சென்னை, செப்.19- ஓய்வூதியர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஒன்றிய அரசு ஓய்வூதிய விதிகள் சரிபார்ப்பு சட்டத்தை திரும்பப் பெறுவது உள்பட 11 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி ஒன்றிய அரசு ஓய்வூதியர்கள் 3 நாள் தொடர் போராட்டத்தை அறிவித்துள்ளனர். சென்னையில் இன்று (19.9.2026) மறியல் நடைபெறுகிறது.
இது தொடர்பாக சிவில் ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் ஆர்.ராஜசேகர் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
2026ஆம் ஆண்டுக்கு முன்பு ஓய்வுபெற்றவர்களுக்கு 8ஆவது ஊதியக்குழு ஓய்வூதியத்தை திருத்த வகை செய்யாதவாறு கொண்டுவரப்பட்ட ஒன்றிய அரசு ஓய்வூதிய விதிகள் சரிபார்ப்பு சட்டத்தை திரும்பப் பெற வேண்டும்.
8ஆவது ஊதியக்குழுவின் பணிவரையறையை திருத்தி அதில் தற்போதைய ஓய்வூதியர்களுக்கும் ஓய்வூதியத் திருத்தத்தை சேர்ப்பது, தேசிய ஓய்வூதிய திட்டம், ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் ஆகியவற்றை ரத்து செய்துவிட்டு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது, அகவிலைப்படி 50 சதவீதத்தை தாண்டினால் அதை அடிப்படைச் ஊதியத்துடன் இணைப்பது என்பன உள்பட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடத்தப்பட்ட முதல் கட்ட போராட்டத்துக்கு பிறகு 2ஆவது கட்டமாக மாநில தலைநகரங்களில் செப்டம்பர் 17 முதல் 19ஆம் தேதி வரை போராட்டம் நடத்தப்படுகிறது.
சென்னையில் 19ஆம் தேதி பிற்பகல் 3 மணி முதல் மாலை 5 மணி வரை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே மறியல் நடைபெற உள்ளது. 3ஆவது கட்டமாக நவம்பர் 25ஆம் தேதி டில்லி ஜந்தர் மந்தரில் பேரணியும், மறியல் நடத்தப்பட உள்ளது. இதில் 5 ஆயிரம் ஓய்வூதியர்கள் கலந்துகொள்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
குடமுழுக்கு விழா கலாட்டா!
தடுப்பை மீறி நுழைய முயன்ற பக்தர்களால் பரபரப்பு!
மதுரை, செப்.19- மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழா 17.9.2026 அன்று நடைபெற்றது.
இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை கடந்த 1 மாத காலமாக மும்முரமாக நடைபெற்று வந்த நிலையில், நேற்று காலை 7:40 மணி முதல் 8:10 மணி வரை மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்க விழா நடைபெற்றதாம்!
குடமுழுக்கு விழா நிறைவு பெற்றதைத் தொடர்ந்து காலை 10 மணி முதல் பொது தரிசனத்திற்கு கோயிலுக்குள் செல்ல பக்தர்களுக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டது.
மேற்கு கோபுரம் மற்றும் தெற்கு கோபுரம் வழியாக பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு தரிசனத்திற்கு பிறகு கிழக்கு கோபுரம் வழியாக வெளியே செல்லப்படுவார் என்றும் கூறப்பட்டது.
ஆனால், பொது தரிசனத்திற்கு அனுமதி கொடுப்பதற்கு முன்பாக பொதுமக்கள் கோயிலுக்குள் செல்ல முயன்றனர். அப்போது அவர்களை தடுப்புவேலி போட்டு காவல் துறையினர் தடுத்த முயன்றனர். ஆனால் அதனை மீறியும் பக்தர்கள் செல்ல முயன்ற போது பொதுமக்களுக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதாம்!
