நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* பீகாரில் பொது சிவில் சட்டம் (யு.சி.சி.)அமல்படுத்தும் ஒன்றிய அரசின் புதிய முயற்சிக்கு பாஜக கூட்டணி அரசில் அங்கம் வகிக்கும் நிதிஷ் குமார் தலைமையிலான ஜே.டி.யு. எதிர்ப்பு. ஆர்.ஜே.டி. கட்சியும் இதை விமர்சித்துள்ளது; பாஜக தனது அரசியல் நோக்கத்தை முன்னெடுத்து, அரசியலமைப்புச் சட்ட உரிமைகளை பாதிக்க முயல்வதாக தேஜஸ்வி குற்றச்சாட்டு.
* பொது சிவில் சட்ட முயற்சி ‘மதவாத மற்றும் பெரும்பான்மைவாத அரசியல்’ – மார்க்சிஸ்ட் கட்சி கடும் எதிர்ப்பு. 2029 மக்களவைத் தேர்தலுக்கு முன் என்.டி.ஏ. ஆளும் 21 மாநிலங்களிலும் யு.சி.சி. அமல்படுத்தப்படும் என அமித் ஷா கூறியதைத் தொடர்ந்து சி.பி.அய்.(எம்) எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
தி டெலிகிராப்:
* ஆகஸ்டில் இந்தியாவின் மொத்த பணவீக்கம் 9.92% ஆக உயர்வு – உணவு, எரிபொருள், உற்பத்திப் பொருட்களின் விலை அதிகரிப்பு. மேற்கு ஆசிய போரும் ஹோர்முஸ் நீரிணை தடையும் கச்சா எண்ணெய், உர விலைகளை உயர்த்தியதால், அதன் தாக்கம் உணவுப் பொருட்களின் விலையிலும் எதிரொலித்துள்ளது.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* நீதிபதி வர்மா மீது ஏன் எப்.அய்.ஆர். பதிவு செய்யப்படவில்லை? உச்ச நீதிமன்ற மூத்த வழக்குரைஞர் மகேஷ் ஜெத்மலானி கேள்வி: நீதிபதி யஷ்வந்த் வர்மா இல்லத்தில் பணம் எரிக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட நிகழ்வில், விசாரணையை ரத்து செய்ய உச்ச நீதிமன்றத்தை அணுகி இருந்தபோதும் ஏன் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படவில்லை என ஜெத்மலானி கேள்வி எழுப்பியுள்ளார்.
* பொது சிவில் சட்டம் அமல் குறித்து அமித்ஷாவின் அறிவிப்புக்கு என்.டி.ஏ. கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு: பல்வேறு தரப்பினரின் கருத்துகளைப் பெற்று, தேவையிருந்தால் மட்டுமே யு.சி.சி. குறித்து பரிசீலிப்போம் என தெலுங்கு தேசக் கட்சி தெரிவித்துள்ளது. அமித் ஷாவை நேரில் சந்தித்து யு.சி.சி. குறித்து விவாதிப்போம் என ஜே.டி.யு. செயல் தலைவர் சஞ்சய் ஜா கூறியுள்ளார். ஒருமைப்பாட்டையும் பன்முகத்தன்மையையும் கட்சி ஆதரிப்பதாகவும், பல்வேறு சமூகங்களின் தனித்தனி மரபுகளை அரசியலமைப்பு அங்கீகரித்துள்ளதாகவும் எல்.ஜே.பி. கட்சியின் தலைவர், ஒன்றிய அமைச்சர் சிராக் பாஸ்வான் கூறியுள்ளார்.
– குடந்தை கருணா
