூரில் உள்ள தாளமுத்து – நடராசன் மாளிகை வளாகத்தில் சிலை நிறுவப்படும் என்று அறிவிப்பை வெளியிட்டார்.
வண்டமிழ் மொழி
தமிழ் மொழி, நீராலும் – நெருப்பாலும், வஞ்சகர்களின் வெறுப்பாலும் வெல்லமுடியாத வீழ்த்த முடியாத செம்மாந்த மொழியாகும்! தத்தமது உரைநடையின் வாயிலாகவும், கவிதைத் தீரமு டனும் தமிழறிஞர்கள் பலர் தங்கள் விழியெனப் போற்றி வளர்த்த வண்டமிழ் மொழியாகும்.
1938ஆம் ஆண்டு மதராஸ் மாகாணத்தின் அப்போதைய முதலமைச்சரான இராஜாஜி தமிழ்நாட்டு மாணவர்கள் இனி ஹிந்தி கட்டாயமாக கற்க வேண்டுமென்று வெளியிட்ட அறிவிப்பினை எதிர்த்து, 27.02.1938 அன்று காஞ்சிபுரத்தில் நடைபெற்ற முதல் ஹிந்தி எதிர்ப்பு மாநாட்டில், தாய்மொழியை காக்க ஹிந்தி திணிப்பினை எதிர்க்க வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டு அதனடிப்படையில், தந்தை பெரியார், மறைமலை அடிகள், திரு.வி.க., நாவலர் சோமசுந்தர பாரதி, அறிஞர் அண்ணா போன்ற தமிழறிஞர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் தாய்மொழி காக்க களம் கண்டனர்.
அப்போது, 14 வயதே ஆன பள்ளி மாணவர் முத்தமிழறிஞர் கலைஞர் திருவாரூர் வீதியில் தன்னுடன் பயிலும் மாணவர்களை அணி திரட்டி, “கயல், வில், புலி” சின்னம் பொறித்த தமிழ்க் கொடியினை கையிலேந்தி,
“ஓடி வந்த ஹிந்திப் பெண்ணே கேள்!
நீ தேடி வந்த கோழையுள்ள நாடிதல்லவே!”
என்று, ஹிந்தித் திணிப்பு எதிர்ப்பு போர்ப்பரணி பாடி, தமிழ்மொழி காக்கும் போர் வீரராய் முன் வந்தார்.
வீர மரணம்
அன்னைத் தமிழ் காக்க, முதற்கட்ட ஹிந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு, சிறை சென்ற நடராசன் 15.01.1939 அன்றும்: தாளமுத்து 11.03.1939 அன்றும் வீர மரணம் அடைந்தனர். தமிழ்நாட்டு மக்களின் தொடர் போராட்டத்தினால், அரசு 21.02.1940இல் கட்டாய ஹிந்தி திணிப்பை கைவிடும் முடிவுக்கு வந்தது.
தாராளமாகவும் ஏராளமாகவும் தமிழ்ச் சொற்கள் இருந்தும், பிறமொழிச் சொல் கலந்து பேசியும், எழுதியும் தமிழுக்கு ஊறு விளைத்திட முனைந்தோரால், முடிந்தளவு முயன்றும், யாதொன்றும் புரிந்திட இயலாது, என்று முடங்கிடும் நிலையில் என்றென்றும் மாறாத இனிமைத் தமிழுக்கு ஆபத்து வரத்துணிந்த போது,
“செந்தமிழுக்கு தீங்கொன்று வந்துற்ற பின்னும் இத்தேகம் இருந்தென்ன லாபம்?”
என, தனக்குத் தானே கேள்வி எழுப்பிக் கொண்ட அன்னைத் தமிழின் அருந்தவப் புதல்வர்களாம் கீழுப் – பழூவூர் சின்னச்சாமி, விருகம்பாக்கம் அரங்கநாதன். கோடம்பாக்கம் சிவலிங்கம், மாயவரம் சாரங்கபாணி. விராலிமலை சண்முகம், கீரனூர் முத்து, பீளமேடு தண்டபாணி, சத்தியமங்கலம் முத்து, அய்யம்பாளையம் ஆசிரியர் வீரப்பன் தீக்குளித்தும், துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர் ராஜேந்திரன் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோரின் தீரத்தை நினைவு கூர்ந்திடும் நாள் தான் ஜனவரி 25ஆம் நாள் ஆகும்.
தந்தை பெரியாரால் திறந்து வைக்கப்பட்ட நினைவிடம்
ஹிந்தியைத் திணிக்க முயன்றோருக்கும், முயல்வோருக்கும் அச்சத்தை உருவாக்கிவிட்டுச் சென்றுள்ள மொழிப் போர் தியாகிகள் நடராசன் – தாளமுத்து ஆகிய இருவரின் தியாகத்தைப் போற்றும் வண்ணம் சென்னை, மூலக்கொத்தளத்தில் தந்தை பெரியார் அவர்களால் திறந்து வைக்கப்பட்ட நினைவிடம் தற்போது ரூ.34 இலட்சம் செலவில் சிறப்பான முறையில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. தமிழ்மொழித் தியாகிகள் நினைவு நாளான இன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.
மொழிப்போரின் வெற்றி வெளிச்சத்திற்கு ஒளிவிளக்குகளாய் நின்று உயிர்துறந்த தாளமுத்து – நடராசன் மற்றும் மொழிப்போர் தியாகி, சமூகப் போராளி டாக்டர். எஸ். தர்மாம்பாள் ஆகியோரது படங்களுக்கு மலர் தூவியும், அவர்களின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்தும் மரியாதை செலுத்தினார்.
மொழிப்போர் தியாகிகள் தாளமுத்து – நடராசன் ஆகிய இருவருக்கும் சென்னை, எழும்பூரில் உள்ள தாளமுத்து-நடராசன் மாளிகை வளாகத்தில் சிலை நிறுவப்படும் என்று முதலமைச்சர் அறிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர். பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் தாயகம் கவி, அய்ட்ரீம் ஆர். மூர்த்தி, சி.வி.எம்.பி. எழிலரசன், எஸ்.சுதர்சனம், ஆர்.டி. சேகர், ஜே.ஜே.எபினேசர், கே.பி.சங்கர், துணை மேயர் மு. மகேஷ்குமார், தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனத்தின் தலைவர் ப. ரங்கநாதன், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அரசு செயலாளர் வே. ராஜாராமன் செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் மரு. இரா. வைத்திநாதன், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் ந. அருள், அரசு உயர் அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.
இடுகாட்டில்
அண்ணா சொன்னது
வருங்காலத்தில் பெரியாரை மத்தியில் வைத்து இறந்த 2 மணிகளையும் (நடராசன் – தாளமுத்து) பக்கத்தில் வைத்து உருவம் எழுப்ப வேண்டும். ஏன்? பெரியார் தளரும் காலத்து இந்த இரண்டு சமுகங்களும் அதாவது நாடார் – ஆதி திராவிடர் சமூகங்கள்தான் உதவி செய்து வந்திருக்கிறது. (16.1.1939)