ஆசிரியர் விடையளிக்கிறார்

4 Min Read

கேள்வி 1 : சமீப காலமாக பா.ஜ.க. அல்லாத எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் குடியரசு நாள் விழா அணிவகுப்பில் கலந்துகொள்ள தொடர்ந்து தடைவிதிக்கப் படுகிறதே?
– ந.ராஜகோபால், உத்திரமேரூர்
பதில் 1 : முன்பு தமிழ்நாடு அரசாங்க ஊர்திகளுக்கும் தடை விதித்தது. திரும்பவும் இப்போது அந்நிலையை விரிவுபடுத்தி, மற்ற கலாச்சாரப் பண்பாடுகளும் பரவாமல்
ஆர்.எஸ்.எஸ். ஆட்சி தனது பொல்லாச் சிறகை விரிக்கிறது என்பதன் அடையாளம்!

—-

கேள்வி 2 : பன்னாட்டு அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளது, ரஷ்யாவில் இருந்து அடிமாட்டு விலைக்கு கச்சா எண்ணெய் கப்பல் கப்பலாக வருகிறது, இருப்பினும் விலையைக் குறைக்காமலேயே மக்களை வாட்டி வருகிறதே ஒன்றிய அரசு?
– ம.சாந்தகுமார், வந்தவாசி
பதில் 2 : ஒன்றிய அரசின் மக்கள் நல விரோதப் போக்கிற்கு கைமேலான எடுத்துக்காட்டு இது! பிரச்சார மேடைகளில் இவற்றை எதிர்க்கட்சிகள் நன்கு மக்களுக்குப் பரப்ப வேண்டும்.

கேள்வி 3 : ஒன்றிய அரசு மருத்துவத்துறை மற்றும் கல்வித்துறைக்கு கடந்த 6 ஆண்டுகளாக நிதியை குறைத்துக்கொண்டே வந்துள்ளதே? நாட்டில் அனைவரும் ஆரோக்கியமாகவும் கல்வியில் சிறந்தும் விளங்குகிறார்களா?
– கா.ஆறுமுகம், சேலம்
பதில் 3 : நியாயமாகப் பார்த்தால் இந்த இரண்டு துறைகள்தான், மனித வளத்தின் – சமூக வளர்ச்சியின் முக்கிய அடையாளங்கள்!
இதனை குறைத்தால், மக்கள் முன்னேற்றம் பற்றிய அறிவு வழிகளை நாம் அடையவே முடியாது. மோடி ஆட்சி எப்படி நடந்தது கடந்த 10 ஆண்டுகாலமாக என்பதற்கு கைமேல் உள்ள அனுபவங்கள் இவை

—-

ஆசிரியர் விடையளிக்கிறார், திராவிடர் கழகம்

கேள்வி 4 : தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் குடியரசுத் துணைத் தலைவர் பதவியைப் பெற இரண்டு மாநில ஆளுநர் வேலையை விட்டு விட்டு அரசியலில் வேகம் காட்டி வருவதாக பா.ஜ.க.வினரே கூறுகின்றனரே?
– மா.தியாகராஜ், மாமல்லபுரம்
பதில் 4 : ஆசைக்கோர் அளவில்லை. ஆனால், அதற்குரிய வழிமுறையோ சரியில்லை; சரிவுதான் இறுதியில் ஏற்படும்!

கேள்வி 5 : நடந்து முடிந்த உலக முதலீட்டாளர்கள் மாநாடு குறித்து?
– வா.வெற்றி, மதுரை
பதில் 5 : எதிர்பார்த்ததை விட கூடுதலான பெரு வெற்றி; அமைதிப் பூங்காவை நோக்கி தொழிற் தேனீக்கள் மொய்க்கின்றன! ‘திராவிட மாடல்’ ஆட்சியின் சீரிய சிறப்பிற்கான ஆதாரமானது இது!
முதலமைச்சருக்கும், தொழில்துறை அமைச்சருக்கும், தமிழ்நாட்டு மக்கள் சார்பாக நெஞ்சம் நிறைந்த நன்றி கூறுகிறோம்!

