செங்கல்பட்டு, செப். 3- செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே பெருங்கருணை கிராமத்தில் மலையின் மீது பால தண்டாயுதபாணி கோவில் அமைந்துள்ளது. சென்னையில் உள்ள வடபழனி முருகன் கோயில் மற்றும் பழனியில் உள்ள முருகன் கோயிலுக்கு நடுவில் இருப்பதால் இந்தக் கோயிலை முருக பக்தர்கள் நடுபழனி முருகன் கோயில் என்று அழைக்கின்றனர்.
இந்தக் கோயிலில் மரகதத்தால் ஆன மூலவர் முருகன் சிலை இருந்தது. இந்த நிலையில், நேற்று இரவு (2.9.2026) அடையாளம் தெரியாத சிலர் கோயிலின் பூட்டை உடைத்துக் கருவறையில் இருந்த சுமார் 2 அடி உயர மரகதத்தினால் ஆன முருகன் சிலையை திருடிச் சென்றுள்ளனர்.
இதையடுத்துக் கோயில் தரப்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப் பட்டது. அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், முருகன் சிலையைத் திருடிச் சென்ற நபர்கள் குறித்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.
திருடுபோன முருகன் சிலையின் மதிப்பு பல லட்சம் ரூபாய் முதல் கோடிகள் வரை இருக்கும் என கூறப்படுகிறது. முருகன் கோயிலில் மரகதத்தினால் ஆன முருகன் சிலை திருடப்பட்டிருப்பது அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு அருகே பெருங்கருணை கிராமத்தில் மரகத முருகன் சிலை திருட்டு!
Leave a Comment
