சென்னை, செப். 13- தமிழ்நாட்டில் ஓட்டுநர் உரிமம் (DL) மற்றும் வாகனப் பதிவு சான்றிதழ்கள் (RC) முழுமையாக டிஜிட்டல் வடிவில் வழங்கப்படும் புதிய நடைமுறை தற்போது அமலுக்கு வந்துள்ளது. கடந்த செப்டம்பர் 2-ஆம் தேதி சட்டமன்ற விதி 110இன் கீழ் முதலமைச்சர் ஜோசப் விஜய் அறிவித்திருந்த இத்திட்டம், தற்போது செயல்பாட்டுக்கு வந்துள்ளதாகத் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை அச்சிட்டு அஞ்சல் மூலம் அனுப்பும் பழைய நடைமுறை முழுமையாக நிறுத்தப்படுகிறது. வாகனப் பதிவு அல்லது ஓட்டுநர் தேர்வு நிறைவடைந்த நாளிலேயே, பொதுமக்கள் ‘பரிவாகன்’இணையதளம் மூலம் தங்களது சான்றிதழ்களைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். டிஜிட்டல் சான்றிதழ்களை முதல் ஓர் ஆண்டு வரை இலவசமாகப் பதிவிறக்கம் செய்யலாம். அதன்பிறகு நடைமுறையில் உள்ள விதிகளின்படி கட்டணம் வசூலிக்கப்படும்.
இந்த டிஜிட்டல் சான்றிதழ்கள் ‘எம்-பரிவாகன்’ மற்றும் ‘டிஜிலாக்கர் செயலிகளுடன் இணைக்கப்படும். சான்றிதழ்களில் இடம்பெறும் க்யூ.ஆர் குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலம், அதிகாரிகள் நிகழ்நேரத்தில்ஆவணத்தின் உண்மைத்தன்மையைச் சரிபார்க்க முடியும். போலி ஆவணங்களைப் பயன்படுத்துவது இதன் மூலம் முற்றிலும் தடுக்கப்படும்.
ஸ்மார்ட்போன் இல்லாதவர்கள் அல்லது அச்சுப் பிரதி தேவைப்படுவோர், அரசு அங்கீகரித்த இ-சேவை மய்யங்கள் மூலம் சான்றிதழ்களை அச்சிட்டுப் பெற்றுக் கொள்ளலாம். இனி அபராதப் பதிவு, ஆவணங்கள் பறிமுதல் மற்றும் அமலாக்க நடவடிக்கைகள் அனைத்தும் நேரடியாக மின்னணு தரவுத்தளத்தில் உடனடியாகப் பதிவேற்றம் செய்யப்படும்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு
அரசின் இந்த டிஜிட்டல் திட்டத்தை எதிர்த்து பெங்களூருவைச் சேர்ந்த ‘போர்ஸ் அய்டென்டிபிகேசன் லிமிடெட்’ நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. ஸ்மார்ட்போன் இல்லாதவர்கள் இதனால் பாதிக்கப்படுவார்கள் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. இதற்குப் பதிலளித்து அரசு தரப்பு வழக்குரைஞர் விஜய் நாராயண் வாதாடுகையில்:
“ஆவணங்களை இ-சேவை மய்யங்கள் மூலமாகவும் பதிவிறக்கம் செய்து அச்சிட்டுக் கொள்ள முடியும். ஏற்கெனவே ராஜஸ்தான், கேரளா, அசாம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் இந்த முறை அமலில் உள்ள நிலையில், 7ஆவது மாநிலமாகத் தமிழ்நாடு இதில் இணைந்துள்ளது. ஊழலை ஒழிக்கவும், சேவைகளை விரைவுபடுத்தவுமே இத்திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது,” எனத் தெரிவித்தார்.
தலைமை நீதிபதி தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு, மனு குறித்து 2 வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையைத் தள்ளிவைத்தது.