கேள்வி 6 : தமிழ்நாட்டில் ராமன் கோவில் பந்தல்கள் அமைத்தால் மக்கள் ஆதரவு குறைவாக உள்ளது என்று ஹிந்து அமைப்புகள் கூறி உள்ளனவே?
– தி.தருமன், புதுக்கோட்டை
பதில் 6 : தமிழ்நாட்டில் ‘தேர்தல் இராமன்’ ஒருபோதும் வெற்றி பெற முடியாது என்பதை 1971 தேர்தலே பாடம் புகட்டியுள்ளதை அவர்கள் மறக்கவில்லை என்பதற்கு உதாரணம் இது!

கேள்வி 7 : வடக்கே எந்த நாளிதழை எடுத்தாலும் ராமன் கோவில் காவிமயம் தான். ஆனால், தெற்கே அந்த நிலை இல்லையே ஏன்? என்ன காரணம்?
– ரா.சந்திரசேகர், திருமங்கலம்
பதில் 7 : மேலே காட்டிய பதிலே இதற்கும். தேர்தல் இராமன் – இந்த இராவண காவியம் – இராவண வீர பூமியில் வெறும் செல்லாக் காசுதான். இராமன் எத்தனை இராமனடா!

கேள்வி 8 : ஊழல் வழக்கில் சிக்கியுள்ள நபரோடு தனியாக அரைமணி நேரம் உரையாடிய ஆளுநரின் நடவடிக்கை குறித்து தமிழ்நாடு எதிர்கட்சித் தலைவர் மவுனம் சாதிக்கிறாரே?
– பா.காவேரி, திருவரங்கம்
பதில் 8 : ‘HARBOURING THE ACCUSED’ “வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரைக் காப்பது” என்றே இந்திய குற்றச் சட்டத்தில் ஒரு பிரிவு உண்டு. அதன்படி இந்த ஆளுநர் மீதும் சட்டப்படி நடவடிக்கை பாய வேண்டியதே நியாயம்! நீதி! நேர்மை!

ஆசிரியர் விடையளிக்கிறார், திராவிடர் கழகம்

கேள்வி 9 : 25.02.2017ஆம் ஆண்டு மோடி, “அழகிய மணிப்பூர் என் உள்ளத்தை கவர்ந்துள்ளது” என்றார், இன்று 4.01.2024 “லட்சத்தீவின் அமைதி என்னை ஆனந்தப்படுத்தியுள்ளது” என்கிறார்? என்ன ஆகுமோ?
– கா.முல்லைவேந்தன், தஞ்சை
பதில் 9 : உடை மாற்றமும் – உரு மாற்றமும் – உரை மாற்றமும் அவருக்குக் கை வந்த கலை – வித்தையில் கைதேர்ந்தவர் என்ற பரிசு பெற முழுத் தகுதி வாய்ந்தவர் அவர்.

கேள்வி 10 : உத்தரப் பிரதேசத்தின் மக்கள் தொகையே 24 கோடிதான். ஆனால், 6 மாதங்களில் 32 கோடி மக்கள் சுற்றுலா வந்துள்ளனர் என்று எந்த ஒரு புள்ளிவிவரமும் இல்லாமல் உத்தரப்பிரதேச அரசு கதை கட்டி உள்ளதே? எப்படி இவர்களால் உண்மைக்குப் புறம்பாக செய்தி வெளியிட முடிகிறது?
– தி.ரங்கன், நாகை
பதில் 10 : பொய்ப் புள்ளி விவரங்களே ஆர்.எஸ்.எஸ்; பி.ஜே.பி.களின் நடைமுறை. Trolls முதல், ஹிந்து மக்கள் தொகையை முஸ்லீம்கள் தாண்டி விடுவார்கள் என்ற ‘கப்சா’ – கற்பனை வரை எத்தனையோ இதுபோல் உண்டு!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *