அலகாபாத், ஜன.20 மகா கும்பமேளா முகாமில் 2 சமையல் எரிவாயு உரு ளைகள் வெடித்ததில் தீ விபத்து ஏற்பட்டது. பின்னர் தீ அணைக்கப்பட்டது.
உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக் ராஜ் நகரில் மகா கும்பமேளா நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்கும் பக்தர்களின் வசதிக்காக பல் லாயிரக்கணக்கான முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், ஒரு முகாமில் நேற்று (19.1.2025) மாலை 2 சமையல் எரிவாயு உருளைகள் வெடித்ததில் அந்த முகாம் தீப் பிடித்து எரிந்தது. பின்னர் தீ 18 முகாம்களுக்கு மளமளவென பரவியது. இதையடுத்து, பக்கத்து முகாம்களில் இருந்தவர்கள் அப்புறப்படுத்தப்பட்டனர்.
இதனிடையே, பாதுகாப்பு காரணங்களுக்காக தயார் நிலையில் நிறுத்தப் பட்டிருந்த தீயணைப்பு வாகனங்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை கட்டுக்குள் கொண்டு வந்தன. தீ விபத்து குறித்து கேள்விப்பட்ட மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், சம்பவ இடத்துக்கு உயர் அதிகாரிகளை அனுப்பி வைத்தார். பிரதமர் நரேந்திர மோடி, யோகி ஆதித்யநாத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தீ விபத்து குறித்து கேட்டறிந்தார்.
இதுகுறித்து அகாடா காவல் நிலைய உயர் அதிகாரி பாஸ்கர் மிஸ்ரா கூறும்போது, “செக்டார் 19 பகுதியில் உள்ள முகாமில் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்துவிட்டனர். இந்த சம்பவத்தில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை” என்றார்.