நவம்பர் 26 – நாம் சந்திக்கும் இடம் ஈரோடு சந்திப்பு

Viduthalai
7 Min Read
* கலி. பூங்குன்றன்
ஈரோட்டில் சுயமரியாதை இயக்கம், ‘குடிஅரசு’ ஏட்டின் நூற்றாண்டு நவம்பரில் நடப்பதுதான் என்ன பொருத்தம் என்ன பொருத்தம்!! நவம்பருக்கு உள்ள சிறப்புகள்.
நவம்பர்
1 மொழிவாரி மாநிலங்கள் அமைப்பு (1956)
7 ருசியாவில் அக்டோபர் புரட்சி (1917)
13 பெண்கள் மாநாட்டில் ‘பெரியார்’  என்ற பட்டம் (1938)
14. ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தில்  பெண்கள் சிறை புகுந்த நாள் (1938)
16. சமூகநீதிக் காவலர் பிரதமர் வி.பி.சிங் பிறப்பித்த  மண்டல் குழு அமல் ஆணை செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு (1992)
17. திராவிடர் கழகத் தலைவராக ஆசிரியர் மானமிகு கி.வீரமணி (2003)
இந்திய அரசமைப்புச் சட்டம் 31சி சட்ட முன் வடிவை திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் செய்தியாளர்களிடம் வழங்கியது (1993).
20. தென்னிந்திய நலவுரிமைச் சங்கம் (நீதிக்கட்சி) தோற்றம் (1916).
22. காஞ்சிபுரம் மாநாட்டிலிருந்து தந்தை பெரியார் வெளியேறுதல் (1925)
26. ‘புரட்சி’ வார ஏடு துவக்கம் (1933)
26. திராவிடர் கழகம் நடத்திய ஜாதி ஒழிப்பு – அரசியல் சட்டத்தில் ஜாதியைப் பாதுகாக்கும் பகுதியை எரிக்கும் போராட்டம் (1957).
26. திராவிடர் கழகம் நடத்திய வருமான வரம்பு ஆணை எரிப்புக் கிளர்ச்சி (1979).
28. தி.மு.க. ஆட்சியில் அண்ணா முதலமைச்சராக விருந்த போது சட்டப் பேரவையில் சுயமரியாதை திருமண மசோதா நிறைவேற்றம்.
இவ்வளவு முத்தான சிறப்புகள் நவம்பர் திங்களுக்கான முத்திரைகள்.
சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டுத் தொடக்கம் என்பதும் – இந்தக் கால கட்டத்தில் நாம் வாழ்கிறோம் என்பதும் எத்தகைய பூரிப்பும் பெருமையும்!
அதுவும் தந்தை பெரியார் பிறந்த  – ‘குடிஅரசு’ இதழ் தோன்றிய ஈரோட்டில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டும் ‘குடிஅரசின் நூற்றாண்டும் இதே நவம்பரில் வரும் 26ஆம் நாள் மாலை நேர திறந்தவெளி மாநாடாக மணம் வீசப் போகிறது என்பதுதான் எட்டுணைச் சிறப்பு!
‘உலகத் தலைவர் பெரியார்’ (10ஆம் தொகுதி)
‘அன்னை மணியம்மையார் தொண்டறம்’ ஆகிய இரு நூல்கள் வெளியீடு என்பது ஈரோட்டு மாநாட்டுக்கான மணி மகுடங்கள்
‘சுயமரியாதைச் சுடரொளிகள்’ படத் திறப்பு ‘சுயமரியாதைச் சுடரொளிகள்’ இணைய தளம் தொடக்கம் என்று அணிக்கு அணி சேர்க்கும் நிகழ்ச்சிகள்.
தமிழர் தலைவரின் மாநாட்டுப் பேருரை முக்கியமானது. மாண்புமிகு அமைச்சர் சு. முத்துசாமி, தந்தை பெரியார் குடும்பத்தைச் சேர்ந்த சொல்லின் செல்வர் ஈ.வெ.கி. சம்பத்தின் அருமை மகன் சட்டமன்ற உறுப்பினர் ஈ.வெ.கி.ச. இளங்கோவன், மேனாள் மாநிலங்களவை உறுப்பினரும் தி.மு.க. செய்தித் தொடர்புத் துறைத் தலைவருமான திராவிடவியல் கருத்தாளர் மானமிகு டி.கே.எஸ். இளங்கோவன், பாரம்பரிய சுயமரியாதைக் குடும்பத்தைச் சேர்ந்த திராவிட இயக்கத் தமிழர் பேரவைத் தலைவர் பேராசிரியர் மானமிகு சுப. வீரபாண்டியன், நமது மாநாடுகளில் பெரும்பாலும் பங்கேற்பதில் பேருவகை கொள்ளும் பேராசிரியர் அருணன் மற்றும் கழகப் பொறுப்பாளர்கள், சொற்பொழிவாளர்கள் பங்கேற்கும் திறந்த வெளி மாநாடாக ஒளி வீச இருக்கிறது.
