சென்னை, செப். 03- சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் நேற்று (2.9.2026) காலை நடந்த ஒரு விவாதத்தில் பேசும்போது, ‘‘110 ஆவது விதியின் கீழ் முதலமைச்சர் சில அறிவிப்புகளை வெளியிட்டார். அப்போது விவாதம் நடைபெற்றது. அப்போது நான், எங்களுடைய முன்னாள் முதலமைச்சர் 110ஆவது விதியின் கீழ் சில அறிவிப்புகளை வெளியிடவில்லை என்று சொல்லி இருக்கின்றேன். அவைக் குறிப்பை எடுத்து நீங்கள் வெளியிட்டதற்கு சான்று காட்டி இருக்கிறீர்கள். நாங்கள் 110ஆவது விதியின் கீழ் அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறோம். எனவே, நான் பேசிய குறிப்பை திரும்ப பெற்றுக் கொள்கிறேன். அதை, நான் முன்னர் கூறியதை குறிப்பில் இருந்து நீக்கிக் கொள்ளலாம், என்றார்.
உடனே பேரவைத் தலைவர் ஜே.சி.டி.பிரபாகர் ‘‘அந்த ஆதாரத்தை காட்டிய உடனேயே, இதை என் கவனத்துக்கு உடனே கொண்டு வந்தீர்கள். நான் சொல்லியதை திரும்ப பெற்றுக் கொள்கிறேன் என்ற அந்த பெருந்தன்மைக்காக எதிர்க்கட்சித் தலைவரை பாராட்டுகிறேன்’’ என்றார். எதிர்க்கட்சித் தலைவர் கூற்றை பேரவைத் தலைவர் பாராட்டியதுடன், திமுக, தவெக, அதிமுக உள்ளிட்ட அனைத்து உறுப்பினர்கள், அமைச்சர்கள் மேஜையை தட்டி பாராட்டுத் தெரிவித்தனர்.
மகத்தான மனிதநேயம்
மூளைச்சாவு அடைந்த இளைஞரின் இதயத்தை
மாற்றிப் பொருத்தி புதுச்சேரி நோயாளிக்கு மறுவாழ்வு!
பெரம்பலூர், செப். 3 மதுரையில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் இதயம், ‘பசுமை வழித்தடம்’ மூலம் பெரம்பலூர் கொண்டு வரப்பட்டு, புதுச்சேரியைச் சேர்ந்த 43 வயது நபருக்கு வெற்றிகரமாகப் பொருத்தப்பட்டது. சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த 23 வயது இளைஞர் ஒருவர் சாலை விபத்தில் சிக்கி, மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் மூளைச்சாவு அடைந்தார். இதனையடுத்து, அவரது இதயம், சிறுநீரகம், கல்லீரல் மற்றும் தோல் உள்ளிட்ட உறுப்புகளை கொடையாக வழங்க அவரது குடும்பத்தினர் முன்வந்தனர்.
இதில், கொடையாக பெறப்பட்ட இதயம், பெரம்பலூர் மாவட்டம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த புதுச்சேரியைச் சேர்ந்த 43 வயது நோயாளிக்குக் கச்சிதமாகப் பொருந்தியதை மருத்துவர்கள் உறுதி செய்தனர்.
உயிர்காக்கும் இந்த இதயத்தை மதுரையிலிருந்து 178 கி.மீ. தொலைவில் உள்ள பெரம்பலூருக்கு விரைவாகக் கொண்டு செல்ல திட்டமிடப்பட்டது. மத்திய மண்டல அய்ஜி பாலகிருஷ்ணன் அறிவுறுத்தலின்படி, திருச்சி காவல்துறையினர் மதுரை – திருச்சி – பெரம்பலூர் வழித்தடத்தில் போக்குவரத்தைச் சீரமைத்து ‘பசுமை வழித்தடத்தை’ உருவாக்கினர்.
காலை 10:28 மணிக்கு மதுரையிலிருந்து புறப்பட்ட மருத்துவ விரைவு ஊர்தி (ஆம்புலன்ஸ்), வெறும் 1 மணி நேரம் 54 நிமிடங்களில் (மதியம் 12:22 மணிக்கு) சிறுவாச்சூர் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையைச் சென்றடைந்தது. மருத்துவமனை வந்தடைந்த இதயத்தை, இருதய மற்றும் மார்பு ரத்த நாள அறுவை சிகிச்சைத் துறைத் தலைவர் டாக்டர் ஆஷிக் நிஹ்மத்துல்லா தலைமையிலான மருத்துவக் குழுவினர் வெற்றிகரமாக நோயாளிக்குப் பொருத்தினார்கள்.
சரியான நேரத்தில் பசுமை வழித்தடம் அமைத்துக் கொடுத்த காவல்துறையினருக்கும், வெற்றிகரமாக அறுவைச் சிகிச்சை செய்து முடித்த மருத்துவக் குழுவினருக்கும் பொதுமக்கள் மற்றும் நோயாளியின் உறவினர்கள் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.
