‘நாங்கள் அடிமைகள் இல்லை’
டாடா கெமிக்கல்ஸ் நிறுவனத்துக்கு கென்யா அதிபர் தடை
டாடா கெமிக்கல்ஸ் நிறுவனத்துக்கு கென்யா அதிபர் தடை
நைரோபி செப். 4- கென்யாவின் காஜியாடோ பகுதியில் அமைந்துள்ள மகோடி ஏரியில் டாடா கெமிக்கல்ஸ் நிறுவனம் மேற்கொண்டு வந்த அனைத்துச் செயல்பாடுகளையும் உடனடியாக நிறுத்துமாறு அந்நாட்டு அதிபர் வில்லியம் ரூட்டோ உத்தரவிட்டுள்ளார்.
100 ஆண்டுகளுக்கும் மேலாக அங்கு இயங்கி வரும் இந்திய நிறுவனமான டாடா, அப்பகுதிக்குத் தேவையான தொழிற்சாலைகளையோ, வேலைவாய்ப்புகளையோ அல்லது உள்கட்டமைப்பு வளர்ச்சியையோ வழங்கத் தவறிவிட்டதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
காஜியாடோ பகுதியில் வியாழக்கிழமை நடை பெற்ற வளர்ச்சித் திட்டப் பயணத்தின் போது பேசிய அதிபர் ரூட்டோ, “டாடா நிறுவனம் 100 ஆண்டு களாக கென்யாவுடன் ஒப்பந்தம் வைத்துள்ளது. ஆனால், காஜியாடோவில் அவர்கள் எந்தவொரு தொழிற் சாலையையும் கட்டவில்லை.
நமது நாட்டின் இயற்கை வளங்களை வெறும் மூலப்பொருளாக ஏற்றுமதி செய்ய நாம் யாருக்கும் அடிமைகள் அல்ல. இங்கு புதிய முதலீட்டாளர்களைக் கொண்டு வந்து, இங்கேயே கண்ணாடியும் வேதியல் பொருட்களையும் தயாரிக்கும் பெரிய தொழிற்சாலைகளை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரி வித்தார்.
அதேவேளையில், அதிபரின் இந்த முடிவுக்குக் கென்யாவின் ஜனநாயகக் குடிமக்கள் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மகோடி ஏரிப் பகுதியில் பல லட்சம் கோடி மதிப்பிலான லித்தியம் உலோகப் படிமங்களும், கச்சா எண்ணெய் வளங்களும் இருப்பதாகவும், தனது சுயநல வியாபார நலன்களுக்காகவே டாடா நிறுவனத்தை அதிபர் ரூட்டோ வெளியேற்ற முயல்வதாகவும், டாடா நிறுவனத்தின் செயல்பாடு நிறுத்தப்பட்டால் 1 லட்சத்துக்கும் அதிகமான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் அக்கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
ஏற்கெனவே கடந்த ஜூலை மாத இறுதியில் டாடா கெமிக்கல்ஸ் நிறுவனத்தின் சோடா சாம்பல் உற்பத்தி மற்றும் ஏற்றுமதிக்குக் கென்ய அரசு தடை விதித்திருந்த நிலையில், தற்போது அதிபரின் இந்த உத்தரவு வெளியாகியுள்ளது. 1911ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மகோடி சோடா நிறுவனத்தை, கடந்த 2005ஆம் ஆண்டில் டாடா கெமிக்கல்ஸ் நிறுவனம் கைப்பற்றி நடத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.
நியூயார்க்கில் பள்ளி மாணவர்கள்
ஏஅய் பயன்படுத்த தடை
ஏஅய் பயன்படுத்த தடை
மேயர் ஸோரான் மம்தானி அறிவிப்பு
நியூயார்க், செப். 4- நியூயார்க் பள்ளிகளில் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் செய்யறிவு (ஏஅய்) பயன்படுத்த மேயர் ஸோரான் மம்தானி ஸோரன் தடை விதித்துள்ளார்.
குழந்தைகளின் தனித் திறமைகள், சுயமாக சிந்திக்கக்கூடிய திறன், மனநலன் ஆகியவற்றை பாதிக்கும் சூழல் நிலவுவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்த தடையானது அடுத்த ஓராண்டுக்கு இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஒன்பதாம் வகுப்புக்கு மேல் பயிலும் மாணவர்கள் மட்டும் குறிப்பிட்ட சில தேவைகளுக்காக ஏஅய் செயலிகளைப் பயன்படுத்திக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதனிடையே, ஆசிரியர்கள் பாடங்களைத் தயாரித்தல் போன்ற பணிகளுக்காக ஏஅய் செயலி களைப் பயன்படுத்திக் கொள்ள விதிகளில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பள்ளி வகுப்பறைகளில் திரையைப் பார்க்கும் நேரத்தை 45 நிமிடங்கள், தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு 30 நிமிடங்கள் மட்டுமே பயன்படுத்துமாறு நியூயார்க் கல்வித் துறை பரிந்துரைத்துள்ளது.
இதுதொடர்பாக மம்தானி வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:
“குழந்தைகள் கற்றுக்கொள்ளவும், வளரவும் ஆசிரியர்களின் தொடர்பு அவசியம். சக மாணவர்களுடன் இணைந்து திறன்களை வளர்த்துக் கொள்ளவும், ஆசிரியர்களுடன் உறவுகளை ஏற்படுத்திக்கொள்ளவும், அதேவேளையில் கடினமான சிக்கல்களைத் தாங்களே எதிர்கொண்டு தீர்க்கவும் வேண்டும்.
செய்யறிவு சார்ந்த தொடக்கக் கல்வி என்பது தவிர்க்க முடியாதது மட்டுமல்ல, அவசியமானதும் கூட என்று நாம் நம்ப வேண்டும் என்று தொழில்நுட்பத் துறை விரும்புகிறது. ஆனால், நாங்கள் அதை அவ்வாறு பார்க்கவில்லை. அதனால்தான், மழலையர் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ‘ஜெனரேட்டிவ் ஏஅய்’ யன்படுத்துவதை தற்காலிகமாக நிறுத்திவைக்கவும், அடுத்த ஓராண்டு காலத்திற்கு இத்தொழில்நுட்பத்தின் தாக்கங்கள் குறித்து ஆய்வு செய்யவும் நாங்கள் முடிவு செய்துள்ளோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