102 வயதில் ஏறு நடைபோடும் நமது இயக்க சொக்கத் தங்கம் – பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின்தலைவர் மானமிகு பொத்தனூர் க. சண்முகம் அவர்கள், மாநாட்டுத் திறப்பாளர் என்பது எவ்வளவுப் பொருத்தம்.
மாநாட்டு ஏற்பாடுகளை கழகப் பொறுப்பாளர்கள் கருஞ்சட்டைத் தோழர்கள் இரவு – பகலென்று பாராமல் மாநாட்டின் வெற்றிக்குப் பெரு வெள்ளமாய் உழைப்பைத் தந்து கொண்டு இருக்கிறார்கள்.
தந்தை பெரியார் பிறந்த ஊரில் – ஈரோடு என்ற பெயரை – உலக வரைப்படத்தில் பேசு பொருளாக்கிய தந்தை பெரியார் பிறந்த மண்ணில் அவர்
கண்ட சுயமரியாதை இயக்க நூற்றாண்டு என்றால் சொல்லவும் வேண்டுமா?
கழகத்தினர் மட்டுமல்ல – அனைத்துத் தரப்பினரும் இம்மாநாட்டைக் கண்டு களிக்கக் காத்துக் கொண்டு இருந்தார்கள்.
இந்த ஈரோட்டு மண்ணில்தான் எத்துணை எத்துணை இயக்க நிகழ்வுகள்  – மாநாடுகள் எண்ணிலடங்காதவை!
சுயமரியாதை இயக்க இரண்டாவது மாநில மாநாடு இந்த மண்ணில் தானே நடந்தது (1930 மே 10,11).
இன்றைக்கு 94 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற அந்த ஈரோட்டு மாநாட்டில் தீப்பொறி பறக்கும் புரட்சித் தீர்மானங்கள்.
‘வருணாச்சிரம கொள்கையும், ஜாதிப் பிரிவினையுமே இந்திய சமூகக் கேடுகளுக்கு மூலகாரணமென்று இம்மாநாடு கருதுகிறது’’ என்ற முதல் தீர்மானம் இன்றைக்கும் தேவைதானே.
ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம், ஒரே கலாச்சாரம் என்று பாசிசம் பாய்ந்துவரும் இந்தக் கால கட்டத்தில் 1930 ஈரோட்டு மாநாட்டின் தீர்மானம் மேலும் உக்கிரமாக தேவைப்படுகிறது.
ஒரு உண்மை மட்டும் உண்மை – அந்த ஈரோட்டுத் தந்தை வடித்த அத்தீர்மானம் இன்று இந்திய துணைக் கண்டம் முழுவதும் தேவையை உணர்ந்து எதிரொலிக்கத் தொடங்கி விட்டது.
எந்தக் காரணத்துக்காக – வகுப்புரிமைக்காக தந்தை பெரியார் காங்கிரசை விட்டு வெளியேறினாரோ, அந்தக் காரணத்தின் அருமையை அதே காங்கிரஸ் கையில் எடுத்துக் கொண்டு விட்டதே!
இளம் காங்கிரஸ் தலைவர் செல்லும் இடங்களில் எல்லாம் சமூகநீதிக் குரலை உரத்த முறையில் முழங்கி வருகிறாரே! 50 விழுக்காடு உச்சக் கட்ட இடஒதுக்கீட்டை உடைப்போம் என்கிறாரே!
இதே ஈரோட்டில் தான் ‘குடிஅரசு’ இதழ் பிறந்தது. அண்ணா அவர்கள் ஆசிரியராகவும் கலைஞர் போன்றவர்கள் ஆசிரியர் குழுவில்
பணியாற்றினர் என்பதெல்லாம் எத்தகைய வரலாறு. சாமி கைவல்யம் போன்றவர்களின் படைப்புகள் இங்கு இருந்துதான் பிரசவம் ஆயின.
தவமணிராசன்,  கவிஞர் கருணானந்தம், ஈரோடு சண்முக வேலாயுதம் என்று ஒரு இளைஞர் பட்டாளமே அங்குண்டு.
அண்ணா குடியிருந்த அந்தப் பகுதியையும் உள்ளடக்கிய இல்லம் அய்யா  – அண்ணா நினைவகமாக அரசு சார்பில் பராமரிக்கப்பட்டு வருகிறது.
வரலாற்றுச் சுவடுகளை எடுத்துக் கூறும் ஒளிப்படங்களை இன்றும் காணலாம்.
அந்த இல்லத்திற்கான தொகையை முதலமைச்சர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் அரசு சார்பில் அளிக்கத் தயாராக இருந்தபோது, அன்னை மணியம்மையார் அதை ஏற்காமல், அய்யா, அண்ணா நினைவகமாக – அரசின் கட்டுப்பாட்டில் வரலாற்றைச் சொல்லிக் கொண்டிருக்கட்டும் என்ற அன்னையாரின் பெரிய உள்ளத்தை என்ன சொல்ல!
