உறவுமுறை குறித்து தந்தை பெரியார் பேசியது அறிவுபூர்வமானது : தொல். திருமாவளவன் கருத்து

Viduthalai
2 Min Read

சென்னை, ஜன.19 ”உறவுமுறை குறித்து, தந்தை பெரியார் பேசியது உண்மை தான்; அதை அறிவியல்பூர்வமாக பார்க்க வேண்டும்,” என, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறினார்.

அவர் மேலும் கூறியதாவது:
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், உண்மையாகவே தமிழ் தேசியத்தை உயர்த்தி பிடித்தால், இதுபோன்ற முரண்பாடுகளின் பிடியில் சிக்கியிருக்க வாய்ப்பில்லை.

திராவிட எதிர்ப்பு தான், தமிழ் தேசியம் என முடிவு செய்ததுடன், அவ்வாறு இருப்பவர்களுடன் இணைந்து பணியாற்றுகிறார்.

முன்னுக்குப்பின் முரண்
சீமானுக்கு, தந்தை பெரியார் அம்பேத்கர் இயக்கங்கள் தான் அடித்தளம் அமைத்து கொடுத்தன. அவரை அடையாளப்படுத்தி கைதுாக்கி விட்டன. ஆரம்ப காலங்களில், சமூக நீதி தான் சீமான் பேசிய அரசியல்.

இன்று, முன்னுக்கு பின் முரணாக பேசி, தமிழ் தேசியத்தை இனவாதமாக மாற்ற நினைக்கிறார். இனவாதத்தை விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன், எங்கேயும் உயர்த்திப் பிடிக்கவில்லை.

பிற மொழி, இன வெறுப்பில் பிரபாகரன் ஈடுபட்டது இல்லை. பிரபாகரனின் பெயரை, சீமான் தன் நிலைப்பாட்டுக்கு பயன்படுத்துவது ஏற்புடையது இல்லை.

உறவுமுறை மாற்றம்
உறவுமுறை குறித்து, தந்தை பெரியார் பேசியது உண்மை தான். அதை அறிவியல்பூர்வமாக பார்த்தால் புரிந்து கொள்ள முடியும். வெறுப்பு அணுகுமுறை கொண்டு கவனிக்கும்போது அதை புரிந்துகொள்ள முடியாது. உறவுமுறை உலகம் முழுதும் எப்படி இருந்தது; இருக்கிறது என்ற அடிப்படையில் பேசியுள்ளார்.

இனத்திற்கு இனம், மதத்திற்கு மதம், தேசத்திற்கு தேசம் உறவுமுறை மாறும் என்பதை தான் சுட்டிக்காட்டினார்.
உறவு முறையில் ஹிந்து மதம் சில புனிதத்தை கற்பிக்கிறது. அந்த கற்பிதத்தை அம்பலப்படுத்துவதற்காக, உறவுமுறை குறித்து தந்தை பெரியார் சொல்கிறார்; ஒழுங்கீனத்தை ஊக்கப்படுத்துவதற்காக சொல்லவில்லை.

ஹிந்து மதத்தில், உறவு முறையில் புனிதம் ஏற்றப்பட்டுள்ளது; அதுதான் தந்தை பெரியாரின் பார்வை.எந்த இடத்திலும் இன்றைக்கு, நடைமுறையில் உள்ள ஒழுக்கங்களுக்கு எதிராக பேச வில்லை; எல்லாரும் வரம்பை மீறி செயல்பட வேண்டும் எனவும் அவர் வழிகாட்டவில்லை. அதனால், சீமான் ஆதாரமில்லாமல் பேசுவது கண்டனத்துக்குரியது. அதை மாற்றிக் கொள்ள வேண்டும்.

தமிழ் தேசம் என்பது ஹிந்துத்துவ தேசம், மதவழி தேசியத்திற்கு எதிரானதே தவிர, தெலுங்கு மொழி உட்பட, பிற மொழி எதிர்ப்பில் இல்லை.

தனிப்பட்ட அரசியல்
புரட்சிக் கவிஞர் உள்ளிட்ட தலைவர் களை பிரபாகரன் துணைக்கு அழைத் தவர். அதனால், அவர்கள் அவ்வாறு செயல்படவில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

தி.மு.க., எதிர்ப்பு என்பது, சீமானு டைய தனிப்பட்ட அரசியல். தி.மு.க.,வை எதிர்க்கிறோம் என, திராவிட இயக்கங்களையும், தந்தை பெரியாரையும் எதிர்ப்பது கண்டிக்கத்தக்கது.

தந்தை பெரியார் மீதான நன்மதிப்பை சீர்குலைப்பதில் அவருக்கு எந்த லாபமும் கிடைக்கப் போவதில்லை. அது ஸநாதன சக்திக்கு துணை போவதற்கு மட்டும் தான் பயன்படும். சீமானின் கருத்தை முதலில் ஆதரித்து இருப்பது, ஸநாதன பாசறையில் வேகமாக வளர்ந்த அண்ணாமலை தான்.

இதிலிருந்து, நாம் பேசுகிற அரசியல் யாருக்கு சாதகமாக இருக்கிறது என்று சீமான் புரிந்துகொள்ள வேண்டும்.
இவ்வாறு தொல். திருமாவளவன் கூறினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *