ஒன்றிய அரசு இணையதளத்தில் தகவல்
புதுடில்லி, செப்.7- ஒன்றிய அரசின் திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் பயிற்சி பெற்றவர்களில் 7 சதவிகிதத்தினருக்கு மட்டுமே வேலை கிடைத்துள்ளது.
ஒன்றிய அரசின் பிரதமரின் திறன் மேம்பாட்டுத் திட்டம் (PMKVY), கடந்த 2015ஆம் ஆண்டில் தொடங்கப் பட்டது.
இந்தத் திட்டமானது, தொழிற்துறைக்குத் தேவையான பயிற்சிகளை வழங்குவதையும், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகளை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இருப்பினும், இந்தத் திட்டத்தின் மூலம் (ஆகஸ்ட் மாத நிலவரப்படி) பயிற்சி பெற்ற 28.5 லட்சம் விண்ணப்பதாரர்களில் 2 லட்சம் பேர் (7.73%) மட்டுமே வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.
அதுமட்டுமின்றி, பயிற்சிக் காலத்திலேயே கணிசமான அளவில் பயிற்சி பெறுபவர்கள் விலகுவதாகவும் தரவுகள் காட்டுகின்றன. இந்தத் திட்டத்தின்கீழ் பதிவுசெய்த 35.4 லட்சம் விண்ணப்பதாரர்களில் சுமார் 6.83 லட்சம் பேர் (19%) பயிற்சிக் காலத்திலேயே விலகியுள்ளனர். இந்தத் திட்டத்தின் மூலம் வேலை பெற்றவர்களைவிட, பயிற்சிக் காலத்தில் விலகியவர்களின் எண்ணிக்கை 3 மடங்குக்கும் அதிகமாக உள்ளது.
விண்ணப்பித்து பயிற்சி பெற்றவர்களுக்குத் தொலைத் தொடர்புத் துறையில் (17.5%) அதிகளவில் வேலைவாய்ப்பு கிடைத்ததாகவும், அதனைத் தொடர்ந்து கைவினைத் துறை (14.4%), ஜவுளித் துறை (13.3%) வேலைவாய்ப்புகளை வழங்கியுள்ளதாகவும் தரவுகள் தெரிவிக்கின்றன.