இதே ஈரோட்டில் தந்தை பெரியார் நகர மன்ற தலைவராக இருந்தபோது (1917) கொங்கப்பறைத் தெரு என்று இருந்ததை ‘வள்ளுவர் தெரு’ என்று  மாற்றிய தகவல் எத்தனைப் பேருக்குத் தெரியும்?
ஈரோட்டில் 1948 அக்டேர்பர் 23, 24இல் திராவிடர் கழக 19ஆவது ஸ்பெஷல் மாநாடு நடைபெற்றது. ‘திராவிட நாடு’ படத்தை திரு.வி.க. திறந்து வைத்தார்.
நமது கொள்கை
‘ஜாதி, மதம், தெய்வம், தனம் என்கின்ற நான்கு தத்துவமும் அழிந்தாக வேண்டும். அவை அழியாமல் மனித சமூகத்துக்கு சாந்தியும், திருப்தியும், சுகமும் கிடையாது. அந்த நிலை அடைந்துதான் ஆக வேண்டும். அதுவே எனது கொள்கை!’’
– தந்தை பெரியார் – ‘குடிஅரசு’ 10.5.1936
அம்மாநாட்டில் அண்ணாவை சாரட்டில் அமர வைத்து, தந்தை பெரியார் ஊர்வலத்தில் நடந்தே சென்றார் என்பது எல்லாம் இன்றைய தலைமுறை தெரிந்து கொள்ள வேண்டிய தங்கமான செய்திகள். அண்ணாவிடம் பெட்டி சாவியைக் கொடுக்கிறேன் என்று தந்தை பெரியார் கூறியதும் இந்த மாநாட்டில்தான்.
அஞ்சா நெஞ்சன் அழகிரி மிகவும், உடல் நலம் பாதிக்கப்பட்டு, ‘என் தலைவனுக்கு இறுதி வணக்கத்தைச் செலுத்தவே இம்மாநாட்டுக்கு வந்தேன்!’ என்று அவர் சொன்னபோது, மாநாட்டில் கூடியிருந்த ஆயிரக்கணக்கானோரின் கண்கள் கலங்கி குளமாகின என்பது எல்லாம் இந்த
இயக்கத்திற்கே உரித்தான கொள்கைக் குருதி உறவு!
வரலாற்றின் திருப்புமுனை பொன்னேடுகளைப் பூக்கச் செய்த அந்த ஈரோட்டில், தந்தை பெரியார் கண்ட சுயமரியாதை இயக்கம், ‘குடிஅரசு’ இதழ் நூற்றாண்டையும் சேர்த்துக் கொண்டாடுவோம்!
கொண்டாட்டத்தோடு நிற்க மாட்டோம். நமது தலைவர் ஆசிரியர் இலட்சிய முழக்கம் உந்து சக்தியாக இருக்கும்.
இம்மாநாடு இக்கால கட்டத்தில் ேபசு பொருளாக இருக்கும்  – வாரீர்! வாரீர்!!
கருங்கடலெனக் காட்சி தாரீர் தாரீர்!!
அரவணைத்து அன்னமிட்ட கை அன்னை நாகம்மை!
ஈரோட்டு ‘குடிஅரசில்’ ஓர் அறிக்கை
ஒரு விதவைப் பெண் தேவை.
சைவ வெள்ளாஞ் செட்டியார் வகுப்பைச் சேர்ந்த 24 வயதுள்ள கல்யாணமாகாத வாலிபர், தமிழ் நன்கு படித்தவர், வர்த்தகர், பொது நலச் சேவையில் உழைத்து வருகிறவர் ‘பூஸ்தி’ உண்டு. கம்பீரமான தோற்றமும் நல்ல அழகும் வாய்ந்தவர். இவருக்கு படித்த அழகுள்ள ‘ஒரு விதவைப் பெண்’ தேவை. கலப்பு விவாகத்திற்கும், சம்மதம் உடையவர் விலாசம் C/O பத்திராதிபர், ‘குடிஅரசு’ ஈரோடு (குடிஅரசு – 13.1.1929)
*குடிஅரசு ஒரு அன்ன சத்திரம் – வடித்துக் கொட்டிக் கொண்டே இருப்பார்கள். எல்லாம் அன்புத் தாய் அன்னை நாகம்மையாரின் கருணைக் கரம்தான்.
***
புரட்சித் தீர்மானம்
1930 ஈரோட்டில் எம்.ஆர். ஜெயகர் தலைமையில் நடந்த இரண்டாவது சுயமரியாதை மாகாண மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இதோடு இணைத்துப் பார்ப்பது பொருத்தமானதாகும். ‘‘இளைஞர்கள் கல்யாணம் செய்துகொள்வதாயிருந்தால், நம் நாட்டிலுள்ள கல்யாணம் செய்து கொள்ள அபிப்ராயமுள்ள விதவைகளையே முக்கியமாய் கல்யாணம் செய்து கொள்ள வேண்டுமென அம்மாநாடு தீர்மானிக்கிறது’’.
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *