பட்டம் விட்டு மகிழ்ந்த அமித்ஷா என்று ஒரு பக்கம் செய்தியும், மறுபக்கம் பட்டம் விட்டதால் கழுத்து அறுபட்டு 6 பேர் உயிரிழந்த செய்தியும் வந்துள்ளது.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்ற விழாவில், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, குஜராத் முதலமைச்சர் பூபேந்திர பட்டேல் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது பொதுமக்களுடன் இணைந்து அமித்ஷா பட்டம் விட்டு மகிழ்ந்தார்.
குஜராத்தில் உத்தராயண் விழாவின்போது பட்டத்தின் மாஞ்சா நூல் கழுத்தை அறுத்து ஒரே நாளில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
அம்மாநிலத்தின் பஞ்ச்மகால் மாவட்டம் ஹலோல் நகரில் குர்னால் பர்மர் (வயது 4) என்ற சிறுவன் தனது தந்தையுடன் இரு சக்கர வாகனத்தில் சென்றான்.
அப்போது பட்டத்தின் மாஞ்சா நூல் சிறுவன் குர்னாலின் கழுத்தை அறுத்தது. இதில் அச்சிறுவன் உயிரிழந்தான். அதேபோல், மஹாசனா மாவட்டம் வட்பார் பகுதியை சேர்ந்த மன்சாஜி (வயது 35) தனது தோட்டத்திற்கு சென்றுகொண்டிருந்தார். அப்போது, பட்டத்தின் மாஞ்சா நூல் அவரின் கழுத்தை அறுத்தது. இதில் படுகாயமடைந்த மன்சாஜி அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அதே போல் சுமார் 700 க்கும் மேற்பட்ட காகம், புறா, மைனா, கிளி, நாரை, உள்ளிட்ட பல பெரிய பறவைகள் பட்டம் விடப்பட்ட போது நூலில் அறுபட்டு உயிரிழந்தன. மேலும் காயமடைந்த ஆயிரக்கணக்கான பறவைகளை எடுத்துச்சென்று கால்நடை மருத்துவமனைகளில் தொண்டமைப்பினர் ஒப்படைத்து வருகின்றனர்.